ஆண்டாள்
அங்கேயே
நில் என்கிறாள்
விதிர்விதிர்த்துப் போன
இசையின்
உடம்பிலிருந்து
பூணூல்கள்
கழன்று விழுகின்றன
குனித்த புருவமும்
கொவ்வைச் செவ்வாயும்
கோடு கிழித்த பின்பும்
மெளனம் கொள்கின்றன
மார்கழித் திங்கள்
மதிகெட்ட தீ நாளில்
சூடிக் கொடுத்த
சுடர் மாலை
மனம் வாடிக் கிடக்கிறது
எல்லோரின் காதுகளுக்குள்ளும்
எளிதாய் நுழையும்
ராகதேவனின் பாசுரங்கள்
ஆண்டாளின் சந்நிதி
தாண்ட முடியாமல்
தீட்டடுப்பட்டு நிற்கிறது
எல்லாம் நடந்த பிறகும்
ஏதும் நடக்காத மாதிரி
அறிக்கை விடும் அடிமைத்தனத்தை
கற்றுக் கொடுக்கும்
சநாதனம்
ஆலகால விஷம்
நந்தனார்
வள்ளலார்
கோடான கோடி
சூத்திரர் வரிசையில்
புலையராய்
இசைஞானியும்
கடைக்கோடியில்
தலை குனிந்து நிற்கிறார்
வர்ணாசிரமத்தின்
நான்கு கால்களையும் தாங்கி
இன்னும்
கம்பீரமாக நிற்கிறது
அர்த்தமண்டபம்