tamilnadu

img

வடிந்த துயரமும் - வடியாத வெள்ளமும்!

சென்னை, நவ.2- செ. கவாஸ்கர் சென்னை மாநகராட்சி 200 வார்டுகளை கொண்டது. 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாநகரத்தில் 1894 கி.மீ. நீளத்திற்கு மழை நீர் வடிகால் கட்டமைப்புகளையும், 30 கால்வாய்களையும் கொண்டுள்ளது. இந்த மழைநீர் கட்டமைப்பு மற்றும் கால்வாய்களின் வழியாக வரும் வெள்ளம், பொதுப்பணித்துறை பராமரிக்கும் பக்கிங்காம் கால்வாய், அடையாறு ஆறு, கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு வாயிலாக கடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. 2011-21 வரையிலான 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை. இதனால், 2021ம் ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையில் சென்னை மாநகரம் மற்றும் புறநகர்ப்பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. 15 நாட்களுக்கும் மேலாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், திமுக அரசு திருப்புகழ் இ.ஆ.ப தலைமையில் குழு ஒன்றை  அமைத்தது. அந்தக்குழு, சென்னை நகரின் வடிகால்வாய் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து அறிக்கையை அரசுக்கு அளித்தது. அதனடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு, கடந்த 8 மாதங்களாக ‘மாரத்தான்’ முறையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி தொடங்கி நடந்தது. ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டம், வெள்ள நிவாரண நிதி, உட்கட்டமைப்பு நிதி என பல பெயர்களில் 710 கோடி ரூபாய் செலவில், 220 கி.மீ. நீளத்திற்கு புதிய மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அதில், 157 கி.மீ.நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் விபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகளில் சிங்காரச் சென்னை திட்டம் மற்றும் வெள்ள நிவாரண நிதியின் கீழ் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 97 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டன. ஒட்டுமொத்த திட்டப்பணிகளில் 75 விழுக்காடு முடிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் பணிகள், மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக பல இடங்களில் பணிகள் தொடங்கப்படவில்லை. சில இடங்களில் கால்வாய் பணிகள் முடிக்கப்படாமலும், கால்வாய்களுக்கு இடையே இணைப்பு கொடுக்கப்படாமலும் உள்ளன. இந்த கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு இணையாக ஏற்கெனவே உள்ள 1305 கி.மீ. மழைநீர் கால்வாய்களை தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

வடகிழக்கு பருவமழை

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை அக்.29 அன்று தொடங்கியது. அக்.31 காலை 8.30 மணி முதல் நவ.1 மாலை 3 மணி வரை இடைவிடாது 13.3செ.மீ. மழை பொழிந்தது. நவ.2 காலை வரை 20.5 செ.மீ. பொழிந்துள்ளது. (கடந்தாண்டு அதிகபட்சமாக நவ.6-7 தேதிகளில் 12.5 செ.மீ. மழை பெய்தது) மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெற்ற இடங்களில் கடந்த காலத்தை போல் மழை வெள்ளம் தேங்காமல் வடிந்து சென்றுள்ளது. பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சில இடங்கள், பணி மேற்கொள்ளப்படாத பல பகுதிகள், பணிகள் முடிந்த ஒன்றிரண்டு இடங்களில் வெள்ளம் தேங்கியது. கடந்தாண்டு 700 இடங்களில் வெள்ளம் தேங்கிய நிலையில், தற்போது 50க்கும் குறைவான இடங்களில் மட்டுமே நீர் தேங்கியது. குறிப்பாக ராயப்பேட்டை, மெட்ரோ ரயில் பணி நடைபெறும் வடபழனி, ஜவகர்லால் நேரு 100 அடி சாலை, ராயப்பேட்டை, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் மழை வெள்ளம் தேங்கி, சில மணி நேரங்களில் சீராக வடிந்தது.

கடந்த பருவ மழையின்போது வெள்ளத்தை வெளியேற்ற 1200 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டன. இந்தாண்டு வெள்ளம் தேங்கும் என கணிக்கப்பட்ட பகுதிகளில் 400 மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருந்தனர். இதில் 160 மோட்டர்களை பயன்படுத்தி வெள்ளம் வெளியேற்றப்பட்டு வருகிறது. 19 ஆயிரத்து 500 துப்புரவு பணியாளர்கள், 2 ஆயிரம் வெள்ளத்தடுப்பு பணியாளர்களில் வெள்ள தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் காரணமாக கடும் வெள்ள பாதிப்பு இன்றி கணிசமான பகுதிகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டுள்ளன. இருப்பினும் வில்லிவாக்கம், துறைமுகம், எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளிலும், பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தேங்கிய வெள்ளம் வடியாமல் உள்ளது. கணேசபுரம், ரங்கராஜபுரம், வாகன சுரங்க பாலங்கள் நிரம்பியதால் அவை மூடப்பட்டன. வடசென்னையில் பல பகுதிகளில் தேங்கிய வெள்ளம் வடியாமல் உள்ளது.  மழைக்காலங்களில் எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கமாக வெள்ளம் தேங்கும்; இந்த ஆண்டு தேங்கவில்லை. இதனால் வழக்கமான வேகத்தில் ரயில்களை இயக்கி வருவதாகவும், எஞ்சிய ரயில் நிலையங்களிலும் இதுபோன்ற பணி மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் சென்னை ரயில் கோட்ட மேலாளர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, வட சென்னையில் மழை நீர் வடியாமல் உள்ள பகுதிகள், ஓட்டேரி நல்லா கால்வாய், பெரம்பூர் பிரதான சாலை, திருவிக நகர், கொளத்தூர் ஆகிய பகுதிகளை அமைச்சர்கள், மேயர், அதிகாரிகள் ஆய்வு செய்து வெள்ளத்தை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளனர். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் 3 ஆயிரத்து 220 கோடியில் 769 கி.மீ. நீளத்திற்கும், ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியின் கீழ் கோவளம் வடிநில பகுதிகளில் 1,714 கோடியில் 360 கி.மீ. நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை 2024ம் ஆண்டில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப்பணிகள் முடிந்து, மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்தால்தான் மழை வெள்ளத்திலிருந்து சென்னை நகரம் விடுபட வாய்ப்பு உள்ளது.