அரியலூர், பிப்.4 - அரசு நூலகத்தைப் பயன்படுத்தி, போட்டித் தேர்வுக்கு தயாரான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர், காவலர் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அரியலூர் மாவட்டம் சின்னவளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி உமாதேவி. விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற மகளும் விக்னேஸ்வரன் (27) என்ற மகனும் உள்ளனர். விக்னேஷ்வரன் கடந்த 2014 இல் 12 ஆம் வகுப்பு முடித்தவுடன், அரசு வேலைக்கு படிக்கத் துவங்கியுள்ளார். இந்நிலையில் பெற்றோர்-உறவினர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் 2018 இல் பொறியியல் படிப்பை முடித்த விக்னேஷ்வரன், அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுக்கு தயாரானார். குடும்ப வறுமை காரணமாக போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுக்கு செல்ல முடியவில்லை. இதனால் சின்னவளையத்தில் உள்ள கிளை நூலகத்தையே, தனது பயிற்சி மையமாக கருதி நண்பர்கள் சிலருடன் சேர்ந்து போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் புத்தகங்களை படிக்க தொடங்கினார் விக்னேஸ்வரன். தமிழ்நாடு அரசு நடத்திய பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதிய இவர், அவ்வப்போது விவசாய வேலை மற்றும் கால்நடைகள் பராமரிப்பு என பெற்றோர்களின் வேலைப்பளுவையும் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை எதிர்கொண்ட விக்னேஷ்வரன், அதில் தேர்ச்சி பெற்று தற்போது தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்ட வழங்கல் அலுவலகத்தில் தனி வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதுமட்டுமின்றி மீண்டும் போட்டித் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தினார் விக்னேஸ்வரன். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான போட்டித் தேர்வுகள் அனைத்திலும் வென்ற இவர், மாநில அளவில் முதலிடம் பெற்று, உதவி ஆய்வாளராக வெற்றி பெற்றுள்ளார். எனினும் வருவாய் ஆய்வாளர் பணியை விடாமல் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார். தற்போது காவல் உதவி ஆய்வாளர் பணி நியமன ஆணைக்காக காத்திருக்கிறார். விடா முயற்சியுடன் காவலர் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றது, விக்னேஸ்வரன் குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.