மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
தஞ்சாவூர், அக். 13- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியாகினர். சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சோமநாதன்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ்(35), இவரது மனைவி ரம்யா(30), மகன்கள் ராகவன் (9), தர்ஷித்(3) ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில், மந்திரிப்பட்டினத்தில் உள்ள ரம்யாவின் வீட்டிற்கு சென்று விட்டு சோமநாதன்பட்டினம் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ்(48), தனது உறவினர்களுடன், காரில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள அந்தோணியார் கோவில் திருவிழாவிற்குச் சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். சோமநாதன்பட்டினம் அருகே ஆடு ஒன்று சாலையின் குறுக்கே சென்றதால், ஆட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக, ஆரோக்கியராஜ் காரை திருப்பியுள்ளார். இதில், கார் நிலை தடுமாறி, காளிதாஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், காளிதாசின் 3 வயது குழந்தை தர்ஷித், கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ரம்யா மற்றும் தர்ஷித் ஆகியோரை மீட்டு, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கும், ராகவன், காளிதாஸ் இருவரையும் தஞ்சாவூர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். தஞ்சாவூர் செல்லும் வழியில் காளிதாஸ், ராகவன் இருவரும் உயிரிழந்ததால், உடல் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து, சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
