tamilnadu

img

ரேசன்கடைகளில் பொருள் வழங்க புதுச்சேரி அரசுக்கு அனுமதி

புதுச்சேரி,அக்.30- புதுச்சேரியில் ரேசன் கடைகளை திறந்து பொருட்களை வழங்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.  புதுச்சேரியில் அப்போதைய அரசுக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் ரேசன் கடைகள் மூடப்பட்டன.  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் தருவதற்கு பதிலாக நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை நேரடியாக விநியோகம் செய்வது தொடர்பாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ரவி ரஞ்சன் அனுப்பிய அந்தக் கடிதத்தில்,  “கடந்த 03.10.2024ம் தேதி புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு ரேசன் கடைகளை திறந்து மக்களுக்கு பொருட்களை வழங்கிட அனுமதி கோரி கடிதம் அனுப்பியது. அதை அனுமதிக்கிறோம். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரிசிக்கு பதிலாக பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்கு பதிலாக நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை நேரடியாக விநியோகிக்க புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு முக்கிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். உணவு தானியங்கள் விநியோகத்தில் எங்கும் கசிவு ஏற்படாமல், முழுமையாக பயனாளிகளுக்கே முறையாக விநியோகிக்க வேண்டும். இத்திட்டத்துக்கான நிதியை புதுச்சேரி அரசு நிதி ஆதாரங்களில் இருந்து ஏற்கவேண்டும். இதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் போராட்டம் வெற்றி ரேசன் கடைகளைச் செயல்படுத்தி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தியது. இந்நிலையில் ரேசன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று அமைப்பின் தலைவர்கள் தெரிவித்தனர்.