தஞ்சாவூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தஞ்சாவூர், மே 15- தஞ்சையில் 2 இடங்களில், வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
ரேஷன் அரிசி பதுக்கல்
தஞ்சை மாநகரில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வீடுகளில் பதுக்கி வைத்து, மீன்பண்ணை மற்றும் மாட்டுத் தீவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் தஞ்சை காவல் ஆய்வாளர் ஜெகதீசன், உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
4 டன் பறிமுதல்
அதன்படி, தஞ்சை விளார் சாலையில் உள்ள சிந்துநகரில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 கிலோ எடை கொண்ட 76 மூட்டைகளை உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். அதில் 3 ஆயிரத்து 40 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இது தொடர்பாக தஞ்சை கீழவாசலை சேர்ந்த மணிவண்ணன் (38) என்பவரை கைது செய்தனர். மேலும், தஞ்சை டவுன்கரம்பையில் உள்ள எஸ்.டி.எம். நகரில் உள்ள ஒரு வீட்டில், ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்று சோதனை செய்தபோது 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் 1050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
வாலிபர் கைது
அவற்றை பறிமுதல் செய்த உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர், இது தொடர்பாக தஞ்சை கீழவாசல் பூமால் ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்த ரெங்கராஜ் மகன் பிரசாந்த் என்ற துரைராஜ் (23) என்பவரை கைது செய்தனர். இவர் டவுன்கரம்பை, கரந்தை, பள்ளியக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி மீன்பண்ணை மற்றும் கால்நடைகள் தீவனத்துக்கு அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மணிவண்ணன், பிரசாந்த் என்ற துரைராஜ் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.