ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் இன்று தொடக்கம்
சென்னை, செப்.14 - ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்கிட குழந்தைகளின் கல்வி மற்றும் சீரான வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வறுமையில் வாழும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் “அன்புக் கரங்கள்” திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு இந்த திட்டம் பயன்படும். 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். பள்ளிப்படிப்பு முடித்த பின்னர் கல்லூரிக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்.15 (திங்கள்) அன்று, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கவுள்ளார். மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள மாணவ-மாணவியர்களுக்கு மடிகணினிகளும் வழங்கப்படும்.