தோழர் கா.சின்னையா படத்திறப்பு
புதுக்கோட்டை, மே 26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை முன்னாள் மாவட்டச் செயலாளர் கா.சின்னையாவின் மறைவையொட்டி, அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடியில் சனிக்கிழமை படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரிமளம் ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலாளர் ஆர்.வி.ராமையா தலைமை வகித்தார். படத்தைத் திறந்து வைத்து, மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் புகழஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கலைச்செல்வன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வசந்தகுமார், தோழர் கா.சின்னையாவின் மகன் சி. அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிளைச் செயலாளர் சுசி.கணேசன் நன்றி கூறினார்.
பேராவூரணி அருகே கோவில் விழா மேடை திறப்பு
தஞ்சாவூர், மே 26- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சி, வீரக்குடி ஆதிதிராவிடர் தெரு கோவிலில் விழா மேடை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட விழா மேடையை, சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, சீரமைப்பு பணி நடைபெற்று வரும் தர்ம ஊரணியைப் பார்வையிட்டார். மேலும், அதே ஊராட்சியில் பழுதடைந்து பயன்பாடற்ற நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தையும் பார்வையிட்டார். தர்ம ஊரணிக்கு சுற்றுச்சுவரும், புதிய சமுதாயக் கூடம் கட்டித்தரவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். நிகழ்வுகளில், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சோ.நாகேந்திரன், பொறியாளர் ஆர்.ஜி.சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 3 பயனாளிக்கு காதொலி கருவிகளும், 1 பயனாளிக்கு பிரைலி கை கடிகாரமும் மற்றும் 1 பயனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் என மொத்தம் 5 பயனாளிகளுக்கு ரூ.23,355 மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் வழங்கினார்.