மதுரை மக்களின் மனம் கவரும் சிபிஎம் மாநாட்டு கலை வடிவங்கள்!
ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் புதன்கிழமையன்று துவங்குவதையொட்டி மாநாட்டு அரங்க முகப்பிலும், மதுரையின் பல்வேறு இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள கலை வடிவங்களுடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகள், மதுரை மாநகர மக்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டைப் பெற்றுள்ளன. மாநாடு நடைபெறும் மதுரை தமுக்கம் மைதானம் கூட்ட அரங்க நுழைவாயிலில் உலக கம்யூனிஸ்ட் இயக்க மூலவர்களாக விளங்கும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகிய நால்வரது ஓவியங்களும், மதுரை யானை மலையின் பின்னணியுடன் வரையப்பட்டு, தோரண வாயில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு மதுரை மாநகரின் தொன்மை நிறைந்த வரலாற்றுச் சிறப்பையும், உலகம் முழுவதும் வாழும் மக்கள் எல்லோருக்கும் எல்லா வளமும் கிடைத்திடச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் உருவான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சிறப்பையும் ஒருசேரக் காட்சிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இதுபோல, மாநாட்டு அரங்கிற்கு வெளியே, கோரிப்பாளையம் பகுதியில் (அமெரிக்கன் கல்லூரி அருகில்) காரல் மார்க்ஸின் பத்தடி உயரச் சிலை, அவர் 177 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையைக் கையில் ஏந்தியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக மதுரையிலும், கம்யூனிஸ்ட் கட்சியும், தொழிற்சங்க இயக்கமும், விவசாயிகள் சங்கங்களும் நடத்திய போராட்டங்களை விளக்கும் வகையிலும், கம்யூனிஸ்ட் தலைவர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையிலும் பல சிற்ப வேலைப்பாடுகளும், தோரணங்களும் மதுரை மாநகரின் பல்வேறு இடங்களிலும், குறிப்பாக, பெரியார் நிலையம், சிம்மக்கல், அரசடி, பைபாஸ் ரோடு, வில்லாபுரம், அவனியாபுரம், ஜெய்ஹிந்த்புரம், பைகாரா, புதூர், தெப்பக்குளம், நாகமலை புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை நகரம் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் செங்கொடிகள், தோரணங்களுடன் மாநாட்டை விளம்பரப்படுத்தும் இப்படிப்பட்ட கலை நுணுக்க வடிவங்கள் காட்சி தருகின்றன. ஒன்றிய அரசு பின்பற்றும் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளைக் கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஏனைய இடதுசாரிக் கட்சிகளும் முன்வைக்கிற “சோசலிசமே மாற்று” என்னும் முழக்கத்தை விளக்கியும் அமைக்கப்பட்டுள்ள இந்த சிற்ப வேலைப்பாடுகள், குறைந்த பொருட்செலவில், அதே நேரத்தில் பார்க்கும் யாவரையும் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டு, மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.