tamilnadu

img

செங்கடலாக மாறிய சிபிஎம் வேட்பாளர்களின் தொகுதிகள்

வேட்புமனுத் தாக்கல் - பிரச்சாரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 25 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வது நவம்பர் 6 ஆம் தேதி நிறைவு பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 17 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடு கிறார்கள். கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி, இந்த முறை கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. டிசம்பர் 6 ஆம் தேதியன்று முடிவுகள் வெளியாகும்போது, இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கட்சியின் வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகச் செல்வார்கள் என்று கட்சியின் மாநிலக்குழு செயலாளரும், தண்டா ராம்கர் தொகுதி வேட்பாளருமான அம்ரா ராம் கூறியுள்ளார். வேட்பு மனு தாக்கலின்போதும், அதன் பிறகான பிரச்சாரக் கூட்டங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வெற்றியை உறுதி செய்து வருகிறார்கள். குறிப்பாக தண்டா ராம்கர், தோட், ராய்சிங்நகர், பத்ரா, ஸ்ரீதுங்கர்கர், தாராநகர், நோஹர், சிகார் ஆகிய தொகுதிகளில் அனைத்துப் பகுதி மக்களும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் ராஜஸ்தான் மாநிலக்குழு செயலாளரான அம்ரா ராம் போட்டியிடும் தண்டா  ராம்கர் தொகுதியில் வேட்பு மனு தாக்கலின்போதும், அதைத் தொடர்ந்து நடந்த பிரச்சாரங்களிலும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பங்கேற்று வருகிறார். குடும்பம், குடும்பமாகக் கூட்டங்களில் மக்கள் கலந்து கொள்வதை இங்கு காண முடிகிறது. 

வேட்பு மனுவைத் தடுக்க முயற்சி

சுரு மாவட்டம் தாரா நகர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் மத்தியில் செல் வாக்கு பெற்றவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளருமான நிர்மல் குமார் வேட்பு மனு தாக்கல் செய்வதைத் தடுக்க மாநில அரசு முயற்சித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டி, அதில் வழக்குப் பதிவு  செய்து அவரைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்கள். ஆனால், மக்கள் ஆதரவோடு பெருந்திரளாகச் சென்று அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

“ராஜஸ்தான் முழுவதும் இடதுசாரிக் கொள்கை பரவியுள்ளது”  அம்ரா ராம் பேட்டி

இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றின் முதல் மாடி பரபரப்பாகவும் உற்சாகமாகவும் காணப் பட்டது. ஆண்களும், பெண்களுமாக ஒரு குழு வினர் ஒரு அறையில் அமர்ந்து வேலைகளில் மூழ்கியிருந்தார்கள். அந்தச் சிறிய அறை யின் சுவர்களில் கார்ல் மார்க்ஸ் மற்றும் லெனின் உள்ளிட்டோரின் படங்கள் காணப்பட்டன.  அது இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியின் சிகார் மாவட்டக் குழு அலுவலக மாகும். விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனை களை மாவட்ட மட்டத்திலான தலைவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.  தேர்தல் பிரச்சாரத்தின்போது அவற்றை மக்களிடம் எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஆலோசனை நடந்தது. தோழர் அம்ரா ராம் வருகிறார் என்ற வுடன் அனைவரும் அன்றைய பிரச்சாரம் எப்படியிருந்தது என்று கேட்பதில் ஆர்வ மாகினர். 10 x 10 அளவிலான பக்கத்து அறை யில் அம்ரா ராம் சென்றமர்ந்தார்.  அந்த மாவட்ட த்தில் உள்ள தண்டாராம்கர் என்ற தொகுதி வேட்பாளரான அவரின் வருகைக்காகக் காத்திருந்த டைம்ஸ் ஆப் இந்தியா நாளி தழின் நிருபர், வினாக்களைத் தொடுத்தார். இரு பெரிய கட்சிகளுக்கு இடையில் தானே போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலில் பிரச்சாரம் செய்வது கடினமானதுதானே என்று கேட்டபோது, விவசாயிகளும், தொழிலாளர் களும் தொடர்ந்து அமைந்து வந்த அரசாங்கங் களால் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார்கள். எங்களைப் பொறுத்தவரை, நிலத்திற்கான உரிமை, முறையான ஊதியம் மற்றும் விளைபொருளுக்கு சரியான விலை ஆகிய வற்றிற்காக நாங்கள் போராடுகிறோம்.

இதை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள் என்றார். இரு பெரிய கட்சிகளும் அச்சப்படும் வகை யில் ராஜஸ்தானின் மாணவர் இயக்கம் இரு ந்து வருகிறது என்று குறிப்பிட்ட அம்ரா ராம், 1971 முதல் சிகாரில் உள்ள அரசுக் கல்லூரி யில் இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. அதைக் குலை க்கக் கல்லூரியையே மூன்றாகப் பிரித்தனர் என்று கூறினார். அண்மையில் நடைபெற்ற பல்கலைக்கழகத் தேர்தலில், சிகார் மாவட் டத்தில் இந்திய மாணவர் சங்கம் பெரும் வெற்றி பெற்றதையும் அவர்சுட்டிக்காட்டினார். ஷெகாவதி, பிகானிர், அனுமன்கர் மற்றும் ஸ்ரீகங்காநகர் ஆகிய விவசாயிகள் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும்தான் இடதுசாரிகள் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்பதை அம்ரா ராம் ஏற்றுக்கொள்ளவில்லை. இடது சாரிக் கொள்கைகளும், அதன் தலைமையும் ராஜஸ்தான் முழுவதும்  பரவியிருக்கிறது. ஆனால் தேர்தல் வெற்றி என்பது அதிகமாக இல்லை. போதிய அளவு பணம் இல்லை என்பதும், ஏராளமான பணபலத்தைக் கொண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய  கட்சிகளுடன் போட்டியிட வேண்டிய கட்டாயம் இருப்பதும் அதற்குக் காரணங்களாகும்என்றார். கடந்த முறை இரண்டு பேரை சட்ட மன்றத்திற்கு அனுப்ப முடிந்தது என்பதைக் குறிப்பிட்ட அம்ரா ராம், சட்டமன்றத்திற்கு இது வரை இல்லாத எண்ணிக்கையில் உறுப்பி னர்களை அனுப்பி எங்கள் கட்சி சாதனை படை க்கும் என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.