தூத்துக்குடி, ஏப்.26- தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாரிமுத்து என்பவரை தனிப்படை காவல்துறை யினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து பகுதி கிராம நிர்வாக அலு வலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ்சை அவர் பணியில் இருக்கும்போதே அலுவலத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் இரண்டு பேர் சேர்ந்து வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே ராமசுப்பு என்பவரை காவல்துறையினர் கைது செய்திருந்த நிலையில் இதில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான மாரி முத்து என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் குற்றவாளி மாரிமுத்துவை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட் டார். தனிப்படையினர் தூத்துக்குடி, நெல்லை பகுதி களில் தீவிரமாக தேடினர். இந்நிலையில் நெல்லை அருகே பதுங்கி இருந்த குற்றவாளி மாரிமுத்துவை தனிப்படையினர் கைது செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ஆடியோவால் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் முறப்பாடு அருகே கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் தனது உயிருக்கு ஆபத்து இருப்ப தாகவும் எனவே பணிமாறுதல் செய்து தரும்படி ஏற்கனவே ஆர்.டி.ஓ-விடம் கேட்டார். ஆனால் அவருக்கு பணி மாறுதல் வழங்கப்படவில்லை. வழங்கி இருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என்று கிராம நிர்வாக அலுவலர் சங்க பொருளாளர் பாலமுருகன் என்பவரிடம் தூத்துக் குடி மறவன்மடம் கிராம நிர்வாக அலுவலர் பிரேம லதா என்பவர் பேசி ஆடியோ அனுப்பி இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆட்சியர் அஞ்சலி
இந்நிலையில், கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உடல் புதுக்கோட்டை அருகே உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப் பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அரசு ஊழியர்கள் போராட்டம்
முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளி கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலு வலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (ந.நி )
மணல் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக : சிபிஎம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், அவருடைய அலுவலகத்திலேயே ஏப்ரல் 25 அன்று அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு ள்ளனர். லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். கொலைக்கு பிந்தைய நட வடிக்கைகளும், நிவாரண அறிவிப்புகளும் பாராட்டத்தக்கவை.
அதே சமயத்தில், கிராம நிர்வாக அலுவலரின் படுகொலைக்கான காரணங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மணல் கொள்ளை குறித்து பலரும் காவல்துறையிடமும், வேறு வகைகளிலும் முறையிட்டுள்ளனர். காவல்துறை எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும் என்று கேட்டு, கொலையாளிகளுக்கு பயந்து யாரும் எழுதித் தர மறுத்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி துணிச்சலாக புகார் அளித்திருக்கிறார். கொலையாளி களின் தன்மை தெரிந்த காவல்துறையினர் யாரும் எழுத்துப்பூர்வ மாகவும், வெளிப்படையாகவும் புகார் அளிக்க முன்வராத நிலையில் தைரியமாக முன்வந்த கிராம நிர்வாக அதிகாரிக்கு உரிய பாதுகாப்புகளை உத்தரவாதப்படுத்தியிருக்க வேண்டும். மாறாக, முறப்பநாடு காவல்நிலையத்தின் அருகிலேயே உள்ள கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் அவர் வெட்டிக்கொல்லப்பட்டிருப்பது காவல்துறையின் அப்பட்டமான அலட்சியத்தையே காட்டுகிறது. யாரும் முன்வராத சமயத்தில் இந்த வி.ஏ.ஓ. புகார் கொடுத்திருக்கிறார் என்பது காவல்துறை தவிர வேறு யார் மூலமாகவும் கொலையாளிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே, இந்த பிரச்சனையில் காவல்துறையினர் உரிய முன்னெச்ச ரிக்கையோடு நடந்து கொள்ளாமல் இருந்தது குறித்தும், லூர்து பிரான்சிஸ் கொடுத்த புகார் கொலையாளிகளுக்கு எப்படி தெரிய வந்தது என்பது குறித்தும் உரிய முறையில் விசாரித்து தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தவிரவும் மாநிலம் முழுவதும் கனிம வளங்களை திருடுவோர் குறித்து புகார் தெரிவிப்பவர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும். புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்வதை கட்டாயமாக்க வேண்டும். மாநிலம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளை யடிக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். கனிம வளக்கொள்ளைக்கு எதிராக போராடுபவருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதோடு, கனிம வளக் கொள்ளையர்களுடன் தொடர்பு வைத்துள்ள காவல்துறையினர் மற்றும் பிற துறை சார்ந்தோர் கடுமையாக தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.