tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கரூரில் மாவட்ட சிலம்பப் போட்டி 

கரூர், மே 19-  கரூரில், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்றது. போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. கரூர் மாவட்ட சிலம்பாட்டக் கழகம் மற்றும் கிச்சாஸ் மார்சியலார்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், கரூரில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி காந்திகிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. போட்டிக்கு மாவட்ட சிலம்பாட்டக் கழக தலைவர் ஏ.ஆர். மலையப்பசாமி தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் எம். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றுப் பேசினார்.  போட்டியில் 5, 10, 15, 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மொத்தம் 200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியில் திறன் வெளிப்படுத்தலில் தனிப்பிரிவு, குழு போட்டிகள் நடைபெற்றன.  வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில் முதலிடம் பெறுவோர், மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.  லார்ட்ஸ்பார்க் பள்ளி முதல்வர் பாலகிருஷ்ணன், விளையாட்டு வளர்ச்சிக் கழகத்தின் வீரதிருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆட்சியரகத்தில்  தீக்குளிக்க முயன்ற  ஓய்வு பெற்ற கூட்டுறவு  ஊழியர் மீட்பு

தஞ்சாவூர், மே 19-  ஓராண்டாகியும் ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கவில்லை எனக் கூறி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில், திங்களன்று தீக்குளிக்க முயன்ற ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க ஊழியரை, காவல் துறையினர் மீட்டனர். தஞ்சாவூர் அருகே, திட்டை பகுதி தாளக்குடியைச் சேர்ந்தவர் ஆர். கண்ணன் (61). இவர் திட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திலும், பின்னர் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியிலும் எழுத்தராகப் பணியாற்றி 2024, மார்ச் 31 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இவர் ஓய்வூதிய பணப்பலன்களை வழங்கக் கோரி, உயர் அலுவலர்களிடம் பல முறை மனு அளித்தாராம். ஆனால், இதுவரை ஓய்வூதியப் பலப்பலன்கள் கிடைக்கவில்லை.  இதனால் மனமுடைந்த அவர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தார்.  பின்னர், அரங்கத்துக்கு வெளியே தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டார்.  அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரை மீட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.