tamilnadu

img

அறிவியல் கதிர் - ரமணன்

ஒலிம்பிக் வீராங்கனையுடன் போட்டி போடும் பூச்சி  

11 ஒலிம்பிக் பதக்கங்களும் 30 உலக போட்டி பதக்கங்களும் பெற்றுள்ள அமெரிக்க ஜிம்னாஸ்டிக்  வீராங்கனை சிமோன் பைல்சை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு ஒரு உயிரினம் திறமை பெற்றுள்ளதாம். இணைகாலிகள் (arthropods) எனும் பிரிவை சேர்ந்த குளோபுலர் ஸ்பிரிங் டெய்ல் (Globular springtail) எனும் பூச்சிதான் அது.  ஒரு மில்லிமீட்டர் உயரமே உள்ள இது 60 மில்லிமீட்டர் உயரத்திற்கு குதிக்க வல்லது. அதுவும் ஒரு நொடிக்கு 368 முறை எனும் வேகத்தில் சுற்றிக்கொண்டே பின்புறமாக குதிக்குமாம். நீங்கள் கண்ணை இமைத்துவிட்டால் இதன் துள்ளலை தவறவிட்டுவிடுவீர்கள். ஏனெனில் அதன் துள்ளல் 161 மில்லி நொடியே நீடிக்கும்.  இந்த வேகத்தின் காரணமாக அவை மறைந்து விட்டது போல் தோன்றும். இதன் மூலம் அதன் எதிரிகளிடமிருந்து தப்பிக்கின்றன.  இதை எவ்வாறு அவை சாதிக்கின்றன என்பதை  வட கரோலினா அரசு பல்கலைக்கழகத்தை சேர்ந்த  உயிரியலாளர் ஸ்மித் மற்றும் உயிர் இயக்கவியலாளர் ஜேக்கப் ஹாரிசன் சோதனைகள் மூலம் கண்டறிந்தனர்.  பூச்சியின் வயிற்றுப் பகுதியிலிருந்து ஒரு சுருள் போன்ற உறுப்பை வெளிப்படுத்தி தரையில் உதைக்கின்றன. இந்த உதைப்பின் மூலம் நொடிக்கு 1.5 மீட்டர் வேகத்தில் பின்புறமாக அது தள்ளப்படுகிறது.  கீழே விழும்போது பசை போன்ற ஒரு குழாயை வெளிப்படுத்தி சமநிலைப்படுத்திக் கொள்கிறது. சில சமயங்களில் அவை தவறி விழுந்து மேலெழும்பி இறுதியாக நிலை நிற்கின்றனவாம்.  ‘மழைக்காடுகள், நிலத்தடி படிமங்கள் போன்றவையே   இயற்கையின் அதிசயங்கள் என்று சொல்லப்படுகின்றன.  ஆனால் நம்மை சுற்றியே பல வியக்கத்தக்க விசயங்கள் நடக்கின்றன’ என்கிறார் ஸ்மித்.  இந்த ஆய்வு ஆகஸ்ட் 29ஆம் தேதியிட்ட இன்டெக்ரேடிவ் ஆர்கனிஸ்மல் பயாலஜி என்கிற இதழில் வெளிவந்துள்ளது.

சனிக்கோளின் வளையங்கள் ‘மறைவது’’ எதனால்?  '

சனிக் கோளின் கம்பீரமான வளையங்கள் அதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாக பொதுக் கருத்தில் உள்ளது. ஆனால் 2025இல் சில மாதங்களுக்கு அவை மறைந்து போகும். அது ஏதோ அழிவிற்கு அடையாளம் என்று நினைக்க வேண்டாம். இது இயற்பியலின் விளைவே.  சனிக்கோளின் வளையங்கள் என்பவை பெரும் பாறைகளும் பனித்துகள்களும் சேர்ந்தவை ஆகும். அவை மிகவும் மெலிதானவை. எனவே அதன் விளிம்பு தளத்திலிருந்து பார்க்கும்போது அவை இல்லாதது போல் தோன்றுகிறது.  பூமியும் சனியும் சூரியனை அதனதன் பாதையில் சுற்றுகின்றன. 13இலிருந்து 16 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமி,  சனிக் கோளின் வளயங்களின் விளிம்பு நிலை கோணத்திற்கு வருகிறது. எனவே வளையங்கள் இல்லாதது போல் தோன்றுகிறது.  இது எப்போது ஏற்படும்? சனி கோள் 26.7 டிகிரி சாய்ந்து உள்ளது. அது நம்மை நோக்கி சாய்ந்து இருக்கும்போது வளையங்களின் மேல்பகுதியை நாம் பார்க்கிறோம். அதன் சாய்வு பூமியிலிருந்து விலகி இருக்கும்போது வளையங்களின் அடிப்பகுதி புலப்படும். ஒரு கட்டத்தில் பூமி அந்த வளையங்களின் தளத்திலேயே (plane)சுற்றும்போது அவை மிகக் குறைந்த அளவு ஒளியையே பிரதிபலிக்கும். எனவே அவற்றைக் காண்பது மிகக் கடினமாக இருக்கும். அதாவது இல்லாததுபோல் தோன்றும்.   இதற்கு முன் நிகழ்ந்த 2009லும் சரி, நடைபெறப் போகிற 2025இலும் சரி, வளையங்கள் இல்லாத சனி கோளை பார்ப்பது கடினமாக இருக்கும். ஏனெனில் நம் பார்வைக்கு அது சூரியனுக்கு வெகு அருகில் இருப்பது போல் தோன்றும். சூரியனின் ஒளியினால் அது மறைக்கப்படும். 2038 மற்றும் 2039இல் மூன்று முறை வளையங்களின் தள கோணத்தில் பூமி சுற்றும். அப்போது வளையங்கள் இல்லாத சனி கோளை தெளிவாக பார்க்க இயலும்.   400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உண்டான இவ்வளையங்கள் 4.5 பில்லியன் ஆண்டு வரலாறு கொண்ட சனி கோளுடன் ஒப்பிடும்போது மிகவும் இளையது.  இன்னும் 15 லிருந்து 400 மில்லியன் ஆண்டுகளில் இவை ‘வளைய மழை’ எனும் நிகழ்வினால் நிரந்தரமாக அழிந்து விடலாம்.  ஜூபிடர், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றிற்கும் வளையங்கள் உண்டு. அவை ‘வளைய மழை’ எனும் நிகழ்வினால் தேய்ந்து, கருப்பாக தெளிவாகத் தெரியாமல் உள்ளன என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

கைகால்கள் இல்லாமல் நீந்தும் கடல் உயிரினம் 

அண்மையில் சென்னை திருவான்மியூர் கடற்கரையில் கடல் வண்ணமயமாக காட்சியளித்ததை பத்திரிகைகளில் பார்த்திருப்போம்.  அது கடல் வாழ் உயிரினங்கள் அதிக அளவில்  மேல்பரப்பிற்கு வந்ததினால் ஏற்பட்டது என்பதையும் அறிந்தோம். கடல் வாழ் உயிரினங்களில் ஒரு செல் உயிரினமான ஃபைடோ பிளாங்டன் ஒளிச்சேர்க்கைக்காக எவ்வாறு மேல்பரப்பிற்கு வந்து மீண்டும் கடலின் அடியாழத்திற்கு செல்கிறது என்பது குறித்து ஒரு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஈர்ப்புவிசை இயந்திரம் என்கிற கருவியில் கடல் போன்ற சூழலை உருவாக்கி இதன் இயக்கத்தை கண்டுபிடித்துள்ளார்கள். இவற்றிற்கு நீந்துவதற்கு உறுப்புகள் எதுவும் கிடையாது.  இவை சில நூறு மைக்ரான்(.001 மிமீ) அளவுகளே பெரியது. ஆனால் கடல் நீரைவிட கனமானது.  எனவே புவிஈர்ப்பு விசையை முறியடித்தே அவை மேல் பரப்பிற்கு வர இயலும். அதற்காக  இவை  தண்ணீரை உள்ளிழுத்து ஆறு மடங்கு பெரிதாகின்றன.  உள்ளிழுக்கப்படும் தண்ணீர் வடிகட்டப்பட்ட உப்பில்லாத தண்ணீராகும். எனவே சுற்றிலுமுள்ள கடல் நீரைவிட அடர்த்தி குறைந்தது. இதன் மூலம் இவை மிதந்து மேல்பரப்பிற்கு வருகின்றன.  இது  நீர்மூழ்கிக் கப்பல் போன்ற இயக்கம் ஆகும். கரண்ட் பயாலஜி எனும் இதழில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.