சிஐடியு அரசு போக்குவரத்து மாநில மாநாடு தீர்மானம்
கோயம்புத்தூர், ஜூன் 20- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடனும், தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களுக்கு அரசின் பேருந்து சேவை கிடைத்திடவும் பொது போக்குவரத்தை பலப்படுத்திடவும், அரசுப் போக்குவரத்தில் தனியார்மய நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என கோவையில் நடைபெறும் சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) மாநில மாநாடு தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது. சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் 15 ஆவது மாநில மாநாடு கோவையில் நடைபெற்று வருகிறது. ஞாயிறன்று துவங்கிய மாநாட்டின் நிறைவாக இன்று (செவ்வாய்க்கிழமை) செஞ்சட்டை பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் நடைபெறுகிறது. சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்று வரும் மாநாட்டின் இரண்டாவது நாளான திங்களன்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தனியார்மயத்தைக் கைவிடுக!
இதில், கடந்த அதிமுக அரசு தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு 288(A) என்ற ஒரு புதிய பிரிவை உருவாக்கியது. தனியார் பேருந்து நிறுவனத்தின் பேருந்துகளை ஒரு குறிப்பிட்ட வாடகையில் நிச்சயித்து, போக்குவரத்துக் கழகங்களின் வழித்தடங்களில் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்படும் என திருத்தம் மேற்கொண்டது. எதிர்காலத்தில் புதிய பேருந்துகள் வாங்காமலேயே தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி, அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயக்க, கடந்த அதிமுக ஆட்சி தனியார்மயத்திற்கு வித்திட்டது. ஒன்றிய அரசு ஏற்கெனவே வழித்தடம் மற்றும் அனுமதி, உரிமத்தின் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருந்து பறித்து திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட தனியார்மய நடவடிக்கைகளை எதிர்த்த திராவிட முன்னேற்றக் கழகம், தற்போது ஆட்சியில் அமர்ந்த பிறகு அதிமுக அரசு அறிவித்த தனியார்மய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த முயற்சிப்பது தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு எதிரானதாகும். இதனை இம்மாநாடு கண்டிக்கிறது. மேலும் போக்குவரத்தில் தனியார்மய நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழக அரசை மாநாடு வலியுறுத்துகிறது. கடும் நெரிசலுக்கு தீர்வு என்ன? இதேபோன்று இந்தியாவிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலங்களுள் ஒன்றாக ஒவ்வொரு பகுதிக்கும் பேருந்து சேவை கிடைப்பதை தமிழக போக்குவரத்துக் கழகங்கள் உறுதி செய்துள்ளன. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் தினசரி சுமார் 1.55 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர். அதேநேரத்தில் தமிழ்நாட்டில் அதிகளவில் மக்கள் இடம்பெயர்தலின் விளைவாக நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நகரங்களில் பொதுப் போக்குவரத்து பங்கினை உயர்த்துவதன் மூலம்தான் தனிநபர் வாகன போக்குவரத்தினைக் குறைக்கவும், விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கவும் முடியும். மாசுக் கட்டுப்பாடும் சாத்தியமாகும். பொதுப் போக்குவரத்தின் உள்கட்டமைப்பின் அதிகளவில் முதலீடு செய்வதன் மூலம்தான் இது சாத்தியமாகும். தமிழக போக்குவரத்துத் துறை உலகளாவிய C40 பருவநிலை பிரகடனத்தில் 2018-ஆம் ஆண்டு கையெழுத்திட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டைப் குறைக்கவும், வாகன எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், பொதுப் போக்குவரத்தை பலப்படுத்துவதுடன் தமிழக பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் பங்கினை ஆற்றிவரும் போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்கவும், தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிட வேண்டும். பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டம்
தமிழக ஆட்சிப்பொறுப்பில் உள்ள திமுக 2021 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து தொழிலாளர்கள், அரசு மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக நிதியமைச்சர் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த சாத்தியமற்றது என தெரிவித்துள்ளார். நிதியமைச்சரின் இந்த பேச்சு தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நிதியமைச்சரின் இந்த பேச்சு கண்டனத்திற்குரியது. ஆகவே 1998ல் ஊதிய ஒப்பந்த அடிப்படையில் 2003க்கு பின்பாக பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்புக!
போக்குவரத்து கழக நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை செலுத்த வேண்டும். பேருந்து ஆயுட்காலத்தை மாற்றி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை திரும்பபெற வேண்டும். பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைத்து விலையை குறைப்பதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். அரசு போக்குவரத்தில் உள்ள நிச்சயிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண்டும். பணியின்போது சமூக விரோதிகளால் தொழிலாளர்கள் தாக்கப்படுகின்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இத்தாக்குதலால் உயிரிழப்பவருக்கு ரூபாய் ஒரு கோடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பாஜக அரசு மதவெறி சக்திகளுடனும், கார்ப்பரேட்டுகளுடனும் கள்ள உறவை வலுப்படுத்திக் கொண்டு, நவீன, தாராளமய சீர்திருத்தங்களை வெறித்தனமாக நிறைவேற்றுவதற்கு எதிராக வலுவான மக்கள் ஒற்றுமையை உருவாக்கவும், பாஜக அரசை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றுவதற்கும், தமிழக போக்குவரத்துத் தொழிலாளர்களையும், தமிழக மக்களையும் திரட்டும் பணியில் ஈடுபடுவோம். பேருந்தின் பராமரிப்பிற்கு தரமான உதிரிபாகங்கள் தேவைக்கேற்ப வழங்கி, புதுப்பித்தல் பிரிவில் காண்ட்ராக்ட் முறையை ரத்து செய்ய வேண்டும்.
ஓய்வு வயது
கடந்த அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு ஓய்வுபெறும் வயதை 59 என ஓராண்டு நீட்டித்தும், 2021ஆம் ஆண்டு ஓய்வுபெறும் வயதை 60 என அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நீட்டித்து உத்தரவு வழங்கப்பட்டது. பணி ஓய்வு வயதை 58-லிருந்து 60 வயதாக நீட்டிப்பதன் மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகவே ஓய்வுபெறும் வயதை மீண்டும் 58 என நிச்சயித்து உரிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இரண்டாவது நாள் மாநாட்டில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் பங்கேற்று வாழ்த்தி உரையாற்றினார்.
கண்காட்சி
முன்னதாக மாநாட்டையொட்டி அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கத்தை சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் திறந்துவைத்து பார்வையிட்டார். அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் இதழான போக்குவரத்து தொழிலாளி மற்றும் தீக்கதிர் நாளிதழில் வெளிவந்த முக்கியத்துவம் வாய்ந்த போராட்ட இயக்கங்கள், கட்டுரைகள் உள்ளடக்கிய பக்கங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.