தீக்கதிர் ஏட்டுடன் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் பயணித்த தோழர் திண்டுக்கல் அறம் எனப்படும் அறம் வளர்த்த நாதன் அவர்கள் அக்டோபர் 24 திங்களன்று காலமானார். அவரைப் பற்றி தீக்கதிர் வைரவிழா சிறப்பு மலரில் மூத்த எழுத்தாளரும் அவரது மருமகனுமான ஆர்.எஸ்.மணி எழுதியுள்ள உயிரோட்டமான காவியம் இது.
தோழர் ஏ.நல்லசிவனால் பெரிதும் ஈர்க்கப்பட்ட தோழர் அறம், கல்லூரி மாணவனாக இருக்கும் காலத்தில் நெல்லைச் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப் பட்டு, பின்னர் இளம் வயது காரணமாக நீதி மன்றம் தலையிட்டு விடுதலைசெய்யப்பட்டார். 1966 ஆம் ஆண்டு என்று நினைவு. கல்லூரி யில் படித்துக் கொண்டிருந்தேன். அரசுப்பள்ளி ஆசிரியராக ஆசான் அறம் அவர்கள் கழுகுமலை என்ற சிறிய ஊரில் பணியாற்றிக் கொண்டிருந்த காலமது. அக்காலத்தில் தீக்கதிர் ஏடு வாராந்தரியாக வந்து கொண்டிருந்தது. கழுகுமலை சிறிய ஊராக இருந்தாலும் பொதுவுடைமை இயக்கத் தின் மீது பற்றுக்கொண்ட பலதோழர்கள் அங்கிருந்தார்கள். சான்றாக, “ஆயுள் கைதி தோழர் கே.பாலதண்டாயுதத்தை விடுதலை செய்” என்ற வாசகங்கள் ஊரின் எந்த இடத்தி லிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் கழுகு மலையின் குன்றைச் சுற்றிலும் சுண்ணாம்பு நீரில் பெயிண்ட் போல எழுதப்பட்டிருந்தது. அவர் விடுதலையாகி வெளியே வந்த பின்பும் கூட மலையில் பொறிக்கப்பட்ட ஆளுயர எழுத்துக்கள் அழியாமலிருந்த அதிசயத்தை நானும் பார்த்து ரசித்ததுண்டு. ஜனசக்தி ஏட்டினை பழக்கடை ஒன்றிலும் பெட்டிக்கடை ஒன்றிலும் பார்த்ததுண்டு. தீக்கதி ரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அவ்வள வாக மக்கள் மத்தியில்அறிமுகமாகவில்லை. தோழர் அறம் நெல்லைக்கு செல்லும் போதெல்லாம் இளங்கோ ஸ்டோர்ஸ் கடையில் தீக்கதிரை வாங்கி வருவதை வழக்கமாக வைத்திருந்தார். கழுகுமலைக்கும் தீக்கதிரைத் தருவிக்க தீவிரமாக சிந்தித்து அதற்கான திட்டமொன்றைத் தீட்டினார்.
15 கி.மீ. தொலைவிலுள்ள சங்கரன்கோவில் நகரச் செயலாளராக இருந்த தோழர் ஆர்.எஸ்.முப்பிடாதியும் ஆசிரியர் தோழர் அங்கப்பனும் தோழர் அறத்துக்கு நன்கு பரிச்சயமானவர்கள். ஒருநாள் காலை தோழர் முப்பிடாதி சங்கரன் கோவில் பேருந்திலிருந்து இறங்கினார். அவரது ஒரு கையில் மெகாபோன் ( பேட்டரி / மின் ஒலிபெருக்கி இல்லாத அக்காலத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு தெருமுனைப் பிரச்சாரத்துக்குப் பெரிதும் பயன்பட்ட தகரத்தால் உருவாக்கப்பட்ட கருவி); இன்னொரு கையில் பை நிறைய நோட்டீஸ்களும் சிறிய உண்டி யலும் செங்கொடியும். கழுகுமலை ஊரின் பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைபாட்டை யும் நோட்டீசில் இடம்பெறும்வண்ணம் ஒரு வாரம் முன்பே தோழர் அங்கப்பனுக்கு தபாலில் தகவலனுப்பியிருந்தார் தோழர் அறம். சங்கரன் கோவில் அச்சகத்தில் பிழை யின்றி அச்சிட்டு தோழர் முப்பிடாதி வசம் சேர்த்திருந்தார் ஆசிரியர் அங்கப்பன். வந்திறங்கியதும் பட்டணம்பொடி ஒரு சிட்டிகை எடுத்து மூக்கில் உறிஞ்சியவாறே பேருந்துநிறுத்தம் முன்பும் பின்னர் பழ கடை வீதிகளிலும் கணீர்க்குரலில் மெகாபோனில் முழங்கினார் தோழர் முப்பிடாதி. அவரது உரத்த குரல் மலைப் பாறைகளில் மோதி எதிரொலித்தது.
மாலையில் தெருமுனைகளில் பிரச்சாரம் செய்தவாறே மக்கள் குறைகளைக் கேட்டறிந் தார்; அவர்கள் அன்புடன் தந்த காசுகளை உண்டியலில் வாங்கிக் கொண்டார். சோர்வில்லாத முகத்துடன் கம்பீரமான நடை யுடன் இரவில் தோழர் அறத்தைப்பார்த்து கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் தோழர் முப்பிடாதி உற்சாகத்துடன். “தோழர் அறம், கொஞ்ச நாளில் மீண்டும் வருவேன் கட்சிக் கொடியேத்த.. பல தொடர்புகள் கிடைச்சிருக்கு. அதில இரண்டு பேரு டெய்லரு.. மக்கள் காது கொடுத்து கேட்டாங்க.. காசு களை உண்டியல்ல அள்ளிப்போட்டாங்க.. நம்பிக்கையிருக்கு கட்சி கிளை ஆரம்பிக்கும் நாள் தூரத்தில் இல்லை. வரட்டுமா” என்று கூறி விடை பெற்றுக் கொண்டார், அன்று பரிச்சயமான அனுதாபிகள் பெயர்களடங்கிய பட்டியலைக் கொடுத்துவிட்டு. களைப்பின்றி கலகலப்பாக காணப்பட்ட அந்த அதிசயத் தோழரை வழியனுப்ப சென்றேன் உற்சாகம் பொங்க. அடுத்த சில தினங்களில் கட்சிக் கொடி யேற்ற தோழர் முப்பிடாதி வந்தார். டெய்லர் முத்தையா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தோழர் முத்தையா கிளை செயலாளரானார். தீக்கதிர் பத்து சந்தாக்கள் பெறப்பட்டு தபாலில் தருவிக்க ஏற்பாடானது. பணி ஓய்வுக்குப் பின்பு தனக்குக் கிடைத்த அவகாசத்தில்தான் நேசிக்கும் இயக்கத்துக்கும் தீக்கதிருக்கும் ஏதாவது செய்ய முடியுமா என்று எண்ணிக் கொண்டிருந்தபோது, ஆசான் எஸ்.ஏ.பெருமாள், அவரை நேரில் சந்தித்து “தீக்கதிருக்கு மொழிபெயர்ப்புப் பணியினை செய்யலாமே” என்ற ஆலோசனையைக் கூற தோழர் அறம் அவர்களுக்கு அது பிடித்திருந் தது. தீக்கதிர் ஆசிரியராக இருந்த தோழர் வே.மீனாட்சி சுந்தரமும் ஏற்கனவே அதை வலியுறுத்தி வந்ததும் அந்தப் பணியிலிறங்க அவரைத் தூண்டியது.
ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் புலமை பெற்றிருந்த தோழர் அறம், கட்சியின் ஆங்கில ஏடான பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் வந்துள்ள கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்ய முன் வந்தார். பிரண்ட் லைனில் இரு வாரங்களுக்கு ஒரு முறை வரும் தோழர் இ.எம்.எஸ் அவர்களின் கட்டுரைகளை உயிர்ப்புடன் தமிழில் தந்த போது மிகுந்த வரவேற்பு கிடைத்தது; அதில் கிடைத்த உற்சாகம் மேலும் தீவிரமாக அப்பணியில் இறங்கவைத்தது. அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஒரு மணி நேரத்தில் பணியை முடித்து சரிபார்க்க என்னி டம் தந்துவிடுவார். மொழிபெயர்ப்பு என்று தெரியாத வண்ணம் இயல்பான நடையில் அவர் எழுதும் கட்டுரை இரண்டுதினங்கள் தொடர்ந்து வருவதும் உண்டு. சில நேரங்களில் தபாலிலும், பல நேரங்களில் பேருந்தில்பயணித்தும் தனது கட்டுரைகளை தீக்கதிர் அலுவலகத்தில் நேரிலும் கொடுப்பதை வழமையாக வைத்திருந்தார். இதன் காரணமாக தீக்கதிரில் பணிபுரியும் அனைத்துத் தோழர்களுடனும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அலுவலகத் தோழர்களின் குடும்பங்களைப் பற்றியும் அறிந்து வைத்திருந்த அவர், தீக்கதிர் குடும்பத்தின் அங்கமாகவும்உறுப்பினராகவும் ஆகியிருந்தார். நெல்லை மாவட்டத்தில்பிறந்து வளர்ந்து படித்துப் பணியாற்றிய போதும் மொழியாக்கப் பணியினை திண்டுக்கல்லிலிருந்து நீண்ட காலம் செய்து வந்ததால் ‘ திண்டுக்கல் அறம்’ என்று அறியப்பட்டதில் ஆச்சர்யமில்லை. வைரவிழா கொண்டாடும் தீக்கதிர் ஏட்டின் குடும்பத்தில் மூத்த தோழர் திண்டுக்கல் அறம் என்றென்றும் ஓர் அங்கமே.