நோயாளிகளைக் காப்பாற்றிய 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
உயர்தர சிகிச்சை அளிக்க உறவினர்கள் கோரிக்கை
தஞ்சாவூர், ஏப்.27- தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, அங்கு பணியாற்றியவர்கள் உயிரை பணயம் வைத்து சிகிச்சையில் இருந்த பெண்களையும், குழந்தைகளையும் காப்பாற்றியனர். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டும், மயக்கமடைந்தும் பாதிக்கப்பட்ட 40 பேர் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்.24 ஆம் தேதி மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டடத்தில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு சிகிச்சையில் இருந்த பெண்கள், குழந்தைகளை உடனடியாக பாதுகாப்பாக மற்றொரு கட்டடத்துக்கு அங்கிருந்த பணியாளர்கள் மாற்றினர். இதனால், அங்கு பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும் அங்கு பணியில் இருந்த தினக்கூலி பணியாளர்களான பாதுகாவலர்கள், உதவியாளர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள் என பலரும் அசுர வேகத்தில் செயல்பட்டு, தங்களது உயிரை பணயம் வைத்து, நோயாளிகளைக் காப்பாற்றினர். பின்னர் ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், தீ விபத்தின்போது துரிதமாக செயல்பட்டு, பெரும் விபத்தைத் தடுத்த, தினக்கூலி பணியாளர்களைப் பாராட்டினார். அப்போது மூச்சுத் திணறலால் இருவர் மட்டுமே பாதிக்கப்பட்டனர் என ஆட்சியர் தெரிவித்தார். ஆனால், தீ விபத்தின் போது பெண்களையும், குழந்தைகளையும் காப்பாற்றிய 40 பேர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 40 பேருக்கும் போதிய சிகிச்சை அளிக்கவில்லை. தினக்கூலி பணியாளர்கள், பணி பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால், அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என சிகிச்சை பெறுவோரின் உறவினர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, சிகிச்சை பெறும் பெண் ஒருவர் கூறுகையில், தீ விபத்தின்போது நாங்கள் எங்களது உயிரை் கூட பொருட்படுத்தாமல் துரிதமாக செயல்பட்டு, குழந்தை பெற்ற பெண்களை, வீல் சேர் மூலம் முதல் தளத்திலிருந்து கீழே மரத்தடிக்குக் கொண்டு வந்தோம். நாங்கள் அப்படி வரும்போது, புகையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்ததால் நாங்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகிறோம். நாங்கள் சிகிச்சைக்காக சேரவில்லை. அரசிடமிருந்து ஏதாவது நிதி கிடைக்கும் என சிகிச்சைக்கு சேர்ந்துள்ளதாக கூறி, எங்களை பரிசோதிக்கும் மருத்துவர்கள் எங்களது மனதை புண்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். பல உயிர்களை காப்பாற்றிய எங்களுக்கு கிடைத்த பரிசு இதுதான். அதே போல் மாவட்ட ஆட்சியர், இரண்டு பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டனர் என கூறினார். ஆனால் 40 பேர் சிகிச்சையில் இருப்பதை வெளி உலகுக்கு சொல்ல மருத்துவமனை நிர்வாகத்தினர் மறுத்து விட்டனர்” என்றார். இந்நிலையில், தங்களுக்கு முழுமையாக சிகிச்சை அளித்து, உடல்நலம் சீரான பிறகே, தங்களை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நோயாளிகளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி. கண்ணன் சந்தித்து, ஆறுதல் கூறி கட்சியின் சார்பில் ஆதரவை தெரிவித்தார். சிகிச்சையில் இருப்பவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் தயவு தாட்சண்யம் இன்றி டிஸ்சார்ஜ் செய்த நடவடிக்கை தவறான முன்னுதாரணம் ஆகும்” என்றார். இதுகுறித்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிலைய அலுவலர் ஏ.செல்வம் கூறுகையில், தீ விபத்தில் 40 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு புகையின் தாக்கம் அதிகமாக உள்ளதா என நுரையீரலில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தற்போது நலமாக உள்ளனர். இந்த பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் அனைவரும் வீடுகளுக்கும், பணிக்கும் செல்லலாம்” என்றார்.