tamilnadu

img

மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும்

சென்னை, செப். 24 - மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்கக் கோரி செவ்வாயன்று (செப்.24) தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வு, நவீன தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. 2013ஆம் ஆண்டு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழ்நாடு அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. எனவே கட்டணத்தை மாற்றி அமைக்க கோரி 2021 ஆம் ஆண்டு தனிநபர் ஒருவர் பொதுநல வழக்கு தொடுத்தார். அதை விசாரித்த நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்திய அரசு, 2 ஆண்டுகளை கடந்த பிறகும் கட்டணத்தை உயர்த்தவில்லை.

அதாவது 11 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி விரைந்து மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் டூ வீலர் பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும். ஆன்லைன் அபராதத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், அரசின் ஆட்டோ செயலியை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது, தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஆட்டோக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மானியம்  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு முழுவதும் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதன் ஒருபகுதியாக மத்திய சென்னையில் தலைமை செயலகம் நோக்கி பேரணி நடைபெற்றது. இதில் ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பேசினர். “தமிழ்நாடு முழுவதும் 50 மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 6 ஆயிரம் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்” என்று சம்மேளன பொதுச்செயலாளர் எம்.சிவாஜி தெரிவித்துள்ளார்.