திருநெல்வேலி, மே 12- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சேரன்மகாதேவி, சங்கரன்கோவில், புளியங்குடி உள்ளிட்ட மனோ உறுப்பு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்து திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை கண்டித்து பேராசிரியர்கள் கல்லூரிகளில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாணவர்களும் பேராசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள மனோ கல்லூரி முதல்வர் அறை முன்பு நடைபெற்ற போராட்டத்தின்போது கல்லூரி ஆண்டுவிழாவிற்கு வந்திருந்த மனோ கல்லூரிகளின் இயக்குநர் முனைவர் வெளியப்பன், கல்லூரி முதல்வர் முனைவர் பூவலிங்கம் ஆகியோரை கல்லூரி முதல்வர் அறையில் இருந்து வெளியேறாத வண்ணம் முற்றுகை இட்டனர். இதேபோல், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிகளில் உள்ள கல்லூரிகளிலும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில்,பேராசிரியர்களுடன் சங்கரன்கோவில் வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் உள்ளிருப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாணவர்கள் மறியல்
பணி நீக்கத்தை வாபஸ் பெற கோரி போராடி வரும் பேராசிரியர்களுக்கு ஆதரவாக சங்கரன்கோவில் கல்லூரியில் பயின்று வரும் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலுக்கு கிளை நிர்வாகி மைதீன் தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அருண், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் மாடசாமி உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தகவல் அறிந்து வந்த சங்கரன்கோவில் காவல் ஆய்வாளர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு ஆசிரியர்களோடு உள்ளிருப்புப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.