மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன்எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவர் தனது அறிக்கையில் கூறியதாவது
மதுரை நேருநகரில் நேற்றிரவு கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட பொழுது
விசவாயு தாக்கி சரவணன்(32)சிவக்குமார்(45) லட்சுமணன்(31) ஆகிய 3 மூன்று இளைஞர்கள் பலியான சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது.
இரவு நேரத்தில் அப்பணியில் அவர்களை ஈடுபடுத்தியவர்கள் குறித்தும், விபத்துக்குப் பிறகு நிலை கையாண்ட விதம் குறித்தும், ஒப்பந்த தொழிலாளிகள் நடத்தப்படும் விதம் குறித்தும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசினை கோருகிறேன்.
பலியான இளைஞர்களின் குடும்பத்திற்கு உச்சபட்சமான இழப்பீடு நிவாரணத்தினையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியினையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கழிவுகளை மனிதனே அகற்றும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு முழுவதும் இயந்திரமயப் படுத்தப்படும் முயற்சிக்கு தமிழக அரசு அனைத்துவகையிலும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் ஒப்பந்த தொழிலாளிகளை நடத்தும் விதம் குறித்து அரசு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.