புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை காவல்துறையை கண்டித்து சிபிஎம் சாலை மறியல்
ஊரை விட்டு ஒதுக்கி வைத்து இறுதி நிகழ்வில் பங்கேற்க விடாமல் கொடுமை
பொன்னமராவதி, ஏப்.24- பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாச்சம்மை(55). இவருக்கு மாற்றுத்திறனாளியான கணவர் பிரம்மன் இரண்டு மகன்கள் உள்ளனர். கட்டடத் தொழிலாளியான இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேறு சமூகத்தைச் சேர்ந்த மேஸ்திரியுடன் கட்டட வேலைக்கு சென்றதால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார். இந்நிலையில் இவரது தயார் மற்றும் அண்ணன் மேற்கண்ட கிராமத்தில் இறந்தபோது இறுதி நிகழ்வில் பங்கேற்று ‘முறை செய்தல்’ நிகழ்வுக்கு அனுமதிக்கப்படவில்லை, மேலும் அந்த ஊரில் இவரை போல பாதிக்கப்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டு புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் பொன்னமராவதி வட்டாட்சியர் முன்னிலையில் நான்கு முறைக்கும் மேற்பட்ட சமாதான கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அனைத்து கூட்டங்களிலும் மேற்கண்ட நிகழ்வு இனி நடைபெறாது ‘கட்டமொய்’ உள்ளிட்ட அனைத்து வரிகளும் இவர்களிடம் வாங்கப்படும். மேலும், அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்கலாம் என்கிற முடிவு எடுக்கப்பட்ட நிலையில், மேற்கண்ட கிராமத்தில் நாச்சம்மையின் தகப்பனார் பெரிய பையன்(80) புதன்கிழமை மாலை இறந்தார். அவரின் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்று ஊர் வழக்கப்படி மூத்த மகளான நாச்சம்மை தான் கோடி போடுதல், பானை உடைத்தல் உள்ளிட்ட சடங்குகள் செய்ய அனுமதிக்க வேண்டும். என ஊர் மக்ககளிடமும், வருவாய் துறை மற்றும் காவல் துறையிலும் முறையிட்ட நிலையில், சிபிஎம் கட்சியும் இதைத் தொடர்ந்து வலியுறுத்தியது. இந்நிலையில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட காரணத்தால் நாச்சமைக்கு பதிலாக அவர் தங்கையை வைத்து முறை செய்து இறுதி சடங்கை செய்தனர். இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து நீதியை நிலை நிறுத்தாத வருவாய்த்துறை மற்றும் காவல் துறையைக் கண்டித்து, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் தலைமையில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமார், மதியரசி, பாண்டியன், லதா, பாஸ்கரன், ராமசாமி, பாண்டியன் உள்ளிட்ட சிபிஎம் நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட நாச்சம்மை, அவரது கணவர் பிரம்மன், இவர்களைப் போல ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட அதே ஊரைச் சேர்ந்த குமார், அவரின் மனைவி ராஜாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல் அறிந்து போராட்ட இடத்திற்கு வந்த காவல் துனைகண்காணிப்பாளர் கண்ணன், வட்டாட்சியர் சாந்தா, காவல் ஆய்வாளர் பத்மா உள்ளிட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் நாச்சமையை இன்று வரை ஊரை விட்டு தள்ளி வைத்து அவரது தகப்பனாருக்கு இறுதிச்சடங்கு முறை செய்தல் நிகழ்வு செய்யவிடாமல் தடுத்து செயல்பட்ட அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.