tamilnadu

img

ஒன்றிய அமைச்சரை கைது செய்யக் கோரி சென்னையில் கருப்புக் கொடி போராட்டம்

சென்னை, அக். 3 - விவசாயிகளை கொல்ல தூண்டிய ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்யக்கோரி செவ்வாயன்று (அக்.3) சென்னையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். அச்சமயம் 2021ஆம்  ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம், லக்கீம்பூரில் விவசாயி கள் கருப்பு கொடி போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 4 பேர், ஒரு ஊடகவியலாளரை ஒன்றிய     இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா-வின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் ஏற்றி கொன்றார். இந்த படுகொலைக்கு காரணமான அமைச்சர்  அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்து  கைது செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

விவசாயிகள் படு கொலை செய்யப்பட்ட இந்த நாளை கருப்பு  தினமாக கடைபிடிக்க ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறைகூவல் விடுத்தது. இந்நாளில், ஒன்றிய அமைச்சரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும், ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நட வடிக்கைகளை கைவிட வேண்டும், பொதுத் துறைகளை பாதுகாக்க வேண்டும், விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (அக்.3) நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியும், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பும் கருப்பு கொடி போராட்டம் நடத்தின. அதன் ஒருபகுதியாக சென்னையில் அண்ணாசாலை அஞ்சலகம் முன்பு கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தொமுச பொருளாளர் கி.நடராஜன்,  “ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யவும், விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும் ஒன்றிய அரசு மறுக்கிறது. விலைவாசியை கட்டுப் படுத்த மறுப்பதோடு, பொதுத்துறைகளை விற்று வருகின்றனர். நாட்டை சூறையாடும் பாஜக அரசைக் கண்டித்து கருப்பு தினம் - கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது” என்றார். இதில் சி.திருவேட்டை, பா.பால கிருஷ்ணன், எஸ்.கே.மகேந்திரன் (சிஐடியு), ராதாகிருஷ்ணன் (ஏஐடியுசி), ராஜஸ்ரீதர் (எச்எம்எஸ்), சேவியர் (ஐஎன்டியுசி) உள்ளிட்டு கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.