போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கைகள் திடீரென்று குவியத் தொடங்கும். பலரும், “ஆஹா. நல்ல வாய்ப்புகள்” என்று புளகாங்கிதம் அடைவார்கள். வாட்ஸ் அப்பிலும் இந்த அறிவிக்கைகள் வந்து குவியும். உங்களுக்கு இல்லை என்றாலும் யாருக்காவது உதவும் என்று பிறருக்கு நம்மை அனுப்பச் சொல்வார்கள். இளைஞர்களுக்கு ஆலோசனைகள் வாரி, வாரி இறைக்கப்படும். இங்க பார்... மொத்தம் 40 ஆயிரம் வேலை இருக்கு... இதுல ஒண்ணு கிடைக்காதா.. முயற்சி பண்னுனா கிடைச்சுரும்.. என்பார்கள். சரி.. ஒரு கை பாத்துரலாம் என்று அவர்களும் களத்தில் இறங்குவார்கள். ஒவ்வொரு இணையதளமாகச் சென்று அறிவிக்கைகளை இறக்கிப் பார்ப்பார்கள். 40 ஆயிரம் பணியிடங்கள் என்பது 13 அறிவிக்கைகளில் இருக்கும். அதிலும் பல நாடு முழுமையிலான பணியிடங்களாகவும் இருக்கும். விண்ணப்பிக்க தலா 600 முதல் 800 வரையில் செலவாகும். மிரண்டு போய் நிற்பார்கள். வெளியில், இந்தக் காலத்துப் புள்ளைங்க இப்புடித்தான்.. நாங்கள்ல்லாம் அந்தக் காலத்துலயே என்ற வசனம் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும். தேர்வு முடிவுகள் இன்னும் மிரட்சியை ஏற்படுத்தும். ஒரு நபர் ஐந்து தேர்வில் வெற்றி பெற்றிருப்பார். ஒரு மதிப்பெண்ணில் மற்றொருவர் ஐந்து வேலைகளை இழந்திருப்பார். இது நமது மனித வள மேம்பாட்டுத்துறையினரின் சித்து வேலை. ஐந்து வேலை கிடைத்தவர் ஒரு வேலையில்தான் சேருவார். எஞ்சிய நான்கு வேலைகளும் நிரப்பப்படாமலேயே இருக்கும். அடுத்த தேர்வில் அதைச் சேர்ப்பார்கள். இந்தக் கதை தொடரும். ஏதாவது மையத்திற்குச் சென்றால் நம்மைத் தேற்றி விடுவார்கள் என்று நம்பிப் பலரும் வரிசையில் நின்று பணம் கட்டி வகுப்பில் நல்ல இடமாகப் பார்த்து அமர்ந்து விடுவார்கள். இப்படிச் சென்ற ஒரு தேர்வரின் நிலைக்கு இக்நோபல் பரிசுதான் வழங்க வேண்டும். (முதலில் சிரிக்க வைத்து, பின்னர் சிந்திக்க வைக்கும் சம்பவத்திற்கு இந்தப் பரிசை வழங்குகிறார்கள்.) எட்டு எட்டா நாலு எட்டு வெச்சா.. சார்...
வகுப்பிற்கு அன்றுதான் புதிதாக வந்த அந்தத் தேர்வர் கைதூக்கியவாறே அழைத்தார். சில ஆசிரியர்களுக்கு/வழிகாட்டிகளுக்கு யாராவது குறுக்கிட்டால் அடுத்த வரிகளை, வார்த்தைகளை மறந்து விடுவார்கள். இதனாலேயே சிலர், ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், எல்லாவற்றையும் நோட் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள் என்று முதலிலேயே சொல்லி விடுவார்கள். என்ன என்றார் ஆசிரியர். ஏதாவது ஷார்ட் கட்(குறுக்கு வழி) சொல்லித் தருவீங்களா..? நான் புவியியல் ஆசிரியர்.. அடுத்த வகுப்பு கணிதம்.. அதற்கான ஆசிரியர் சொல்லித் தருவார்.. பரவாயில்ல, சார்... நீங்களும் ஏதாவது ஒண்ணு சொல்லிக் குடுங்க.. யோசித்த ஆசிரியர், எவரெஸ்ட்டோட உயரம் என்ன என்று கேட்டார். தெரியாது, சார்.. எட்டு, எட்டா நாலு எட்டு வெச்சா எவரெஸ்டுல ஏறிடலாம்.. சூப்பர் சார்... 8848... நல்லாருக்கு.. தேர்வு நாளும் வந்தது. தேர்வறைக்குள் வினாத்தாள் வந்தவுடன், பிரித்துப் பார்த்த தேர்வருக்கு இரண்டாவது வினாவே எவரெஸ்டின் உயரம் என்ன என்றிருந்தது. பேனாவைக் கீழே வைத்து விட்டு கைதட்டி விட்டார். மீண்டும் வினாத்தாளைக் கையில் எடுத்தார். நான்கு விடைகளில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டுமே..? (அ) 8848 அடி (ஆ) 8848 மீட்டர் (இ) 8848 அங்குலம் (ஈ) 8848 கி.மீ. குறுக்கு வழியைச் சொன்ன ஆசிரியர், அடியா, மீட்டரா, அங்குலமா அல்லது கி.மீட்டரா என்று சொல்லவில்லை. அடிப்படையானவற்றைக் கற்காமல் குறுக்கு வ்ழியைக் கற்பவர்களில் பெரும்பாலானவர்களின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இமயமலை தொடர்ந்து வளர்ந்து வருவதால், அதன் உயரம் தற்போது 8848.86 என்பதாக அளவிடப்பட்டுள்ளது தனிக்கதையாகும்.
குறுக்கு வழிகளும் மனப்பாடம்
கணித ஆசிரியரிடம் குறுக்கு வழிகளைக் கேட்ட தேர்வரின் நிலைமையோ இதைவிட மோசமாக மாறியது. அவரது குறுக்கு வழிகளைப் பெரும் ஆர்வமுடன் கற்கத் தொடங்கினார். மனசுக்குள் மத்தாப்புதான். முதல் நாள் வீட்டிக்குப் போய்ப் போட்டுப் பார்த்தவர், வீட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் கணக்கு சொல்லிக் கொடுத்தார். ஆனால் போகப் போக, நிறைய குறுக்கு வழிகளை எல்லாம் சொல்லி, இதையெல்லாம் மனப்பாடம் செய்யுங்கள் என்றவுடன் தேர்வர் திகைத்துத்தான் போனார். மனப்பாடம் செய்யாமல் இருக்கத்தானே குறுக்கு வழி தேடினோம் என்று சலித்துக் கொண்டார். இன்னும் சில குறுக்கு வழிகள், அனைத்து வினாக்களுக்கும் பொருந்தவில்லையே என்று கேட்டபோது, அதற்கெல்லாம் அது பொருந்தாது. எதற்கெல்லாம் பொருந்தும் என்பது நீங்கள் கணக்கைப் போடப் போடத் தெரிந்துவிடும் என்றார். குறுக்கு வழி மிக நெடியதாக மாறியது போன்ற உணர்வுதான் அவருக்கு ஏற்பட்டது. புரிந்து கொள்வதற்குள் பல தேர்வுகள் கடந்து விடும் போலத் தோன்றியது. பொதி அதிகமானது போல இருந்தது. அவ்வளவு நாளாக யாரும் அறிவியல் எடுக்கவில்லை. திடீரென்று வகுப்புக்கான கால அட்டவணையில் அதையும் சேர்த்திருந்தார்கள். இவரும் எதை மனப்பாடம் செய்யச் சொல்வாரோ என்றபடியே வகுப்பிற்குள் தேர்வர்கள் அமர்ந்தார்கள். கிரிக்கெட் பார்ப்பீர்களா என்று அவர் கேட்டபோது, ஒருவேளை நடப்பு நிகழ்வுகளை எடுக்கப் போகிறாரோ என்று கண்களை உயர்த்தினர். கிட்டத்தட்ட அனைவருமே கண்களில் ஒளியுடன் பார்ப்போமே என்றார்கள்.
எது உங்களுக்குப் பிடிக்கும்?
இந்தியா டீம் விக்கெட் எடுத்தா பிடிக்கும்... அப்புறம் நம்ம ஆட்டக்காரங்க சிக்ஸ், பவுண்டரி அடிக்குறது.. சிக்ஸ் அடிச்சா எங்க போகும்.. கோட்டுக்கு வெளியே போய் விழும்... அது தொடு விசைதானே.. ஏன் மேலே போன பந்து கீழே விழுது? புவியீர்ப்பு விசை சார்.. சார்.. சார்... அது தொடாவிசை.. பந்து போறதக் கவனிப்பீங்கள்ல... ஆமா சார்... வளைவா இருக்கும்... ம்ம்ம்.. அதுதான் வளைவுப்பாதை இயக்கம்... நீங்கள்லாம் நேரா நடந்து போவீங்கள்ல அதுதான் நேர்கோட்டு இயக்கம்... அவரது பாடம் எப்போது தொடங்கியது என்று தெரியாமல் தேர்வர்கள் கேட்கத் தொடங்கியிருந்தார்கள். மட்டையில் இருந்து வரும் பந்தைப் பிடிக்கையில் சிறிது கையைப் பின்னால் இழுத்துக் கொள்வதற்கு திசைவேகம்தானே சார் காரணம் என்று தேர்வர்கள் இடையிடையே சொன்னதற்கெல்லாம் ஆமோதித்துக் கொண்டே இரண்டு மணி நேரம் தாண்டியது. அறிவியல் மட்டுமல்ல, அனைத்துப் பாடங்களையும் இப்படிப் படிக்கலாம் என்ற அவரின் குரல் தேர்வர்களுக்கு புதுத்தெம்பைத் தந்தது.
இறங்கிய பொதி
மதிய உணவு இடைவேளையின்போது இன்னிக்கு என்ன கொண்டு வந்துருக்க என்ற வினாவுக்கு அவ்வளவு நாட்களும் தக்காளி சாதம் என்று சொன்ன தேர்வர் ஒருவர் ஆக்சாலிக் ஆசிட் சாதம் என்றார். சுமக்க முடியாமல் அவ்வளவு நாட்களும் ஏற்றி வைத்திருந்த பொதியை இறக்கி வைத்த திருப்தியும் அவருக்கு இருந்தது.