tamilnadu

img

காவிரி டெல்டாவில் முதல்வர் ஆய்வு

காவிரி டெல்டா மாவட்டங்களில், 80 கோடி ரூபாய் மதிப்பில், ஆறுகள், வரத்து வாய்க்கால்கள் 4,965 கி.மீ தூரத்துக்கு, 683 தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.  அதன் ஒரு பகுதியாக  தஞ்சாவூர் மாவட்டத்தில் 21 கோடி ரூபாய் மதிப்பில், 1,356 கி.மீ தூரத்துக்கு 170 பணிகள் தொடங்கப்பட்டது, பணிகள் முடிந்தும், சில இடங்களில் முடிவடையும் தருவாயில் உள்ளது.   இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார். 

திங்கள்கிழமை திருச்சி வந்த முதலமைச்சர் அங்கிருந்து தஞ்சை வந்தார். அதன்படி முதற்கட்டமாக, தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே கொக்கேரி கிராமத்தில், 14.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 4.5 கி.மீ தூரம், தூர்வாரப்படும் பீமனோடை வடிகாலை பார்வையிட்டார். பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சரிடம்  பணிகள் குறித்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எடுத்துரைத்தார்.  பின்னர், தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பார்வையிட்டார்.  

தொடர்ந்து வேளாண்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி அரங்கை பார்வையிட்ட முதல்வர், தூர்வாரும் பணிகள் குறித்த புகைப்பட காட்சி அரங்கை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.  ஆய்வின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்.பி.க்கள் செ.ராமலிங்கம், கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ., கும்பகோணம் அன்பழகன், மற்றும் நீர்வள ஆதார துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் உடனிருந்தனர்.  பின்னர், முதலமைச்சர் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது அங்கிருந்த பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் அவர்களின் படிப்பு குறித்து விசாரித்தார். விடுமுறை நாட்களை பயனுள்ளதாக செலவிட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

திருவாரூர் மாவட்டத்தில்...

திருக்கடையூரில் ஆய்வுப்பணிகளை முடித்துவிட்டு 12மணியளவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். நன்னிலத்தில் கொத்தங்குடி வாய்க்காலில் 5கி.மீ நீளத்திற்கும், செங்கநதி வாய்க்காலில் 2.5 கி.மீ நீளத்திற்கும், வீராநத்தம் வாய்க்காலில் 5 கி.மீ நீளத்திற்கும் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். மேலும் பேரளம் வாய்க்காலில் 4 கி.மீ நீளத்திற்கும், இஞ்சிக்குடி வாய்க்காலில் 3 கி.மீ நீளத்திற்கும், அகிலாம்பேட்டை வாய்க்காலில் 2 கி.மீ நீளத்திற்கும் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். திட்டுக்கள், காட்டாமணக்கு, கோரை போன்ற செடிகளும் அடைத்துக் கொண்டு தண்ணீர் செல்ல முடியாமல் இருந்தது. இப்பணிகள் மூலம் சரிசெய்யப்பட்டுள்ளது.  முன்னதாக மாவட்ட எல்லையான நன்னிலம் ஒன்றியம் வேலங்குடியில் திமுக சார்பில் அக்கட்சியினர் மேள தாளத்துடன் வரவேற்பு கொடுத்தனர். அங்கு கூடியிருந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில்...

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி களில்  ஆறுகள் மற்றும் நீர்நிலைகளை தூர்வாரும்  பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி கலந்துகொண்டு பணிகள் குறித்தும் கோரிக்கைகள் குறித்தும்  முதல்வரிடம் எடுத்துரைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட கரு வேலங்கடை பகுதியிலுள்ள கல்லாறு தூர்வாரும் பணியினை முதலமைச்சர் ஆய்வு செய்தார். கல்லாறு வடிகாலானது வேதாரண்யம் கால்வாய் இடது கரையில் பயணித்து கல்லார் கிராமத்தில் கடலில் கலக்கிறது. மழை மற்றும் வெள்ள காலங்களில் பாண்டவையாறு மற்றும் வெள்ளையாறிலிருந்து  வரும் அதிகப்படியான வெள்ளநீர் வேதாரணியம் கால்வாய், கடுவையாறு வழியாகவும் கல்லார் வடிகால் வழியாக கடலில் கலக்கிறது.  

மேலும் இந்த வடிகாலின் மேல் பகுதியில் உள்ள கூழையாறு குறிச்சி வடிகாலும் வேதா ரண்யம் கால்வாய் கல்லார் வடிகால் வழியாக கடலில் கலக்கிறது. இந்த வடிகாலில் மணல் திட்டுகள் காட்டாமணி செடிகள் முளைத்து கரைகள் தூர்ந்தும் இருந்ததினால் கடந்த ஆண்டு பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக கருவேலங்கடை மற்றும் குறிச்சி ஆகிய கிராமங் களில் பாசன பரப்பில் தண்ணீர் வடியாமல் இருந்ததன் காரணமாக அப்பகுதி விவசாய பெருங்குடி மக்கள் கல்லார் வடிகாலில் தூர்வார கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலியிடம்  கோரிக்கை விடுத்தனர். தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தற்போது கல்லார் வடிகால் தூர்வாரப்பட்டதை முதலமைச்சர் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். அமைச்சர்  கே. என்.நேரு. சிவ.வி.மெய்யநாதன். ஏ.வ.வேலு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.  மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ், மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கவுதமன், தாட்கோ தலைவர் உ.மதிவாணன், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷநவாஸ். நாகை நகர் மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் தாமஸ்ஆல்வாஎடிசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தரங்கம்பாடியில் நேரடி நெல் விதைப்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி  பகுதியில் நேரடி நெல் விதைப்பு மற்றும் இயந்திரம் மூலம் நடவு நடும் பணி, வாய்க்கால் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் தரங்கம்பாடி தாலுக்கா காழியப்பன்நல்லூர் ஊராட்சியில் நடைபெற்றுவரும் குருவை நேரடி நெல் விதைப்பு பணிகளையும்  திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாநல்லூர் கிராமத்தின் வழியாக செல்லும்  ராமச்சந்திரன் வாய்கால்‌   ரூ.5.லட்சத்து 65 ஆயிரம்  மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் தூர்வாரும்  பணியை பார்வையிட்டார். இதன்மூலம் 350 ஏக்கருக்கு மேல் விவசாய விளை நிலங்கள் பயன்பெறுகிறது.  அதைத் தொடர்ந்து  நல்லாடை ஊராட்சியில் நடைபெற்று வரும் குறுவை சாகுபடிக்காக இயந்திரம் மூலம் நடைபெறும்  நடுவு பணிகளை பார்வையிட்டார்.  தமிழக முதல்வருடன் அரசு தலைமை கொறடா கோவி. செழியன், அமைச்சர்கள் கே. என். நேரு, எ.வ. வேலு, எம். ஆர். கே. பன்னீர்செல்வம், சிவ.வீ. மெய்யநாதன், சக்கரபாணி, வேளாண் இணை இயக்குனர் சேகர், நீர்வளத் துறை கூடுதல் முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா, முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேளாண்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.இதில் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி  எம்எல்ஏ கலந்துகொண்டு பணிகள் குறித்தும் கோரிக்கைகள் குறித்தும் அவரிடம் எடுத்துக் கூறினார்.