சமக்ர சிக் ஷா நிதியை வழங்காவிட்டால் ஒருங்கிணைந்த போராட்டம்
தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை ஒன்றிய அரசு வழங்காவிடில், ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்து வோம் என்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கர் விடுத்துள்ள அறிக்கையில், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத வரை ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி (சமக்ரா சிக்ஷா அபியான்) நிதி ஒதுக்க முடியாது என்று ஒன்றிய கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. ஒன்றிய அமைச்சர் பேசுவது வெளிப்படையான மிரட்டல்.
40 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியில் விளையாடுவதாகும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்துள்ள கேரளம், மேற்குவங்க அரசுகளுக்கும் ஒன்றிய அரசு நிதி வழங்காமல் உள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2 ஆயிரத்து 152 கோடி ரூபாயை பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு தூக்கிக் கொடுத்துள்ளது. இது உரிமை மீறல். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்தியாவின் பன்முகத்தன்மையை தகர்ப்பதும், மொழியை திணிப்பதும் ஏற்க முடியாது. தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் செயல்களை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நிறுத்தாவிடில் தமிழ் மக்களின் போராட்ட குணத்துக்கு பதில் சொல்ல நேரிடும். ஒன்றிய அரசு உடனடியாக நிதி ஒதுக்கவில்லை என்றால் அனைவரும் இணைந்து ஒன்றிய அரசை எதிர்த்து போராடக் கூடிய சூழல் உருவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.