tamilnadu

டீஸ்டா செதல்வாத், ஸ்ரீகுமாரை விடுதலை செய்க!

புதுதில்லி, ஜூன் 27- அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களையும் சமூக நீதியையும் பாதுகாப்பதற்காகப் போராடி வந்த போராளிகள் டீஸ்டா செதல்வாத் மற்றும் குஜராத் மாநில முன்னாள் காவல்துறைத் தலைவர் ஆர்.பி.ஸ்ரீகுமார் முதலானவர்கள் கைது செய்யப்பட்டு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடுமையாக கண்டித்துள்ளது.  இவர்கள் இருவரும் 2002 குஜராத்தில் முஸ்லீம்கள் இனப்படுகொலை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக உறுதியுடன் போராடியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்கள் மீதான மதவெறிப் படுகொலை சம்பவங்கள் விளிம்புநிலையிலிருந்த பல தலைவர்களை தேசிய அளவில் உச்சத்திற்குக் கொண்டுவந்ததைப் பார்த்தோம். அவர்கள் அங்கே நடந்த சம்பவங்களுக்கு எதிராக அரசமைப்புச் சட்டத்தின்கீழ் போராடிவந்த இரு வீரர்களைச் சரிசெய்வதற்கு பல சட்டவிரோத வழிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் இந்தியாவில் அரசமைப்பு அறநெறி வரலாற்றில் மிகவும் மோசமான மற்றுமொரு அடையாளமாகும். 

குஜராத் மாநிலத்தின் முன்னாள் மூத்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கைது செய்திருப்பதும், குஜராத்தில் ஆட்சி புரிந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை மூடிமறைப்பதற்காக அரசு எந்திரத்தை எப்படி முழுமையாகப் பயன்படுத்திவருகிறார்கள் என்பதற்கு அடையாளமாகும். குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைகளைப் புரிந்த பாசிஸ்ட் சக்திகள், சமூக நீதிக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பேசும் அனைத்துப் போராளிகளும் கடைசியில் சிறைகளில்தான் அடைக்கப்படுவார்கள் என எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. ஒன்றிய அரசு தங்களுக்கு எதிராகக் கருத்து கூறும் அனைத்துக் குரல்களையும் நசுக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. நம் அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் மீதும், நம் குடியரசின் அடித்தளங்கள் மீதும் ஏவப்பட்டுள்ள பாசிஸ்ட் தாக்குதல்களை ஒன்றுபட்டு நின்று தடுத்து நிறுத்திடக்கூடிய விதத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும், முற்போக்குப் பிரஜைகளும் முன்வர வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். (ந.நி.)