tamilnadu

img

தருமபுரியில் சிபிஎம் அகில இந்திய மாநாட்டு நிதி அளிப்பு பேரவைக் கூட்டம்

தருமபுரியில் சிபிஎம் அகில இந்திய மாநாட்டு நிதி அளிப்பு பேரவைக் கூட்டம்

ரூ.7.60 லட்சம் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24ஆவது மாநாட்டுக்கான நிதி அளிப்பு பேரவைக் கூட்டம் தருமபுரி, பென்னாகரம், மொரப்பூர் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை அன்று உற்சாகமாக நடைபெற்றது.  அறிவியல் பூர்வமான சிந்தனை களும், மக்கள் நலன் காக்கும் கொள்கைகளும் கொண்ட இடதுசாரி இயக்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாக, தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவு நிதி உதவியை வழங்கி வந்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.நாகராசன், வி.மாதன், ஒன்றியச் செயலாளர் கே.தங்கராசு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மூத்த தலைவர் பி.இளம்பரிதி உட்பட பலர் கலந்து கொண்டனர். சிபிஎம் தருமபுரி மாவட்டக்குழு சார்பில், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட அகில இந்திய மாநாட்டு நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.7,60,860 மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனிடம் மிகுந்த உற்சாகத்துடன் வழங்கப்பட்டது.

வக்பு வாரிய சொத்துக்களை அபகரிக்க முயற்சி; தமிழ் மொழி புறக்கணிப்பு
கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

வக்பு வாரிய சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியும், தமிழ் மொழி புறக்கணிப்பும் ஒன்றிய அரசின் கொள்கையாக உள்ளதாக சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு நிதி அளிப்பு பேரவைக் கூட்டத்தில் பேசிய அவர்,”மார்ச் 10-ஆம் தேதியன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில், வக்பு வாரிய சொத்துக்களை ஒன்றிய அரசு அபகரிக்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமாக 5 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தமிழ்நாடு அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது என நீதிமன்றம் சொல்கிறது. இச்சூழலில் வக்பு வாரிய சொத்துகளை அபகரிப்பது, மத மோதலை ஏற்படுத்தும் வேலையாக அமையும்” என்றார்.

அவர் மேலும், “உலகத்தின் மூத்த மொழி தமிழ். மும்மொழி கொள்கை என்ற அடிப்படையில் தமிழை அழிக்க நினைக்கின்றனர். இருமொழியில் படித்தாலே உலகம் முழுவதும் வேலை செய்ய முடியும். ஏற்கனவே இந்தியா முழுவதும் உள்ள மாநில மொழிகள் அழிந்து வருகிறது. இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிக்கு ஒன்றிய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குகிறது. தமிழ் மொழிக்கு சொற்ப அளவிலான தொகையை (ரூ.8 கோடி) மட்டும் ஒதுக்குகிறது” என்று தெரிவித்தார்.  அதே போன்று”தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்த மறுப்பதால் தமிழ்நாட்டிற்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்க மறுக்கிறது. ஒன்றிய அரசு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். “பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு மோசமான பொருளாதார கொள்கையை மக்கள் மீது திணித்து வருகிறது. அதானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு வரி விதித்தால், ஏழைகள் மீது வரி விதிக்க வேண்டியதில்லை. தற்போது நேரடியாக விவசாய பொருட்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. ஒரு காப்பிக்கு 4 வகையான வரி விதிக்கப்படுகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார். “மாநாட்டில் 15 ஆயிரம் பேர் பங்கேற்கும் செந்தொண்டர் பேரணி நடைபெற உள்ளது. இதற்காக மார்ச் 23-ஆம் தேதியன்று மாவட்டங்கள் தோறும் செந்தொண்டர் பயிற்சி பேரணி நடைபெற உள்ளது. இடதுசாரிகள் தான் உண்மையான மாற்று என்பதை மக்களிடையே எடுத்துச் சொல்ல வேண்டும்” என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.