குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, ஜுன் 2- புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் முழுவதும் நிலவிவரும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், திங்கள்கிழமை விராலிமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் என். மகாலிங்கம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர். சுப்பையா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி. ஜீவானந்தம், கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆனந்த், இருதயம், சிவக்குமார், நகரச் செயலாளர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் பேசினர். விராலிமலை ஒன்றியம் முழுவதும் நிலவிவரும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விராலிமலை ஊராட்சியில் கழிவு நீர் வாய்க்காலை சரிசெய்து, விவசாய நிலத்தில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.