கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிபிஎம் சார்பில் குடியேறும் போராட்டம்
நாகப்பட்டினம், ஏப்.27- நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகத்தில் சிபிஐஎம் கீழையூர் மேற்கு, கிழக்கு ஒன்றியக் குழு சார்பில் பொதுமக்கள் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு கீழையூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி. வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். இரண்டு மாத காலமாக நூறு நாள் வேலை செய்ததில் ஊதிய பாக்கி வைத்திருப்பதைக் கண்டித்தும், அதை உடனடியாக விடுவித்திடக் கோரியும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நூறு நாள் வேலை உடனடியாக வழங்கிட வேண்டியும் ஒன்றியக்குழு அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. சுப்பிரமணியன், கீழையூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.அப்துல் அஜீஸ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். பிரதம மந்திரி தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக பொதுமக்களிடமிருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கீழ்வேளூர் வட்டாட்சியர், கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அரசு அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததை அடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக சிபிஐஎம் கீழையூர் மேற்கு ஒன்றியக் குழு அலுவலகத்தில் இருந்து பேரணியாக கடைத்தெரு வழியாக வந்து, வட்டார, ஒன்றிய அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.