tamilnadu

img

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை 
திரும்பப் பெறக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, மார்ச் 25-  புதிய மோட்டார் வாகன சட்டம் 2019 மற்றும் தொழிலாளர் விரோத தொகுப்புச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் திங்கட்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மண்டல செயலாளர் ஆர். மணிமாறன் தலைமை வகித்தார். காப்பீட்டுக்கழக ஓய்வூதியர் சங்க நிர்வாகி எம்.ஏ. ரகுமான், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் ஆர். மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் கே. முகமதலிஜின்னா தொடக்கவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளர்கள் சி.மாரிக்கண்ணு, மு.வெ.சரவணன் ஆகியார் பேசினர். மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார். புதிய மோட்டார் வாகன சட்டம் 2019 மற்றும் தொழிலாளர் விரோத தொகுப்புச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். கட்டணங்களை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை கார்ப்பரேட்டுகளுக்கு குத்தகைக்கு விடக்கூடாது. ஆட்டோ செயலிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முழக்கங்களாக எழுப்பப்பட்டன.

குந்தவை நாச்சியார் அரசினர் 
கல்லூரியில் முத்தமிழ் விழா

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், 24.3.2025 முதல் 27.3.2025 வரை கல்லூரியில் ஆண்டு நிறைவு விழாக்களாக அறு பெரும் விழாக்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி, முதல்நாள் விழாவாக திங்கட்கிழமை முத்தமிழ் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராகத் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி இயற்றமிழ் உரையாகப் `பாட்டும் பின்னணியும்’ என்ற பொருண்மையில் திரைக்கு வந்து வெற்றி பெற்றுள்ள பாடல்கள் உருவாகிய பின்னணி குறித்து பகிர்ந்து கொண்டார். இசைத் தமிழ் நிகழ்வைச் சூப்பர் சிங்கர் வெற்றியாளர் இர.பிரித்திகா திரையிசைப் பாடல்களைப் பாடினார். தமிழ்த்துறை மாணவிகள் நவீன குண்டலகேசி என்ற பெண்களுக்கான விழிப்புணர்வு நாடகத்தினை அரங்கேற்றினர். கல்லூரி முதல்வர் முனைவர் அ. ஜான் பீட்டர் தலைமையில் நடைபெற்ற விழாவில், தேர்வு நெறியாளர் முனைவர் தெ.மலர் விழி, தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சீ.வைஜெயந்திமாலா மற்றும் தமிழ்த்துறை, பிற துறை பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில், முன்னதாக முனைவர் தி. ஹேமலதா வரவேற்றார். முனைவர் வெ.அமுதா நன்றி கூறினார். நிகழ்ச்சித் தொகுப்பை முதுகலைத் தமிழ்த் துறை மாணவி கு.சுவாதி வழங்கினார்.