சென்னை ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் ஆலையில் தொழி லாளர்களின் 37 நாட்கள் வேலைநிறுத்தம், இந்தியாவில் குறிப்பாக - தமிழகத்தில் இந்த நூற்றாண்டில் நடைபெற்ற முக்கியமான வர்க்கப்போராட்டமாகும். இப்போராட்டத்தின் அனுபவங்களும் படிப்பினை களும், இன்றைய தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்க இயக்கத்திற்கும் ஒளிவிளக்காய் விளங்குகிறது. இப்போராட்டத்திற்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற தமிழகம் தழுவிய மறியல் போராட்டத்தை சிஐடியு நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) இணைந்து சென்னை மாநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. தமிழகத்தில் செயல்படும் வங்கி ஊழியர்கள், இன்சூரன்ஸ் ஊழியர்கள் , அரசு ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாய சங்கம், விவசாய தொழி லாளர் சங்கம், வாலிபர், மாணவர், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடத்தின.
எல்லை தாண்டி குவிந்த ஆதரவு
சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தின் வீச்சு இந்திய எல்லையை தாண்டி இந்நிறுவனம் அமைந்துள்ள பல்வேறு நாடுகளிலும் அதன் தொழிலாளர்கள் ஆதரவுப் போராட்டங்களை நடத்தினார்கள். இப்போராட்டத்தின் பின்னணி யும் இக்காலத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளும் ஆழமான பரிசீலனைக்கு உரியவை.
மூலதனத்தின் கொடிய தாக்குதல்
உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ நாடுகளில் ஆளும் வர்க்கங்கள் நவீன தாராளமயக் கொள்கைகளை தங்கு தடையின்றி அமல்படுத்தி வருகின்றன. இந்நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் மட்டுமின்றி விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அனைத்து உழைப்பாளி மக்கள் மீதும் இக்கொள்கைகள் தீவிரமான சுரண்டலையும் மனிதாபிமானமற்ற தாக்குதலையும் நடத்தி வருகின்றன என்றால் அது மிகையானதல்ல. குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தின் மீதான இதன் தாக்குதல் கொடூரமானது. பல நூற்றாண்டுகள் தொழிலாளர் போராடிப்பெற்ற உரிமைகளையும் சலுகைகளையும் தாராளமய கொள்கைகள் பறிக்கின்றன. ஊதியக் குறைப்பு, வேலை நிரந்தரமின்மை காண்டிராக்ட்முறை, அதை விட கொடூரமான அவுட் சோர்சிங் முறை, - வவுச்சர் தொழிலாளர்கள், 8 மணிநேர வேலை பறிப்பு, பெண்களை இரவு ஷிப்ட்களில் பணியாற்ற வைப்பது, கடுமையான வேலைப் பளு, பென்சன் உரிமை பறிப்பு, மருத்துவ சலுகைகள் – விடுப்பு சலுகைகள் பறிப்பு - என உழைப்பின் மீதான மூலதனத்தின் தாக்குதல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். உழைக்கும் மக்களின் கிளர்ச்சி இத்தாக்குதலுக்கு எதிராக உழைக்கும் மக்கள் பல உலக நாடுகளில் மட்டுமல்ல இந்தியா விலும் கிளர்ந்தெழுகிறார்கள். போராடமுன் வருகிறார்கள். எங்கெல்லாம் இடதுசாரி இயக்கம் – செங்கொடி இயக்கம் வலுவாக உள்ளதோ அங்கெல்லாம் அடக்கு முறைகளை எதிர் கொண்டு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் தென் அமெரிக்காவில் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும் இதற்கு சான்றுகளாகும்.
இடதுசாரிகள் வலுவாக இல்லையென்றால்...
இடதுசாரிகள் வலுவாக இல்லாத நாடு களில் இப்போராட்டங்கள் கொடூரமான ஒடுக்கு முறைகளால் அடக்கப்படுவதோடு, இந்நாடு களில் உள்ள மக்களின் அதிருப்தியை பயன்படுத்திக் கொண்டு ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்களை விட மிக பிற்போக்கான வலதுசாரிகள் அதிகாரத்திற்கு வந்துள்ளனர். இத்தகைய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை களை காங்கிரஸ் ஆட்சி அமல்படுத்தியதால் பாதிப்படைந்த மக்கள் அந்த ஆட்சியை அப்புறப்படுத்தினர். ஆனால், இடதுசாரி முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் பலம் வலுவாக இல்லாத நிலையில், கடந்த பத்தாண்டு களாக படுபிற்போக்கான பாசிச தன்மை வாய்ந்த வகுப்புவாத சங்பரிவார் கும்பல் கையில் நாடு சிக்கியது. இந்திய நிலைமையில் தாராளமய கொள்கை களால் பல அரசியல் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இக்கொள்கைகள் கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்கு மட்டுமல்ல; பிராந்திய முதலாளிகளுக்கும் ஆதாயம் தருவதாக அமைந்துள்ளன. இதனால் 1990களுக்கு முன்பிருந்த ஏகபோக முதலாளிகள் – பிராந்திய முதலாளிகளுக்கு இடையே இருந்த முரண்பாடு மட்டுப்பட்டு முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவினர்களும் தாராளமய கொள்கைகளை தாங்கிப் பிடிக்கிறார்கள், அதி வேகமாக அமல் படுத்துகிறார்கள். இதனால் ஏற்படும் மக்கள் அதிருப்தியால் சில மாநில கட்சிகள் அதிகாரத்தி லிருந்து அப்புறப்படுத்தப்பட்டு – இடது சாரிகள் வலுவாக இல்லாத நிலையில் மற்றொரு மாநில கட்சி அதிகாரத்துக்கு வருவதைக் காண முடி கிறது. நாடு தழுவியளவில் தாராளமய கொள்கை அமலாக்கத்தை கணக்கில் எடுத்து கொண்டு கேரள மாநிலத்தில் மக்களை பெரிதும் பாதிக்காத மாற்று செயல் திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையிலான இடது சாரி அரசு செயல்படுத்தியதால் கேரள வரலாற்றில் இல்லாத படி இரண்டாவது முறையாக இடது ஜனநாயக முன்னணி அரசு அதிகாரத்திற்கு வந்துள்ளதை யும் காணமுடிந்தது.
எழுச்சியாக மாறிய வெஞ்சினம்
இத்தகைய அரசியல் பொருளாதார பின்னணியில்தான் சாம்சங் போராட்டத்தை கவனிக்க வேண்டும். சாம்சங் நிறுவனம் ஒரு பன்னாட்டு ஏகபோக நிறுவனமாகும். தாராளமய பொருளாதர கொள்கை அடிப்படையில் பல சலுகைகள் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு, கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரு கிறது. இது மிக கொடூரமான உழைப்புச் சுரண்டல் நடைபெறும் நிறுவனமாக அமைந்துள்ளது. மிக குறைந்த ஊதியம், கடுமையான வேலைப் பளு, தொழிற்சங்க உரிமை மறுப்பு உட்பட பல துயரங்களை இத்தொழிலாளர்கள் சந்திக்கிறா ர்கள். இச்சூழலில் தான் தொழிலாளர்களிடத்தில் ஏற்பட்ட அதிருப்தி உச்சகட்டத்தை அடைந்தது. அந்த வெஞ்சினத்திற்கு போராட்ட வடிவம் கொடுக்க முனைந்த போது அவர்கள் உரு வாக்கிய தொழிற்சங்க அமைப்பு தான் சிஐடியுவில் இணைக்கப்பட்ட சாம்சங் இந்தியா தொழி லாளர்கள் சங்கம். தற்போதைய துயரங்களி லிருந்து விடுபட தொழிலாளர்களின் நலன்கள் உரிமைகளில், எந்த சமரசம் செய்யாது என சிஐடியுவை தேர்வு செய்தது இயல்பானதே.
தொழிலாளர் நலனே
தொழில் வளர்ச்சியின் அடிப்படை
வரலாற்று சிறப்புமிக்க போராட்டங்கள் மூலம் அனுபவம் பெற்ற சிஐடியுமாநிலத் தலைமை மிகுந்த நிதானமாக இத் தொழிலாளர்கள் பிரச்சனைகளை கையாண்டது. போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சாம்சங் நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே சமரசம் ஏற்பட தொழிலாளர்துறை அதிகாரி முன்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து நடவடிக்கை மேற்கொண்டது தமிழக அரசு. ஒன்றிய அரசின் வகுப்பு வாத செயல்பாடு கள் - மாநில உரிமை பறிப்பு போன்ற பிரச்சனை களில் திராவிட முன்னேற்ற கழகம், இடதுசாரி மற்றும் ஜனநாயக இயக்கங்களும் இணைந்து செயல்பட்டுவரும் காலமிது. இந்த இணைந்த செயல்பாடு தொடர வேண்டிய தேவையும் உள்ளது. இந்நிலையில் சாம்சங் போராட்டத்தில் வெளிப்பட்ட தொழிற்சங்க உரிமை மறுப்பு, காவல்துறை அத்துமீறல்கள் ஏற்கத்தக்கவை அல்ல. தொழிலாளர் போராட்டத்தை காவல்துறை யால் ஒடுக்கிவிட முடியாது என்பதற்கு இப்போராட்டம் ஒரு படிப்பினை ஆகும். தமிழ்நாட்டின் பெருவாரியான மக்களான தொழி லாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதே தமிழக தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையானது என்ற பார்வையோடு தமிழக அரசு நிலைபாடுகளை மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.