tamilnadu

img

சிறந்த 4 குறும்படங்களுக்கு விருது

சிறந்த 4 குறும்படங்களுக்கு விருது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு

சென்னை, ஏப்.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருந்த குறும்படப் போட்டிக்கான முடிவுகள் சென்னையில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 6 ஆம் தேதி வரை மதுரையில் சிறப்பாக நடந்தது. மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கருத்தரங்குகள், கலை நிகழ்வுகள் நடைபெற்றன.அதன் ஒருபகுதியாக முற்போக்கு படைப்புகளை ஊக்குவிக்கும் விதமாக குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. பொன்னுலகம் பிறக்குது, நீயும் நானும் வேறு வேறா? உள்ளிட்ட கருப்பொருள்களின் கீழ் குறும்படங்கள் உருவாக்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 77 குறும்படங்கள் போட்டியில் பங்கேற்றன. சென்னை கேரள சமாஜத்தில் மத்திய சென்னை மாவட்டக்குழு ஏற்பாட்டில்  சிபிஐஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,  அவள், எது பீச்சாங்கை, ஹோம் ஒர்க், செவக்காட்டு சிற்பங்கள் ஆகிய நான்கு குறும்படங்கள் சிறந்த படைப்புகளாக தேர்வு செய்யப்பட்டு அவை திரையிடப்பட்டன. சிறந்த குறும்படங்களின் இயக்குனர்கள் டேனியல், பிரபு, தமிழரசன், கண்ணதாசன் ஆகியோருக்கு கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி ஆகியோர் விருதுகளை  வழங்கி வாழ்த்திப் பேசினர்.  கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தோழர்கள் எம்.ராமகிருஷ்ணன், ஜி.செல்வா, ஆர். வேல்முருகன் ஆகியோர் குறும்பட போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழையும் புத்தகங்களையும் வழங்கினர். திரைப்பட இயக்குனர் ராஜுமுருகன், படத்தொகுப்பாளர் சரத்குமார்  ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு சிறந்த குறும்படங்களை தேர்வு செய்திருந்தது. நிகழ்வில் இயக்குநர் ராஜுமுருகன் வாழ்த்துரை வழங்கினார். காம்ரேட் டாக்கீஸ் தயாரிப்பில் காமாட்சி ராமன் இயக்கத்தில் உருவான தோழர் சீத்தாராம் யெச்சூரியின் வாழ்க்கை மற்றும் அரசியல் பங்களிப்புகளை சித்தரிக்கும் “SITA” ஆவணப்படமும், காம்ரேட் கேங்ஸ்டா இசைக்குழுவினரின் பாடல் தொகுப்பும் நிகழ்வில் திரையிடப்பட்டன. இளம் படைப்பாளிகள், கட்சி உறுப்பினர்கள், சமூக வலைத்தளக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இநநிகழ்வில் பங்கேற்றனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிந்தன் நன்றி உரை வழங்கினார்.