தேர்தல் வந்தாலே பாஜக பதற்றமாகி விடு கிறது. மக்களையும் பதற்றத்துக்கு உள்ளாக்கி விடுகிறது. அத்துடன் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் எண்ணித் தொலையாத வாக்குறு திகளை அள்ளித் தெளிக்கிறார்கள்.
வாயைத் திறந்தாலே ஊடுருவல்காரர்கள், அதிகப் பிள்ளை பெறுபவர்கள் என்று முஸ்லிம் வெறுப்பை கக்குகிறார்கள். இப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் பாதுகாவலர்கள் போல் நடிக்கிறார்கள். அதுமட்டுமின்றி இதர பிற் படுத்தப்பட்ட மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று திடீர் அறிவுரையில் இறங்கியுள்ளனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஜேஎம்எம்- காங்கிரஸ் -ஆர்ஜேடி கூட்டணி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அதைக் கண்டு அஞ்சியே, ‘ஒற்றுமையே பாதுகாப்பு’ என்ற உணர்வுடன் ஒபிசி பிரிவினர் செயல்பட வேண்டு மென்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். மணிப்பூர் மாநிலத்தில் மக்கள் ஒற்றுமை எப்படி இருக்கிறது என்று அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாலே தெரிந்துவிடுமே!
ஜார்க்கண்டில் ஊடுருவிய வங்கதேசத்தி னர் பழங்குடியினரின் நிலம், இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்து நாட்டுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்கிறார் மோடி. உண்மையில் பழங்குடியினரின் நிலம், சுரங்கங்களுக்காக- இவரது கார்ப்பரேட் நண்பர்க ளுக்காகத் தானே பறிக்கப்பட்டது. அவர்களுக் கான இழப்பீடும் மாநிலத்துக்கு வழங்கவேண்டிய நிதி ரூ.1.36 லட்சம் கோடியும் வழங்காமல் இருப்பது இவரது அரசு தானே! இதையெல்லாம் மறைக்க வங்க தேசத்தவர் மீது பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார் மோடி.
பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் பழங்குடியினரின் உரிமைகள் பறிபோகும் என ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி பொய்களைப் பரப்புகிறது என்றும் பொகாரோ மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் மோடி பேசியிருக்கிறார். பழங்குடி மக்களின் உரிமைகள் பறிபோகும் என்பது உண்மை தானே! அதனால் தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் அங்கு பேசிய போது பொது சிவில் சட்டத்திலி ருந்து பழங்குடி மக்களுக்கு விலக்களிக்கப்படும் என்று கூறி சமாளித்தார்; அதை மக்கள் மறந்து விடுவார்களா என்ன?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழங்குடியினர் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்ற தேன் தடவிய வார்த்தைகளால் வலை விரிக்கிறார். பத்தாண்டு கால இவரது ஆட்சியில் பழங்குடி யினர் முன்னேற்றத்துக்கு கொண்டு வந்த திட் டங்கள் என்ன; நிறைவேற்றிய திட்டங்கள் என்ன என்று பட்டியல் போட்டிருக்கலாமே! அல்லது ஏற் கெனவே மாநிலத்தில் பாஜக ஆட்சியிலிருந்த போது நிறைவேற்றிய திட்டங்களையாவது கூறி யிருக்கலாமே. ஒன்றுமில்லையே! வெறும் வாய்ப் பந்தல் பேச்சுக்கள் தங்கள் வாழ்க்கைக்கு உதவாது என்று ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றாகவே தெரியும். உங்கள் நடிப்பு எடுபடாது.