tamilnadu

img

காவிரியில் உரிய தண்ணீர் திறக்காத கர்நாடகா ஆணையம் உடனே தலையிட வேண்டும்!

சென்னை, ஜூலை 16 - காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு  மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடி யாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணை யிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணை யத்தை தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது. மேலும், “காவிரி நடுவர் மன்றம் 05-02-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 16-02-2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது  கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடி யாகப் பெறுவதற்கு, தேவைப்படின், உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது” என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது

ஒழுங்காற்றுக் குழு உத்தரவை மீறிய கர்நாடக அரசு

தமிழ்நாட்டிற்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, காவிரி மேலாண்மை வாரியத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருந்தார். தமி ழகத்திற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 8,000 கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும் என்றும் கூறினார். கர்நாடகத்தின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை, செவ்வாயன்று கூட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளி கையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) காலை 11 மணிக்கு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

அதிமுக உள்ளிட்ட  கட்சிகள் பங்கேற்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பி. வில்சன் எம்.பி., ஆர்.எஸ். பாரதி  (திமுக), எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ்.  மணியன்(அதிமுக), கு. செல்வப் பெருந்தகை, ராஜேஷ்குமார் (காங்.), பெ. சண்முகம், நாகை மாலி எம்எல்ஏ (சிபிஎம்), மு. வீரபாண்டியன், டி. ராமச் சந்திரன் எம்எல்ஏ (சிபிஐ), தொல்.  திருமாவளவன், எஸ்.எஸ். பாலாஜி எம்எல்ஏ (விசிக), சதன் திருமலைக் குமார், பூமிநாதன் (மதிமுக), நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, கரு. நாகராஜன், கருப்பு முருகானந்தம் (பாஜக), ஜி.கே. மணி, சதாசிவம் (பாமக), எம்.எச். ஜவாஹிருல்லா, பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்திலேயே, தமிழகத் திற்கு காவிரி நீர் தர முடியாது என கூறிய கர்நாடக அரசுக்கு அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் சார்பில் கண்டனம் தெரி வித்தும், காவிரி நீரை விடுவிக்கக் கோரி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணை யத்தை வலியுறுத்தியும் மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரியில் உரிமையை  அரசு நிலைநாட்டும்!

முன்னதாக கூட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “குறைந்த அளவு தண்ணீரை  கூட கர்நாடக அரசு வழங்க மறுக்கிறது. அதை முறியடித்து விவசாயிகளுக்கு தண்ணீர் தர நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கும் போது தண்ணீர் தர மறுப்பது ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார். மேலும், “தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீரை கர்நாடக அரசு உடனடி யாக வழங்க வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கை க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடி சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலை நாட்டும்” எனவும் மு.க. ஸ்டாலின் தெரி வித்தார்.