tamilnadu

img

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ஆர்.சுப்பிரமணியன் கோரிக்கை மனு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ஆர்.சுப்பிரமணியன் கோரிக்கை மனு

பாபநாசம், ஏப்.28-  புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகரும், திரைப்பட இயக்குநருமான சூப்பர் குட் ஆர்.சுப்பிரமணியன், தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.  அதில், நான் நடிகர், திரைப்பட இயக்குநர் ஆர். சுப்பிரமணியன்(57). தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை எனது சொந்த ஊர். தற்போது சென்னை மேற்கு மாம்பலம் பரோடா தெரு விரிவாக்கத்தில் வசித்து வருகிறேன். நான் கடந்த 30 வருடமாக திரைப்படத் துறையில் நடிகராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றி உள்ளேன். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், விஜயகாந்த், சரத்குமார், அஜித்குமார், சிவகார்த்திகேயன், தனுஷ் உட்பட பல்வேறு முன்னணி திரைப்பட நடிகர்களுடன் இணைந்து 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன்.  இதில் குறிப்பாக காலா, பரியேறும் பெருமாள், பிசாசு, ஜெய் பீம், ரஜினி முருகன் உட்பட ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். மேலும் பரமன், வெள்ளிமலை படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கதை, வசனத்தில் உருவான பெண் சிங்கம் திரைப்படத்திலும், அஜித் குமார் நடித்த சிட்டிசன் திரைப்படத்திலும் இணை இயக்குநராக பணியாற்றி உள்ளேன். நான் தற்போது, புற்றுநோயின் நான்காவது கட்டத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறேன். எனது கல்லீரல், நுரையீரல் மற்றும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புற்றுநோய் தலைமை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது கடுமையான நிதி நெருக்கடி சூழலால் மருத்துவ செலவினங்கள், வீட்டு வாடகை, குழந்தைகளின் கல்விச் சூழல் கேள்விக் குறியாக உள்ளது. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறேன். நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் எனக்கு உயர்தர சிகிச்சை கிடைத்திட மருத்துவ நிதி உதவியும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியும் வழங்க ஆவண செய்வதுடன், சொந்த வீடு இல்லாமல், வாடகை வீட்டில் பல வருடமாக இருந்து வருவதால், இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கி, அதில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுக்கவும், என்னுடைய குழந்தைகளின் கல்வி மேற்படிப்பிற்கான, உதவிகளை செய்திடவும் கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனது மனைவி எம்.ஏ.பி.எட் வரை அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்றுள்ளார். எனது குடும்பத்திற்கு வாழ்வாதாரம் கிடைக்கிற வகையில் கருணை அடிப்படையில், எனது மனைவிக்கு அரசு பணி வழங்கிடவும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், குடியிருப்பதற்கு இட ஒதுக்கீடு செய்து கொடுக்கவும்  தங்களை பணிவுடன் வேண்டுகிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.