செங்கொடி இயக்கத் தியாகிகள் 75 ஆவது நினைவு தினம்
வாட்டாகுடி இரணியன், ஜாம்பவானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம்
தஞ்சாவூர், மே 5- ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில், கடந்த 1950 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாயிகள், தொழிலாளிகளுக்கான, வர்க்கப் போரில் உயிர் நீத்த செங்கொடி இயக்கத் தியாகிகள் வாட்டாகுடி இரணியன், ஜாம்பவானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகியோரின் 75 ஆவது ஆண்டு நினைவு தினம் திங்கட்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காடு ரயிலடியில் உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மலர் வளையம் வைத்து, வீரத் தியாகிகளுக்கு செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா, வி.தொ.ச ஒன்றியத் தலைவர் தமிழ்ச்செல்வன், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் மகாலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் தி.தனபால் மற்றும் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பட்டுக்கோட்டை கட்சி அலுவலகத்திலிருந்து, பெரிய கடைத்தெரு, மணிக்கூண்டு, அறந்தாங்கி முக்கம், காந்தி சிலை, தலைமை தபால் நிலையம், பேருந்து நிலையம் வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஏராளமானோர் ஊர்வலமாகச் சென்று, கரிக்காடு தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்தி வர்க்க ஒற்றுமை காப்போம், சமத்துவ சமூகம் படைப்போம் என உறுதிமொழி ஏற்றனர். மதுக்கூர் பொதுவுடமைப் போராளி, தஞ்சை தியாகி வாட்டாகுடி இரணியன் நினைவு நாளில், மதுக்கூர் ஒன்றியம் தியாகி இரணியன் நகரிலும், இரணியன் ஸ்தூபியிலும், செங்கொடி ஏற்றி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் வை. சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூத்த தலைவர் ஆர்.சி. பழனிவேலு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். கலைச்செல்வி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம். அய்யநாதன், எல். முருகவேல், தெ. பஞ்சாட்சரம், வாட்டாகுடி வடக்கு கிளைச் செயலாளர் ஏ.எம். வேதாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.