tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வங்கி கிளை மேலாளர்  மீது தாக்குதல்! பெபி கண்டனம்

சென்னை, மே 22 - வங்கி கிளை மேலாளர் மீது வாடிக்கையாளர் ஒருவர் நடத்திய தாக்குதலுக்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெபி) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பெபியின் மாநிலத் தலைவர் எஸ். சுனில் குமார், பொதுச்செயலாளர் டி. ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் தூத்துக்குடி கிளையில் வீட்டுக் கடன் பெற்ற ஜெயக்குமார் என்பவர் அதனை முறையாக திருப்பி  செலுத்தவில்லை. கடனை வசூலிக்க கிளை மேலாளர் உள்ளிட்ட ஊழியர்கள் மே 19 அன்று அவரது வீட்டிற்கு  சென்றுள்ளனர். அவர் இல்லாததால் திரும்பி வந்துவிட்டனர். இதனையறிந்து, வங்கிக்கு வந்த ஜெயக்குமார் அவரது சகோதரர் உள்ளிட்டோர் கிளை மேலாளரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கிளை மேலாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடமையை செய்யும் போது இத்தகைய தாக்குதல்களால் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. இந்த விவகாரத்தில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் ஒன்றிய அரசு துப்பாக்கி  ஏந்திய பாதுகாவலர்களை பாதுகாப்பு பணிகளில் அமர்த்த  வேண்டும். வங்கி வாயில்களில் எச்சரிக்கை வாசகங்களை வைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆவின் பால் கூடுதல்  விலைக்கு விற்கப்படவில்லை அமைச்சர் விளக்கம்

சென்னை, மே 22- ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட வில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ. தங்கராஜ் தெரிவித்தார். ஆவின் முகவர்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களுக்கு உறைகலன் (ப்ரீசர் பாக்ஸ்) வழங்கும் நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், 320 மற்றும் 420 லிட்டர் கொள்ளளவு கொண்ட உறைகலன்களை 60 பயனாளர்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “ஆவின்  நிறுவனம், பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை வழங்கி கொள்முதல் செய்கிறது. பால் உற்பத்தியை பெருக்க பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க உறுதி செய்கிறது” என்றார்.  ஆவின் நிர்வாகம் கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்யவில்லை. ஆவின் பொருட்கள் மட்டுமல்ல, எந்த பொருளும் எம்ஆர்பி விலையை விட கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது. அப்படி விற்கும் பட்சத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றார். நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை செயலாளர் சுப்பையன், ஆவின் மேலாண்மை இயக்குநர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 எச். ராஜா மீது வழக்குப்பதிவு

சென்னை: முத்துப்பேட்டையில் நடந்த பாஜக கூட்டத்தில் மத மோதலை தூண்டும் வகையில் எச். ராஜா பேசியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து,  3 பிரிவுகளின் கீழ் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

10, 11 - துணைத் தேர்வுக்கு விண்ணப்பம் தொடங்கியது!  

சென்னை, மே 22- தமிழகத்தில் 10 மற்றும் 11-ஆம்  வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 16 அன்று வெளியாகின. இந்த  தேர்வுகளில் வெற்றி பெறாதவர் களுக்கு உடனடியாக மறு வாய்ப்பு வழங்கும் வகையில் துணைத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மே 22 (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் ஜூன் 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக் கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தனித் தேர்வர்கள் மாவட்ட வாரியாக அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் வாயி லாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்ட ணம், இணைய பதிவு கட்டணத்தைப் பணமாகச் செலுத்த வேண்டும்.  மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தட்கல்) உரிய கட்டணத் தொகையுடன் ஜூன் 5, 6  ஆகிய இரு நாட்களில் பள்ளி, சேவை  மையங்களில் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதிக் கட்டணம் பத்தாம் வகுப்புக்கு சிறப்பு அனுமதி  கட்டணம் ரூ. 500- ஆகவும், பிளஸ் 1 வகுப்புக்கு ரூ. 1,000-ஆகவும் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தி லிருந்து அரசு மற்றும் முழுமையான அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து  தேர்ச்சி பெறாத, வருகை புரியாத மாண வர்களுக்கு விலக்கு அளிக்கப்படு கிறது. தேர்வு அட்டவணை துணைத் தேர்வுக்கான கால  அட்டவணை, அரசுத் தேர்வு சேவை  மையங்களின் விவரங்கள், இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவு  செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக் கான தகுதி, அறிவுரைகள் ஆகிய வற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப தாரர்கள் அறிந்து கொள்ளலாம் என  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதுகுறித்து வெளி யிடப்பட்ட அறிவிப்பில், பிளஸ் 1,  பத்தாம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வு ஜூலை 4 முதல் ஜூலை 11 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இது யாருக்கான ஆட்சி?  

சென்னை: ரிசர்வ் வங்கியின் அடமான நகை மீதான புதிய கட்டுப்பாடுகளுக்கு,  ஒன்றிய பாஜக அரசுக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் செல்வப்பெருந்தகை, “வங்கியில் நகைக்கடன் பெறுவது விஜய் மல்லையாவா?, அம்பானியா?. அவசர தேவைக்காக நகையை அடமானம் வைக்கும்  சாதாரண மக்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதா?.  கோடீஸ்வரர்களா வங்கியில் நகையை அடமானம் வைக்கின்றார்கள்?. இது யாருக்கான ஆட்சி?. 2016ஆம் ஆண்டு கொண்டு வந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் வீழ்ந்த இந்திய பொருளாதாரம் இன்னும் எழவில்லை” என்று கூறியுள்ளார்.

அமலாக்கத்துறைக்கு  சம்மட்டி அடி

சென்னை: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.  பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது,“டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறையின் அக்கப்போருக்கு உச்ச நீதிமன்றம் முடிவு கட்டியிருக்கிறது என்றும் திமுக மீது பழி சுமத்தும் வகையில் பாஜக தலை வர்கள் வாய்க்கு வந்தபடி பேசியதற்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது”என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறைக்கு  ரூ. 4 லட்சம் அபராதம்

சென்னை: விசாரணை என்ற பெயரில் நெல்லையைச் சேர்ந்த இளைஞரை தாக்கிய காவல்  உதவி ஆய்வாளர் விமலன், காவலர் மகாராஜனிடம் இருந்து தலா ரூ. 2 லட்சம் வசூலிக்கவும், அந்த  தொகையை பாதிக்கப்பட்ட இளைஞரிடம் வழங்கவும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.