திண்டுக்கல், அக்.28- அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வைத்து கொண்டாடுவார்கள். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டியில் தயாரிக்கப்படும் பால்பன் ஏழை எளியோர்களின் ஒவ்வொரு இல்லங்களிலும் தவிர்க்க முடியாத இனிப்பு வகையாக மாறி வருகிறது. இது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு தயாரிக்கப்படும் பால்பன் எந்தவிதமான ரசாயனங்களும் இன்றி மிகவும் சுவை மிகுந்ததாகவும், மிருதுவாகவும் 5 ரூபாயில் கிடைப்பதால் திண்டுக்கல், மதுரை, தேனி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். தீபாவளி பண்டிகையில் படையலுக்கு முன்பு ஒரு காலத்தில் இட்லி, அதிரசம், முறுக்கு, ரவா உருண்டை உளுந்த வடை, சுழியம் ஆகிய தின்பண்டங்களை வீட்டிலேயே தயார் செய்த நிலை மாறி, தற்போது கடைகளில் விற்பனை செய்யக்கூடிய லட்டு, மைசூர் பாக், குலோப்ஜாம், சோன் பப்படி என பலகாரங்களை மக்கள் வாங்குகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோபால்பட்டியில் தயாரிக்கப்படும் விலை குறைவான அறுசுவை மிகுந்த பால்பன், இப்பகுதி மக்களின் தீபாவளி பலகாரமாக முக்கிய அங்கம் வகிக்கிறது. இதனால் இப்பகுதியில் பால்பன் பணிகளில் தொழிலாளர்கள் இரவு, பகலாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப் பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களின் தீபாவளி பலகாரமாக பால்பன், பணியாரம் தற்போதும் இடம் பெற்றிருப்பது அனைவரையும் பெருமிதம் கொள்ள செய்கிறது.