இந்திய மொழிகளில் ஒன்றும் உலகளவிலான ஆறு செம்மொழிகளில் ஒன்றுமான தமிழ் கணினி தொழில்நுட்பத்தில் தனக்கான இடத்தை மிகச் சிறப்பாக பெற்றுள்ளது. இந்த கணினி தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு நம்முடைய தமிழ் மொழியும் பல்வேறு தளங்களில் தேவையான வடிவங்களில் பலவிதமான மாற்றங்களை பெற்று வருவது சிறப்பினும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. ‘தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்திடல் வேண்டும்’ என்ற பாட்டுக்கொரு புலவன் பாரதியின் கனவை இன்று நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கி றோம். அல்ல அல்ல, நம் மூலமாக கணினி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. தொன் மையில் கல்வெட்டுகளில் எழுதப்பட்டு வந்த நம்முடைய தமிழ் இன்று கணிப்பொறிகளில் எழுதப்பட்டு வருவது தான் இன்றைய காலத் தின் கட்டாயம். கல்லில் இருந்து ஓலைக்குத் தாவி அங்கிருந்து காகிதங்களுக்கு தாவிய தமிழ் இப்போது கணினிக்குள் நுழைந்து மேலும் முன்னேறி நம் கைகளில் உள்ள திறன் பேசிக்குள்ளும் நுழைந்திருப்பது தமிழ் மொழியின் ஆகச் சிறந்த முன்னேறிய நிலை. காலந்தோறும் தமிழ் தன்னைத் தானே புதுப் பித்துக் கொள்கிறது என்பதற்கான சாட்சி. இத னால் ஒட்டுமொத்த தமிழர்களையும் நாம் இணையத்தின் மூலம் இணைத்திருக்கி றோம்.
யூனிகோட் எழுத்துரு
40 வருடங்களுக்கு முன் நம் தமிழை கணிப் பொறியில் உள்ளீடு செய்யும் வசதிகள் இல்லை. 1980 முதல் 1985 வரையான கால கட்டத்தில் தான் முதன்முதலாக இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதன் முதலில் தமிழ் எழுத்துக்களுக்கு ரோமன் எண்களை பொருத்தி அதன் வழியாக தமிழை உள்ளீடு செய்தார்கள். பின் இந்த முறை மிகக் கடினமாக இருந்ததால் தமிழ் தட்டச்சு விசைப்பலகை கணினியிலும் அறிமுகப் படுத்தப்பட்டது. இதன் மூலம் தமிழ் தட்டச்சு தெரிந்தவர்களால் மட்டுமே தமிழை உள்ளீடு செய்ய இயலும். காலப்போக்கில் இதிலும் மாற்றங்கள் கொண்டு வந்து ஆங்கிலத் தட்டச்சு விசைப்பலகையின் வாயிலாகவே தமிழை உள்ளீடு செய்யும் முறையை சில சீர்திருத்தங்களுடன் கொண்டு வந்தார்கள். இதனால் ஆங்கிலத் தட்டச்சு மட்டுமே தெரிந்த வர்கள் கூட தமிழில் உள்ளீடு செய்ய இய லும் என்பதாக தமிழில் தட்டச்சு செய்யும் முறை சுலபமானது. காலத்திற்கு ஏற்ப இதி லும் மாற்றம் வந்து தற்போது யூனிகோட் எழுத்துருவினால் உலக மக்கள் அனைவரை யும் தமிழால் இணைத்திருக்கிறார்கள். யூனி கோட் எழுத்துரு என்பது உலக மக்கள் அனை வராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன்பொருட்டு எந்த ஒரு போட்டிக்கும் யூனி கோடு எழுத்துருவில் அனுப்பி வைக்க வேண்டும் என்று போட்டி நடத்தும் அமைப்பு கள் அறிவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தற்போது இது அனைவருக்கும் எளிதாக வும் இருக்கிறது. இந்த தட்டச்சு முறைகளில் கூட மாற்றம் நிகழ்ந்து தற்போது குரல் கட்டளைகளின் மூலம் நம்முடைய கணினித் திரையில் வார்த்தைகள் வந்து விழும் அழகை காண முடிகிறது. இதன் மூலம் பதிப்பகத் துறை யில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். சாமானியர்களுக்குக் கூட இது ஒரு வரப்பிரசாதமாக, நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு காரணியாக விளங்கு கிறது. உலகத்தில் பல மொழிகள் கணினியில் இடம் பெற்று விட்டன. விடுபட்டுப் போன சிற்சில மொழிகளை உள்ளீடு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. இதில் உலக மொழியாக அங்கீக ரிக்கப்பட்டுள்ள ஆங்கிலம் தான் இணை யத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ள மொழி. இந்திய அளவில் இந்திக்கு அடுத்த படியாக நம்முடைய தமிழ் தான் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மொழி என்ற மிகப் பெரிய பெருமையை பெற்றுள் ளது. இதற்கு காரணம் நம்முடைய எண்ணற்ற தமிழ் ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான முயற்சிகள் தான்.
நடந்து செல்பவர் ரயிலில் செய்வது போல்...
தமிழை கணினியில் ஏற்றச் செய்வதற் கான வழிமுறைகளை பல்வேறு தளங்களில் ஆய்ந்து அறிந்து ஆரம்ப நிலையில் ஏற்பட்ட தடங்கல்களையும் தடுமாற்றத்தையும் தவிர்த்து தமிழ் தட்டச்சை ஒரு சிறப்பான நிலைக்கு கொண்டு வந்து கொடுத்த பெருமக னார்களால் நம் தமிழ் இன்னும் இன்னும் வளம் பெற்று பலம் பெற்றிருக்கிறது. நடந்து சென்று கொண்டிருந்த நபர் திடீ ரென ஒரு ரயில் வண்டியில் ஏறி பயணம் செய்தால் அவருடைய பயண வேகம் எப்படி இருக்கும்? பயணக் களைப்பு இல்லாமல் குறைந்த நேரத்தில் மிக அதிக தூரம் செல்ல முடியும் இல்லையா?! அப்படித்தான் நம் தமிழும் கணினியில் ஏறி பயணம் செய்யத் துவங்கிய பின் அதனுடைய வேகம் புலிப்பாய்ச்சலுக்கு நிகராகப் பாய்ந்தோடிக் கொண்டே இருக்கிறது. தற்போது செயற்கை நுண்ணறிவும் இந்த தொழில்நுட்பத்துடன் இணைந்து நம் மொழியை அதன் உயிர்ப்புத் தன்மையை அதிக அளவில் கூட்டி உள் ளது. இன்று தமிழில் தமிழ் இணைய நூலகம் எனும் மின் நூலகம் சிறப்பாக வடிவமைக் கப்பட்டு பல கோடி மக்களால் பயன்படுத் தப்படுகின்றது. இந்தத் தமிழ் இணைய நூல கத்தில் லட்சக்கணக்கான நூல்கள் இடம் பெற்றிருக்கின்றன. நம்முடைய விரலசை வில் ஒரு நூலை நாம் தேடிப் பிடித்து அதை பதிவிறக்கம் செய்து உடனே படித்தும் தெளிய முடியும். எண்ணற்ற மின் இதழ்கள், மின்வார இதழ்கள் இந்த கணினி தொழில் நுட்பத்தால் சாத்தியப்பட்டிருக்கிறது.
மற்றொரு மைல்கல்
மொழிபெயர்ப்பில் மற்றும் ஒரு மைல் கல்லை நாம் எட்டிப் பிடித்து இருக்கிறோம். பதிப்பகத் துறையில் மிகப்பெரிய புரட்சியை இந்த செயற்கை நுண்ணறிவு மொழி பெயர்ப்பு தளம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கி றது. மாதக்கணக்கில் எடுத்துக் கொள்ளும் மொழிபெயர்ப்புகள் தற்போது சில நாட்க ளில் நிறைவடைகிறது. இறுதியாக மனித உழைப்பில் அந்த மொழிபெயர்ப்பு படைப்பை செம்மைப்படுத்தித்தான் ஆக வேண்டும் என்றாலும் நேர வித்தியாசம் நமக்கு ஒரு வரப்பிரசாதம். மொழி தெரியாத ஒரு மாநிலத்துக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ நாம் செல் லும்போது அங்கு இருக்கக்கூடிய பலகை யில் எழுதப்பட்டிருக்கும் தகவலை நம் அலை பேசி வாயிலாக புகைப்படம் எடுத்து அதில் மொழிபெயர்ப்பு எனும் பொத்தானை அழுத்தினால் போதும் நம்முடைய தாய் மொழியில் அழகாக அது மொழி பெயர்த்து கொடுத்து விடும். இதனால் அந்த தகவலை உடனே நம் தாய் மொழியில் பெற்று தெளிந்து கொள்ள முடி யும். இன்று உலகம் முழுக்க பயணிக்க மொழி ஒரு தடை யாக இல்லை எனும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது எந்த ஒரு தனி மனிதனுக்கும் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இது தமிழை நாம் கணினியில் உள்ளீடு செய்ததால் வந்த சௌகரியம். பொதுவாக அறிவியல் கண்டுபிடிக்கிறது; தொழில்நுட் பம் தான் மக்களின் பயன்பாட்டுக்கு அவற்றைக் கொண்டு வருகிறது. அது மட்டுமல்ல இன்று தமிழை கற்றுக் கொள்ள ஏகப்பட்ட காணொலிகள் இணையத்தில் கிடைக்கி றது. இதன் மூலம் ஏராளமான மென்பொருள்கள் பற்றிய பார்வை நமக்கு புரிபடும். எழுதிகள், எழுத்துரு மாற்றிகள், பிழை திருத்திகள் என எக்கச்சக்கமான தகவல்கள் தற்போது இணையவெளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு அம்சத்திலும் தமிழ் சார்ந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு இணைய விளை யாட்டுக்கள் சக்கை போடு போடுகின்றன. இது ஒரு வகை யில் கலாச்சார மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கிறது என்றே சொல்லலாம். அது மட்டுமல்ல செய்திகள், அகராதி, ஜோதிடம் போன்ற பயன்பாடுகள் கணினித் தமிழ் மூலம் பரவலாக அதிகரித்துள்ளன. கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி போன்ற நம் கட்டளை களுக்கு அடி பணியும் கருவிகள் இன்று தமிழில் குரல் கட்டளைகளை ஏற்கின்றன. தமிழும் கணினியும் கை கோர்ப்பதன் மூலம் இது அத்தனையும் சாத்தியமாகி இருக்கிறது. சவால் நிறைந்த ஒரு சாமானியனின் வாழ்க்கையில் மயிலிறகு வருடலாய் சுகம் சேர்க்கிறது.
தமிழில் செயல்படுங்கள்
அடுத்து வரக்கூடிய இளம் தலைமுறையினருக்கு வைக்கும் வேண்டுகோள் என்னவெனில் நம் திறன் பேசி யிலிருந்து பதியப்படும் பிறந்தநாள், திருமண நாள், காலை வணக்கம் போன்ற வாழ்த்துக்களை தமிழிலேயே அனுப்புங்கள் என்பது தான். இதனால் தினசரி பயன் பாட்டில் நம் தமிழ் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டி ருக்கும். பயனாளர்களின் பெயரை தமிழிலே கூட பதிவு செய்து கொள்ளலாம். ஏடிஎம் இயந்திரங்களில் கூட தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிகள் மூலம் உள்ளீடு செய்யக் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழர்களாகிய நாம் ஆங்கிலத்தைத் தவிர்த்து தமிழிலேயே கட்டளை களை உள்ளீடு செய்து பணம் பெறுவதன் மூலம் தமிழ் மொழியின் மின்னணுப் பயன்பாடு சிறப்பாக இருக்கும். தற்போது ஆங்கிலம் மற்றும் தமிழ் பயன்பாடு 80 : 20 என்னும் நிலையில் இருந்து 20 : 80 எனும் நிலைக்கு வரும் போது தமிழ் ஒரு தகர்க்க முடியாத சக்தியாக விஸ்வரூபம் எடுத்து உயர்ந்து நிற்கும். அந்த நிலையை நாம் எட்டுவது தான், தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த உ.வே.சாமிநாதையர் போன்ற பெருமக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கட னாக இருக்க முடியும். நமக்கு முன்பிருந்த நம் முன்னோர்கள் அடுத்த தலை முறையினராகிய நம்மிடம் நம் தமிழ் மொழியை கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்கள். நாம் அதை நல்ல முறை யில் நமக்கு அடுத்த தலைமுறைகளுக்கு கடத்த வேண்டும். இது நம் அனைவரின் கைகளிலும் உள்ளது. ஊர் கூடி தேர் இழுப்பது போல நாம் அனைவரும் முனைப்பாக இருந்து தமிழை கணினியில் பயன்படுத்துவோம். இதனால் நம் தமிழ் வளர்ச்சிப் பாதையில் பீடு நடை போடும் என்பதில் சந்தேகமில்லை.