tamilnadu

img

‘தமிழ் ஒளி’யை மெருகூட்டும் புதுமலர் - மயிலை பாலு

சமூக அரசியல் கலை இலக்கியக்  காலாண்டிதழ் என்ற அறிவிப்புடன் தமிழ்ச் சூழலில் ‘புதுமலர்’  ஓராண்டு காலமாகப் பூத்துக் குலுங்குகிறது. இதன் முதல் மலர்ச்சியே (சனவரி - மார்ச்சு 2023)  வள்ளலார் 200 ஆவணச் சிறப்பிதழ். ஓராண்டு நிறைவில்  இப்போது (அக்டோபர் - திசம்பர் 2023) பூத்திருப்பது கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு சிறப்பிதழ். “தமிழனே நான் உலகின் சொந்தக்காரன் தனிமுறையில் நான் உனக்குப்  புதிய சொத்து” என்று சுயப் பிரகடனம் செய்து கொண்டவர் தமிழ் ஒளி.  அதற்கேற்பவே படைப்புகளைத்  தந்தவர். கவிஞர் தமிழ் ஒளி என்று பொதுவாக அறியப்பட்டாலும் கம்யூனிசத் தத்துவக்காரர்.  இதனாலேயே தோழர் தமிழ் ஒளி என்று குறிப்பிடும் பேராசிரியர் வீ. அரசு கட்டுரை முகமன் கூறி இதழுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனோடு தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுத்திக் கொண்ட தொடக்க காலம் (1924 -  1944) பொதுவுடமை இயக்கத்தின் தொண்டனாக இருந்து செயல்பட்ட காலம் (1945 - 1954) சுதந்திர மனிதனாக வாழ்ந்து பல்வேறு ஆக்கங்களை உருவாக்கிய காலம் (1955 - 1965) என தமிழ் ஒளியின் வாழ்க்கைக் காலத்தை முப்பாலாக்கி அதன்படி படைப்புகளையும் சிந்தனைகளையும் நிரல்படுத்தி ஆழமான ஆய்வுக் கட்டுரையைத்  தந்துள்ளார் பேராசிரியர் அரசு. கவிதைகள், சிறுகதைகள்,  காவியங்கள், ஓரங்க நாடகங்கள்,  மேடை நாடகம், இலக்கிய ஆய்வு,  சிறுவர் பாடல்கள், உருவகக்  கதைகள், குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள், விமர்சனக் கட்டுரைகள் என அனைத்து வகைமைகளிலும் தமிழ் ஒளியின் பங்களிப்பைக் கால ஒழுங்கில் நுட்பமாகப் பதிவிட்டுள்ளது இக்கட்டுரை.

இதேபோன்று ஜமாலன் அவர்களின் கட்டுரையும் தமிழ் ஒளியின்  படைப்புகளை வேறொரு கோணத்தில் விரிவாகப்  பேசுகிறது.  கவிதைகளை விடுத்து,  ஆய்வு நூல்கள் வழியாகக்  கவிஞர் காணும் சமூக, அரசியல், சித்தாந்தப் பார்வைகளை ஆழ, அகலத்தோடு அலசுகிறது. இந்தக்  கட்டுரையின் ஊடாக இன்குலாப், கோ. கேசவன், அயோத்திதாசர், ஃபூகோ ஆகியோரின் கருத்துக்களைத் தமிழ் ஒளியோடு ஒப்பிட்டு உரைத்திருப்பது புதிய புரிதலை ஏற்படுத்துகிறது. பல ஆய்வுக் களங்களையும் அறிமுகம் செய்கிறது. இவை தவிர கவிஞர் ஈரோடு தமிழன்பன், தோழர் தியாகு, ச. தமிழ்ச்செல்வன், பேராசிரியர் பஞ்சாங்கம், மயிலை பாலு, பு.பா.பிரின்சு கஜேந்திரபாபு,  கண.  குறிஞ்சி, சதீஷ்குமார் ஆகிய எண்மரின் கட்டுரைகளும் ஒவ்வொரு கோணத்திலான கருப்பொருளைக் கொண்டு மலரைச் செறிவாக்கியுள்ளன. கவிஞர் தமிழ் ஒளியின்  நூற்றாண்டு விழா ஓராண்டு காலத்திற்குக் கொண்டாடப்படும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும்,  தமிழ் ஒளி நூற்றாண்டு விழா குழுவும் அறிவித்துள்ளன.  இந்நிலையில் கண. குறிஞ்சி அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘புதுமலர்’ ,  தமிழ் ஒளி நூற்றாண்டு சிறப்பிதழை  வெளியிட்டிருப்பது சாலப்பொருத்தமானது. பல ஆண்டுகாலம் புதையுண்ட பொக்கிஷத்தைத் தேடிக்  கண்டடைந்த  மகிழ்வை இந்தச்  சிறப்பிதழ் ஏற்படுத்துகிறது. 1960களில் இருந்து 2023 ஜூன் மாதம்  இயற்கை எய்தும் வரை தமிழ் ஒளி நூல்களை விடாமுயற்சியுடன் பதிப்பித்து தமிழ் ‘ஒளி’ மங்காமல் பார்த்துக்கொண்டவர் செ.து. சஞ்சீவி அவர்கள்.  அவருக்குப் புதுமலரும் கட்டுரைப்  படைப்பாளிகளும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கும் குறிப்புகள் பண்பாட்டின் அடையாளங்களாக உள்ளன. புதுமலரின் இன்னொரு சிறப்பாக அமைந்திருப்பது பேராசிரியர் வீ. அரசு உடனான கண. குறிஞ்சி அவர்களின் நேர்காணலாகும்.  பிறப்பு தொடங்கி இன்றுவரையிலான வாழ்க்கை நிகழ்வுகளையும்,  சந்தித்த ஆளுமைகளையும்,  இலக்கியத் தடங்களையும் பற்றிய  விரிவான பதிவாக இது உள்ளது.  அகவை எழுதில் இவரது மாணவர்கள் வெளிக்கொணர இருக்கும் தொகுப்பு பற்றிய தகவல் குறிப்பு  ஆவலைத்  தூண்டுகிறது. புதுமலர் உண்மையிலேயே இலக்கிய மணம் பரப்புகிறது என்பது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.