tamilnadu

img

மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் சாதனை

மதுரை;
நாட்டின் உயரிய பணியாகக் கருதப்படும் இந்திய ஆட்சிப் பணித் தேர்வானசிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 829 பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை சிம்மக்கல் மணி நகரம் பகுதியை சேர்ந்த முருகேசன் - ஆவுடைதேவி தம்பதியினரின் மகள் பூரண சுந்தரி. 5 வயதில் பார்வை நரம்பு சுருங்கியதால் பார்வையை இழந்த பூரண சுந்தரி தன்னம்பிக்கையை சற்றும் இழக்காமல் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவியாக தேர்ச்சி பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். KNPM மதுரை பிள்ளைமார் சங்கம் மேல்நிலைப் பள்ளியில்10ம் வகுப்பில் 471 மதிப்பெண்ணும் 12ம் வகுப்பில் 1092 மதிப்பெண்ணும் பெற்றும் சாதனை படைத்துள்ள இவர் ஆங்கில இளங்கலை இலக்கியம் பயின்றுள்ளார்.

தந்தை மார்க்கெட்டிங் பணி செய்து பல்வேறு பொருளாதார நெருக்கடியில் தன்னை படிக்க வைத்த வறுமையை எண்ணி தான் நன்றாக படித்து அரசு வேலையை பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் கடந்த 2016 முதல் குரூப் தேர்வு,வங்கி போட்டி தேர்வு, குடியுரிமை பணிதேர்வு என 20 க்கும் மேற்பட்ட போட்டி தேர்வுகளை எழுதியுள்ளதாக கூறியுள்ளார்.தான் எழுதிய பல தேர்வுகளில் தோல்வியை தழுவினாலும் தன்னால் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை மட்டும் கைவிடாமல் 4வது முறையாக கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமை பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, செவ்வாயன்று வெளிவந்த தேர்வு முடிவில் 296 இடத்தில் வெற்றியும் பெற்றுள்ளார்.முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வங்கி தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வரும் நிலையில் தற்போது பெற்றுள்ள வெற்றி மாணவி பூரண சுந்தரிக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது.

தான் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இந்த வெற்றி இலக்கை அடைய எண்ணற்ற சவால்களை சந்தித்ததாக கூறும் பூரண சுந்தரியின் வெற்றிக்குப் பின்னால் தனது பெற்றோர் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் உறுதுணையாக இருந்து ஊக்கமளித்து அவர்கள் சொன்ன விஷயங்களை முறையாக ஏற்று படித்ததால் மட்டுமே தன்னால் வெற்றி பெற முடிந்தது என்றார்.போட்டி தேர்விற்காக தான் தனியாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி பயின்ற போது அங்குள்ள நண்பர்கள் கொடுத்த உற்சாகமும் சிலர் செய்த பொருளாதார உதவியும் மறக்க முடியாத ஒன்றாகதன்னுள் உள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறும் பூரண சுந்தரி சிறு வயது முதல் தனது அம்மா சொல்லி தரும் பாடங்களை கற்று வந்த தமக்கு போட்டித் தேர்வுகளிலும் தனது அம்மா கற்றுக் கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் தனது தாய் ஆசிரியராக இருந்து தமக்கு உறுதுணையாக இருந்ததாகவும் கூறினார்.

குடிமைப்பணியில் அரசின் திட்டங் களை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி எத்தனை தடைகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும்பாலமாக இருந்து ஏழை எளிய மக்களுக்கு உதவ உள்ளதாக கூறினார். மேலும் தன்னை போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் தாங்கள் எடுக்கும்முயற்சியை எந்த நிலையிலும் கைவிடாமல் விடாமுயற்சியோடு தொடர்ந்தால் நிச்சயம் முயற்சி கை கொடுக்கும் என்ற நம்பிக்கை விதையை விதைக்கிறார் பூரண சுந்தரி.

சு.வெங்கடேசன் எம்.பி. வாழ்த்து
பூரண சுந்தரிக்கு வாழ்த்து தெரிவித்து, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விடுத்துள்ள செய்தியில், “உடல் குறைபாடுகளை முயற்சிகளால் முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை மெய்ப்பிக்கும் மனிதர்களின் வரிசையில் பூரணசுந்தரியும் இணைந்துள்ளார். அவருக்கு எனது அன்பான வாழ்த்துகள்.அவரின் முயற்சிக்குப்பின்னே அவரது மொத்த குடும்பமும் உள்ளது. அவரைதளராது ஊக்குவித்த அந்த பெற்றோர் களை வணங்குகிறேன். தொலைபேசியில் வாழ்த்துச்சொல்ல பூரணசுந்தரியின் தந்தையை அழைத் தேன். அழைப்பை எடுத்த நிமிடத்திலிருந்து எனது நாவல்களை அந்த குடும்பம் எப்படியெல்லாம் வாசித்திருக்கிறது என்று இடைவிடாமல் சொல்லிமுடித்தார்கள். “தந்தையை வாசிக்கச்சொல்லி காவல்கோட்டம் முழுமையும் அறிந்து கொண்டேன்” என்று பெரும் மகிழ்வோடு பகிர்ந்து கொண்டார் பூரண சுந்தரி.வரலாறு வாசிக்க மட்டுமல்ல.வரலாற்றை உருவாக்கவும் முடியும்.வாழ்த்துகள் பூரண சுந்தரி” என்று தெரிவித்துள்ளார்.

நேரில் வாழ்த்து
மதுரை மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சங்கம் சார்பில் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாவட்டத் தலைவர் பி.கோபி
நாத் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர்.

;