சென்னை, பிப்.7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2-6 தேதிகளில் மதுரையில் நடைபெற உள்ளது. இதனையொட்டி தென் சென்னை மாவட்டத்தில் வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் வியாழனன்று (பிப்.6) சைதாப்பேட்டை எஸ்பிஎஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வரவேற்புக்குழுத் தலைவராக க.பீம்ராவ், செயலாளராக ஆர்.வேல்முருகன், பொருளாளராக எஸ்.வெள்ளைச்சாமி ஆகியோரை உள்ளடக்கி 360 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. பகுதி குழுக்கள், இடைக் குழுக்கள், சிறப்புக் கிளைகள் சார்பில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் 13.46 லட்சம் ரூபாய் முதல் கட்டமாக வழங்கப்பட்டது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, செயற்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், எஸ்.வெள்ளைச்சாமி, ம.சித்ரகலா, சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேசன் உள்ளிட்டோரும் பேசினர்.