tamilnadu

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி அமைக்கக் கோரி வழக்கு...

மதுரை:
மதுரையைச் சேர்ந்த வெற்றி செல்வம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

அதில், “2017-ஆம் ஆண்டு மதுரை அரசுராஜாஜி மருத்துவமனையில் எலும்பு சேகரிக்கும் வங்கி உருவாக்க சென்னை மருத்துவ கல்வி இயக்கரகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மூன்று வருடங்களாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எந்த ஒரு ஏற்பாடும் செய்யப்படவில்லை.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி தொடங்கி அதற்கான பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் மனுஅளித்தும் நடவடிக்கை மேற் கொள்ளவில்லை. ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி உருவாக்கி, அதற்கான தனி துறைஅமைத்து, பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் ஏற்பாடு செய்து எலும்பு தானம் செய்வதன் அவசியம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்யவும், தமிழக மருத்துவக் கல்வி துறை இயக்குநரகத்தின் இயக்குநர் காணொளி காட்சி மூலம் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 15-ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.