ஜி. ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் - சிபிஐ(எம்)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட 23ஆவது மாநாடு 2021 டிசம்பரில் நடைபெற்றது. மாநாட்டில் மாவட்டத்தின் மூத்த தோழர்கள் கவுரவிக்கப்பட்டார்கள். அவர்களில் மிக மூத்தவர் தோழர் கே.ஆர்.கண்ணன். அகவை நூறில் அடியெடுத்து வைக்க வுள்ள கண்ணன் 23.12.1923ல் தர்மபுரி மாவட்டம், கடத்தூரில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், வெள்ளாளப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார்.
பள்ளிப்பருவத்திலேயே சுதந்திரப்போரில்...
பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களைத் திரட்டி சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். அதற்காக, ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தவரைப் பள்ளி நிர்வாகம் வெளியேற்றியதால் படிப்பு அத்தோடு நின்று விட்டது. இவரது இளம் வயதிலேயே தாயார் இறந்து விட்டார். குடும்பத்தைக் காக்கிற பொறுப்பு இவர் தோளிலும் விழ, தினமும் 50 கி.மீ. தூரம் நடந்தே சென்று கடத்தூரில் தையல் கடையில் வேலை செய்து வந்தார். பின்னர் சொந்தமாக எந்திரம் வாங்கி கிராமத்தில் தையல் கடையைத் துவக்கினார். அதில் கிடைத்த வருமானத்தை வைத்து ஜவுளிக் கடையும் பிறகு உரக் கடையும் துவக்கினார். வியாபாரத்தை விட அவருக்கு சுதந்திரப் போராட்டத்தில்தான் நாட்டம் மிகுந்தது. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டதால் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியுற்ற தோழர் கண்ணன் பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார். பெரியாரின் அறைகூவலை ஏற்று இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். ரயில் நிலைய பெயர்ப்பலகையில் இந்தி எழுத்துகளை அழித்ததற்காகக் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் இருந்தார். தமிழகத்திலும் நாடு தழுவிய அள விலும் இயங்கி வந்த பொதுவுடைமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவராக, 1948ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார்.
தில்லி சிறையில் வாசம்
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட அக்காலத்தில், தலைமறைவாக இயங்கிவந்த தலைவர்களில் ஒருவரான தோழர் எம்.கல்யாண சுந்தரத்தை ரயிலிலிருந்து அழைத்து வந்து தன்னுடைய வீட்டில் பாதுகாப்பாக தங்க வைத்தி ருந்தார். ரயில்வே ஊழியர்கள் பலர் செங்கொடி சங்கத்தில் இருந்ததால் ரயில் நிலையத்திற்கு சிறிது தொலைவு முன்பாகவே சிக்னலை இயக்கி ரயிலை நிறுத்தி தோழர் கல்யாண சுந்தரத்தை இறக்கிவிடுவார்கள். ரயிலிலிருந்து இறங்கியவுடனேயே அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று யார் வீட்டிலாவது தங்க வைப்பார்கள். அவர் தங்கும் வீட்டின் வெளிப்புறம் இரவு முழுதும் காவலாக நின்று மறுநாள் திரும்பவும் அவர் ரயிலில் எங்கே இறங்கி னாரோ அங்கேயே ஏற்றிவிடுவார்கள். அந்தப் வேலையைப் பெரும்பாலும் தோழர் கண்ணன் செய்வார். 1952ஆம் ஆண்டு தில்லியில் வரதட்சணை ஒழிப்பு இயக்கம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கண்ணன் அதற்காக தில்லி சிறையில் 15 நாட்கள் அடைக்கப் பட்டார். சேலம் மேக்னசைட் கனிம தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் தொடங்குவதற்கு உதவுமாறு கட்சி கேட்டுக்கொண்டது. தொழிற்சங்கம் தொடங்கிட உதவிய தோடு அந்தத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கும் அவர் துணை நின்றார். தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றிருக்கிறார்.
கடும் எதிர்ப்புக்கிடையிலும் கட்சிக்கிளைகள் துவக்கம்
1964ஆம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்) உருவானபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டார் கண்ணன். அப்போது கிராமங்களில் செங்கொடி இயக்கக் கிளைகளை உருவாக்குவதை ஊர்ப் பிரமுகர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். எதிர்ப்பை முறியடித்து, தான் வாழ்ந்த கிராமத்தில் மட்டுமல்ல சுற்று வட்டாரப் பகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகளை கண்ணன் துவக்கினார். சில ஆண்டுகள் கட்சியின் ஓமலூர் வட்டச் செயலாளராகவும் செயல்பட்டார். இப்போதும் ஓமலூர் வட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகள் துடிப்போடு செயல்படுவதற்கு அந்நாட்களில் இவர் ஆற்றிய பணிகள் அடித்தளமாக அமைந்தன என்றால் மிகையில்லை. 1964 முதல் 1979 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக பணியாற்றியிருக்கிறார். அக்காலத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கட்சியின் அமைப்பு சார்ந்த சிறப்பு மாநாட்டில் (பிளீனம்) பிரதிநிதியாகக் கலந்து கொண்டிருக்கிறார். இவர் சுரங்கத் தொழிலாளி அல்ல. ஆனால் இவர் வாழும் வெள்ளாளப் பட்டி மேக்னசைட் கனிமச் சுரங்கத்திற்கு அருகில் உள்ளது. அன்று பத்தாயிரத்திற்கும் மேலானோர் மேக்னசைட் நிறுவனங்களில் பணியாற்றினர். மேக்னசைட் கனிமப் பாறைகளை வெட்டி எடுக்கும் தொழிலில் பர்னன் ஸ்டேண்டர்டு, டால்மியா போன்ற பெரிய தனியார் நிறுவனங்கள் கோலோச்சி வந்தன. பொன்குமார் போன்ற சிறிய, நடுத்தர நிறுவனங்களும் இருந்தன. சேலம் மேக்னசட் தொழிலாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்க்கப் போராட்டங்களால் முதலில் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனமும், அதன் பின் பர்னன் ஸ்டேண்டர்டு நிறுவனமும் அரசாங்கத்தால் ஏற்கப்பட்டு பொதுத்துறை நிறுவனங் களாக்கப்பட்டன. அப்போது தொழிலாளர்கள் தங்களது 8 மணி நேர கடின உழைப்புக்கு சொற்பக் கூலியான ரூ.2 மட்டுமே பெற்று வந்தார்கள். தொழிற்சங்கம் நடத்திய போராட்டத்தினால் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பெற்றார்கள். தொழிலாளர்களிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகளும் உருவாக்கப்பட்டன. (இன்று நவீனமயமாக்கலால் தொழிலாளர் எண்ணிக்கை வெகுவாகச் சுருங்கிவிட்டது.)
தீவிரவாதப்போக்கிலிருந்து பலரைத் திருப்பியவர்
அக்காலத்தில் மருத்துவக் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் பயின்ற மாண வர்களிடையே அதிதீவிரவாதப் போக்கு தோன்றி யிருந்தது. அத்தகைய மாணவர்களோடு விவாதித்து பலரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாதைக்குத் திருப்பியவர் தோழர் கண்ணன். வெள்ளாளப்பட்டியில் அரசு கல்விக்கூடம், மருத்துவ மனை, தபால் நிலையம் அமைக்கப்பட வலியுறுத்தி இயக்கங்கள் நடத்தி அக்கோரிக்கைகள் நிறைவேற வைத்தார். உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு அன்றைய கல்வி அமைச்சர் அன்பழகனை சென்னையில் ஊர் மக்களுடன் சென்று சந்தித்து, அக்கோரிக் கையை நிறைவேறச் செய்தார். வெள்ளாளப்பட்டி உட்பட அக்கம் பக்கம் கிராமங்களில் மக்களுக்கு குடிநீர், மின்சாரம் போன்ற வசதிகளுக்காக போராட்டங்களை நடத்தியுள்ளார். மொத்தத்தில் தோழர் கண்ணன் மக்கள் நலன் காக்கும் போராளியாக வாழ்ந்திருக்கிறார். தோழர் கே.ஆர்.கண்ணனின் துணைவியாரான லட்சுமி பாய், கணவரின் செயல்பாடுகள் அனைத்துக்கும் ஆதர வாக இருந்ததாலேயே அவரால் நிறைவான கட்சிப் பணிகளை கவனிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கே.ஆர். கண்ணன் - லட்சுமிபாய் இணையருக்கு ஸ்டாலின், ராமமூர்த்தி, சீனிவாசன், கோதாவரி, ஜோதி, ஜான்சி ராணி, ரேணுகா என ஏழு பிள்ளைகள்.
இவர்களில் மூன்று மகன்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கமாக உள்ளனர். மகள் ஜோதி இறந்து விட்டார். மற்ற மூன்று பேரும் கட்சியின் ஆதரவாளர் களாக உள்ளனர். தோழர் ராமமூர்த்தி சேலம் நகரத்தில் கட்சிக் கிளைச் செயலாளராகவும், சிஐடியு மாவட்ட நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார். ஸ்டாலின் கிராம கட்சி கிளையில் உறுப்பினராக உள்ளார். சீனிவாசன் கிராம கட்சி கிளையில் கிளைச் செயலாளராக உள்ளார். தோழர் கண்ணன் குடும்பம் கட்சிக் குடும்பம். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட 1948இல் தோழர் கண்ணன் கட்சியில் சேர்ந்தார். அந்நாளில்தான் சேலம் சிறை துப்பாக்கிச் சூட்டில் 22 கம்யூனிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். கைதுகள், சிறைவாசங்கள், அடக்குமுறைகள், சோதனைகளைத் தாங்கி சுமார் 85 ஆண்டு காலமாக மக்களுக்கான இயக்கங்களில் ஈடுபட்டு வருகிறார். நூறாண்டை தொடவுள்ள, இப்போதும் கட்சி உறுப்பினராக உள்ள தோழர் கண்ணனின் முன்னுதாரணமான அர்ப்பணிப்பு மிக்க இயக்கப் பணி பாராட்டுக்குரியது - பின்பற்றத்தக்கது.