tamilnadu

img

கோவைக்கு இதுவரை மோடி அரசு செய்த ஒரு நல்ல விஷயத்தை சொல்ல முடியுமா?

கோவை, மார்ச் 13- கோவைக்கு இதுவரை மோடி அரசு செய்த ஒரு நல்ல விஷயத்தையாவது சொல்ல முடியுமா? என்று தனது சாதனைகளை பட்டியலிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பாஜக தேசிய மகளிர் அணியின் செயலாளர் வானதி சீனிவாசனுக்கு சவால் விடுத்துள்ளார்.  இதுதொடர்பாக பி.ஆர்.நடராஜன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுப்பதிலும், அந்த கோரிக்கைகளை வென்றெடுக்க களத்தில் இறங்கி போராடுவதிலும் முன் நிற்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே. இதனை அரசியல் அறிந்தோர் மட்டுமல்ல; எளிய பொதுமக்களும் அறிவார்கள். ஆனால், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி நிர்வாகியுமான வானதி சீனிவாசன் அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமானது. 

சேலம் கோட்டம்

திருமதி வானதி அவர்களுக்கு, கோவை பகுதி சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டிலேயே இணைக்கப்பட்டு விட்டதை சுட்டிக்காட்டியதை அறிந்து கொள்ளாமல் அவர் ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் கோவை பகுதியை சேலம் கோட்டத்துடன் இணைக்குமாறு கோரிக்கை வைத்ததை எடுத்து சொன்னோம். தவறை சுட்டிக்காட்டி விட்டோம் என்கிற ஆற்றாமையில், அதை சரி செய்து கொள்ள முயற்சிக்காமல் என்னை சிறுமைப்படுத்த முயற்சித்துள்ளார். திருமதி வானதி, அரசியல் செய்கிறார் என்பது அப்பட்டமாகவே தெரிந்தாலும், மக்கள் பிரதிநிதி என்கிற முறையில் அவரது விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் கடமை நமக்கு இருக்கிறது.  2019ல் எம்பியானது முதல் கோவைக்கு எத்தனை ரயில்களை கொண்டு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  அவருக்கு கடந்த 2009 முதல் 2014 வரையிலும் நான் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியதை நினைவு கூர்கிறேன்.

அப்போது கோவையில் ரயில்வே போராட்டக்குழு எனது தலைமையில் அமைக்கப்பட்டது. இதுகுறித்து அந்த ரயில்வே போராட்டக் குழுவில் உள்ள உறுப்பினர்களிடமோ, கோவையின் நலன் விரும்பிகளை கேட்டாலே சொல்லியிருப்பார்.  கோவை ரயில்வே போராட்டக்குழுவின் தொடர் போராட்டம், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் எனது தொடர் முயற்சியினால் கோவை மாநகருக்கு 8 புதிய ரயில்கள் கிடைத்துள்ளன. திருப்பதி, இராமேஸ்வரம், ராஜஸ்தான் பிகானிர் எக்ஸ்பிரஸ், செம்மொழி, (நாகர்கோவில், கும்பகோணம்) போன்ற ஊர்களுக்கு இப்போதும் செல்கிறது. அதேபோல் கோவை ரயில் நிலையம் வராமல் போத்தனூர் வழியாக கேரளாவிற்கு சென்ற 13 ரயில்களை கோவை ரயில்நிலையம் வந்து செல்ல வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வந்தோம். பல கட்ட போராட்டங்கள் தொடர் அழுத்தங்களுக்கு பிறகு 13ல் 9 ரயில்கள் கோவை வழியாக திருப்பி விடப்பட்டன. சேலம் கோட்டத்தின் 45 சதவீதம் வருவாயை ஈட்டித்தரும் கோவை ரயில்நிலையத்திற்கு ஆதர்ஷ் அந்தஸ்த்தும் பெற்றுத் தந்துள்ளோம். கோவை ரயில் நிலையத்தில பயணிகளுக்கு எஸ்க்லேட்டர் வசதி, குடிநீர் வசதி, நடை பாதைகள் மேம்பாடு என அடிப்படை வசதி மேம்படுத்துவதில் மக்கள் பிரதிநியான எனது முயற்சிகளை கோவை அறியும். மேலும், வடகோவை ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் கட்டிடம், கோவை மற்றும் புறநர்களில் 11 ரயில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கபாதைகள் அமைத்தது என கோவையில் ரயில்வே கோரிக்கைகளுக்காக மக்கள் பிரதிநிதி என்கிற முறையில் பெரும் பங்காற்றியுள்ளேன்.

அத்தனை ரயில்களையும் நிறுத்திய பாஜக அரசு 

அதேநேரம், கொரோனா காரணம் காட்டி, ஓடிக்கொண்டிருந்த அத்தனை ரயில்களையும் நிறுத்திவிட்டது ஒன்றிய பாஜக அரசு. தனது 7 ஆண்டு கால பாஜக ஆட்சியில் கோவை பகுதிக்கு ஒரு புதிய ரயிலைக்கூட விடாத பாஜக, எதிர்க்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்து எத்தனை ரயில்களை கொண்டு வந்தீர் என்று கேட்பது அரசியல் மாய்மாலம் தானே. தற்போது நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உங்கள் பாஜக எப்போது ஆட்சியில் ஏறியதோ அப்போதே ரயில்வே பட்ஜெட் என்று ஒன்று இருந்ததை காலி செய்துவிட்டீர்கள் என்பதை அறிவீர்களா வானதி அவர்களே. இதுபோன்ற திசை திருப்பல் நடவடிக்கைகளால் பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைளை மறைக்க முடியாது. 

ஒன்றைக் கூட சொல்ல முடியாது

இதில் பிரதமர் மோடி கோவையின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றிவிடுவார் என்று நாம் பதட்டப்படுவதாக வானதி கூறுவது வேடிக்கையானது. உங்களது பாஜக ஆட்சியில் அரசு சொத்துக்களை எல்லாம் விற்று சூறையாடி வருகிறதே தவிர எந்தவொன்றையும் உருவாக்கவில்லை. உருவாக்கப் போவதுமில்லை. திருமதி வானதியால் கூட, கோவைக்கு இதுவரை பிரதமர் மோடி அரசாங்கம் செய்த ஒரு நல்ல விசயத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை என்பதே.  போத்தனூர் – பொள்ளாச்சி அகல ரயில்பாதை பணிகள் கூட கடந்த 2009 – 2010 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. அதேநேரம், பாஜக அரசு ரயில்வேயில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பயணச் சலுகைகளைக்கூட பறித்துவிட்டது. இத்தனையும் பறித்துவிட்டு, எதிர்க்கேள்வி கேட்க பாஜகவிற்கு என்ன அருகதை இருக்கிறது? இப்போதும் கோவையின் தொழில் அமைப்புகள் மற்றும் 180 மக்கள் அமைப்புகளுடன் இணைந்து , கோவையை தலைமையிடமாக கொண்டு தனி ரயில்வே கோட்டம் அமைக்ககோரி வருகிறோம். 

தொகுதி மேம்பாட்டு நிதியை  நிறுத்திய பாஜக

மேலும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருமதி வானதிக்கு நாம் சொல்ல விரும்புவது, கோவை அரசு மருத்துவமனைக்கு உயிர்காக்கும் மருத்துவ கருவில், நவீன கருவிகள் என தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெறப்பட்டுள்ளது. குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனை கட்டமைப்பு மேம்பாட்டிலும் பல்வேறு பணிகளை செய்துள்ளேன்.  இவை தவிர கோவை நாடாளுமன்ற தொகுதிக்குள் பல கிராமங்களில் அங்கன்வாடி மையங்கள், தண்ணீர் தொட்டிகள், சமூதாய கூடங்கள், பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், நூலகங்கள் என ஏராளமானவை கட்டப்பட்டுள்ளன. ஆனால், கோவை நகருக்குள் நடந்ததையே தெரியாதவர். புறநகருக்கெல்லாம் போவாரா என்பதே கேள்வி. மேலும், மக்களின் அடிப்படை கட்டமைப்புகளுக்கான செலவிடப்பட்டு வந்த இத்தகைய தொகுதி மேம்பாட்டு நிதியைக்கூட உங்களது பாஜக அரசு கடந்த இரண்டு வருடமாக நிறுத்திவிட்டது என்பதை அறிவீர்களா? இதனால் எத்தனை மக்களுக்கு நேரிடையாக சென்று சேரவேண்டிய நலத்திட்டங்கள் முடங்கியுள்ளது என்பதை அறிவீரா வானதி அவர்களே? 

ஜிஎஸ்டிக்கு எதிராக

அடுத்து 2019ல் நான் நாடாளுமன்ற உறுப்பினரான பின்னர், கோவை தொழில்துறையின் ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி பேசினேன். பேசி வருகிறேன். கடந்த பாஜக ஆட்சியின்போதே கோவை வெட்கிரைண்டர்களுக்கு போடப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும், இங்குள்ள தொழில்துறையினர் தொடர்ந்து போராடியுமே 12 சதவீதமாக மாற்ற அழுத்தம் தந்தோம். சப்பாத்தி மாவு அரைக்கும் இயந்திரத்திற்கு ஜிஎஸ்டிவரியை குறைத்துவிட்டு, இட்லி மாவு அரைக்கும் இயந்திரத்திற்கு வரியை உயர்த்தி பாரபட்சம் காட்டுவதை அப்போதே அம்பலப்படுத்தினோம். அன்றைய தேதிகளில் வந்த பத்திரிகைகளை படித்தாலாவது தெரிந்து கொள்ளலாம்.  கோவை மாநகரம், புறநகரம் உள்ளிட்டு கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு மக்கள் பிரதிநிதியாக நான் ஆற்றிய பணிகள் ஏராளம், ஆனால் வானதிக்கு பதில் சொல்வதற்காக மட்டும் லெட்டர் ஹெட் பயன்படுத்தினேன் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. உங்களின் லெட்டர்ஹெட்டை வீணடிக்க வேண்டாம் என்கிற அறிவுரையைக்கூட உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே எனது கவலை. 

மேலும், கோவை மட்டுமன்றி மேற்கு மண்டலம் முழுவதும் விவசாயிகளை பாதிக்கும் கெயில் குழாய் பதிப்பிற்கு எதிராகவும், விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிராகவும் தொடர்ச்சியாக நான் முன்னெடுத்த போராட்டங்களை மக்கள் நன்கு அறிவார்கள். கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களின் தொழில்வளர்ச்சி, மக்கள் வாழ்வாதர கோரிக்கைகளிலும் கூட தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறேன்.  நிறைவாக நாம் வானதியின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவது, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதிக கேள்விகள் எழுப்பியதில் 10 பேரில் 7 ஆவது இடத்தில் உள்ளேன். எனது நாடாளுமன்ற வருகை பதிவில் 93 சதவீதம் என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியை குறைக்கலாம். மற்றபடி மக்கள் நலனில் உண்மையான அக்கறை வானதிக்கு இருந்திருந்தால், சேலம் கோட்டத்தில் கோவை இருப்பதை அறிந்திருப்பார். மீண்டும் பதில் எழுதும்போது எனது அறிக்கையை மேம்போக்காக படித்திருந்தாலே பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்தில் இணைக்க போராடி வருவதை புரிந்திருப்பார். மேலும் மேலும் தவறிழைப்பது அவரது பதற்றத்தைத்தான் காட்டுகிறதே தவிர, மக்கள் மீதான அக்கறையை அல்ல! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.