போக்குவரத்து அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு சிஐடியு பதில்
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல போக்கு வரத்து கழகங்கள் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளன. சிறப்பு இயக்கத்திற்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவு தவறானது. இது மறைமுகமான தனியார்மய நடவடிக்கை. எனவே, இதை கைவிட வேண்டுமென சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றன.
அமைச்சரின் அபாண்டமான குற்றச்சாட்டு
இது சம்பந்தமாக 21.10.2024ஆம் தேதி பத்திரிகை யாளர் சந்திப்பின்போது போக்குவரத்து அமைச்சர் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார். “மக்கள் நலனில் சிஐடியுவிற்கு அக்கறை இல்லை” என சிஐடியு மீது அபாண்டமாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக போக்குவரத்துக் கழகங்களின் சிறப்பான பங்களிப்பு
இந்தியாவில் உள்ள மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து வசதி மிக சிறப்பான முறையில் போக்குவரத்துக் கழகங் களால் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவு. மாணவர்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள் என சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு கட்டணம் இல்லா பேருந்து சேவையை போக்குவரத்துக் கழகங்கள் வழங்கி வருகின்றன. இழப்பு ஏற்படும் என தெரிந்தே 10,000க்கும் மேற்பட்ட கிராமப்புற, மலைவழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களுக்கும், மலைப்பகுதிகளுக்கும் தமிழ்நாட்டில்தான் முழுமையாக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் பங்களிப்பு
தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு போக்குவரத்துக் கழகங்களின் இதுபோன்ற சேவை முக்கியமான காரணமாகும். தமிழகத்தின் கல்வி, பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்துக் கழகங்கள் மிகவும் முக்கிய பங்காற்றி வருகின்றன. தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகமாவதற்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணவசதி போக்குவரத்துக் கழகங்களால் வழங்கப்படுவது முக்கியமான காரணமாகும். தமிழகத்தின் சமூக பொருளாதார வாழ்வில் மிகப்பெரும் பங்களிப்பை செய்து வரும் போக்குவரத்துக் கழகங்களை மேலும் வலுப்படுத்த வேண்டுமென சிஐடியு கோருவது தமிழ கத்தின் மக்கள் நலனை முன்னிட்டு தான் என்பதை அமைச்சருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
தனியார்மயத்தின் உண்மை முகம்
மக்களின் நலனை முன்னிட்டு தீபாவளி பண்டிகை சிறப்பு இயக்கத்திற்கு தனியார் பேருந்துகளை வாட கைக்கு எடுத்து ஓட்டுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள் ளார். அது உண்மையல்ல. கடந்த 3 ஆண்டுகளாக சட்ட மன்றத்தில் அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட போக்குவரத்து கொள்கை விளக்க குறிப்பில் மொத்த கொள்முதல் ஒப்பந்த அடிப்படையில் (GCC) தனியார் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வரு வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த கொள்முதல் ஒப்பந்தம் என்பது போக்குவரத்துக் கழக வழித்தடங் களில் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்குவிடுவதாகும்.
அரசின் புறக்கணிப்பும் நிதி நெருக்கடியும்
போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒரு கிலோ மீட்டரை இயக்க ஆகும் செலவு சுமார் 60 ரூபாயாகும். தற்போது வசூலிக்கப்படும் கட்டணம் அடிப்படையில் முழுமையாக பயணிகள் ஏறினாலும், கிலோ மீட்ட ருக்கு ரூ. 30 தான் வரவு வரும். மக்கள் சேவைக்காக இயக்கப்படுவதால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் பற்றாக்குறையை அரசு ஈடுகட்ட வேண்டு மென 10 ஆண்டுகளாக கோரி வருகிறோம்.
தொழிலாளர் நலன் மறுப்பு
போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்காத காரணத்தால், தொழிலாளர் களது பணம் ரூ. 15,000 கோடியை போக்குவரத்துக் கழகங்கள் செலவு செய்துவிட்டன. கடந்த 22 மாதங் களாக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன் கள் வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் உத்தர விட்ட பின்பும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 105 மாதங் களாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது.
சிஐடியுவின் உறுதியான நிலைப்பாடு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களை சீரமைப்பது சம்பந்தமாக திராவிட முன்னேற்ற கழகத்தால் அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வறிக்கை யை தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 11.2.2018ஆம் தேதியன்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் வழங்கினார். அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே சிஐடியு அரசுக்கு வைக்கும் கோரிக்கையாகும். சிஐடியு எப்போதும் மக்கள் நலன், தொழிலாளர் நலனில் எவ்வித சமரச மும் செய்யாது என்பதை போக்குவரத்து அமைச்சர் அவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
- கே.ஆறுமுக நயினார்
பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து
ஊழியர் சம்மேளனம்(சிஐடியு)