12 ஆண்டுகளாக தொடரும் பண்பாட்டு நிகழ்வு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க திருச்சி மாவட்டக் குழு உறுப்பினர் சரவணன் - கோபிகா தம்பதியினரின் இரட்டை குழந்தைகளின் 2 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, வியாழனன்று மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவிடத்திற்குச் சென்று அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். பட்டுக்கோட்டை கிளைத் தலைவர் முருக சரவணன், கிளை துணைத் தலைவர் கந்தசாமி, பொருளாளர் பக்கிரிசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் திருச்சி மாவட்டக் குழு உறுப்பினர்கள் மாறன், ரமேஷ், கைலாசபுரம் கிளைச் செயலாளர் காளிராஜ் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினர். திருச்சி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க கைலாசபுரம் கிளை சார்பில், கடந்த 12 வருடங்களாக உறுப்பினர்களின் பிறந்தநாள், திருமண நாள் விழாக்களை ஒவ்வொரு தியாகிகளின் நினைவிடத்திற்குச் சென்று கொண்டாடும் பண்பாட்டு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.8 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் ஒருவர் கைது
நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியைச் சேர்ந்தவர் எம். அலெக்ஸ்(32). இவர் மீது ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சுமார் ஒரு வாரகாலமாக, சென்னையிலுள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) காவல்துறையினர் அவரைக் கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஏப்.14-ஆம் தேதி நள்ளிரவு புதுக்கோட்டை மாவட்டம் மேலவிலக்குடி பகுதியில் அலெக்ஸை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 95 கிராம் எடையுள்ள மெத்த பெட்டமைன் என்ற போதைப் பொருள் மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. அந்த போதைப் பொருள் சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அலெக்ஸை புதுக்கோட்டை அத்தியாவசியப் பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைத்தனர். இந்த போதைப் பொருளை அலெக்ஸ் ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.
மருதுபாண்டியர் கல்லூரியில் இரத்த தான முகாம்
தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா. விஜயா, முன்னிலை வகித்தார். மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ப. சுப்பிரமணியன், துணை முதல்வர் ரா. தங்கராஜ், கல்விசார் புலத்தலைவர் ல. மதுகிருத்திகா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தஞ்சாவூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் தலைவர் ஜி. ஸ்ரீதர் முகாமை துவக்கி வைத்துப் பேசினார். தஞ்சை, இராசா மிராசுதார் மருத்துவமனை மருத்துவர் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் தஞ்சாவூர் செயலாளர் விஸ்வநாத், நிர்வாகி கணபதி குமார், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளிடமிருந்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை மருத்துவக்குழுவினர் ரத்தத்தை தானமாகப் பெற்றனர். நிறைவாக, ரோட்ராக்ட் கிளப் மாணவி சிவசங்கரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ரோட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் எல். பிரின்ஸ், கல்லூரி மேலாளர் இரா. கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.