அந்தமான் தமிழர் சங்கம் சார்பில் உலக தாய்மொழி தினவிழா
சிபிஎம் தலைவர் எஸ்.பி.காளைராஜனின் நூல் வெளியீடு
சர்வதேச தாய்மொழி தினம் பிப்ரவரி 21ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்த தாய்மொழி தினத்தினை முன்னிட்டு அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேரில் உள்ள அந்தமான் தமிழர் சங்க அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தமான் தமிழர் சங்கத்தின் தலைவர் எல்.மூர்த்தி இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் டி.அய்யப்பன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.சந்திரசூடன் ஆகிய இருவரும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை சூட்டும் நிகழ்வு மூலம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். வனிதா முருகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
கவிதை எழுத்தணியும் கணினியும்
தொடர்ந்து சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பி.காளைராஜன் எழுதிய “கவிதை எழுத்தணியும் கணினியும் (தமிழ் கவிதையின் இலக்கணத்தை கணினி மொழியுடன் இணைத்து ஆய்வு செய்யும் நூல்)” என்ற புத்தகம் வெளி யிடப்பட்டது. தமிழ்செல்வம் மற்றும் ஆர். கோபாலன் ஆகியோர் புத்தகத்தின் உள்ளடக்கங்க ளைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை வழங்கினர். புத்தகத்தை வெளியிடுவதில் உதவிய அந்தமான் தமிழர் சங்கம், பல்வேறு தமிழ் அமைப்புகள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் என அனைவருக்கும் எஸ்.பி.காளைராஜன் நன்றி தெரிவித்தார். என்.பாலகிருஷ்ணன், கே.ராஜ்மோகன், முத்துக்கிருஷ்ணன், சக்கரத்தாய், அழகர்சாமி, ஆர்.முருகன், டி.சத்தியமூர்த்தி மற்றும் ஜே.திருப்பதி உள்ளிட்ட அந்தமான் தமிழர் சங்கத்தின் பணியாளர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் உரையாற்றினார்கள். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் தங்கள் நடன நிகழ்வுகள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
பிஎஸ்என்எல் அதிகாரி
“கவிதை எழுத்தணியும் கணினியும்” என்ற நூலை எழுதி வெளியிட்ட எஸ்.பி.காளைராஜன் போர்ட் பிளேயரில் உள்ள அரசு கல்லூரியில் (தற்போது ஜேஎன்ஆர்எம்) பிஎஸ்சி பட்டம் பெற்றவர். 1982இல் பிஎஸ்என்எல்-இல் இணைந்து ஜேடிஓ (JTO) ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றிய போதே தொழிற்சங்கத்தில் தீவிரமாக செயல்பட்டவர். தற்போது பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கத்தின் சர்க்கிள் செயலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.