tamilnadu

img

வரலாற்றில் மிக வெப்பமான ஆண்டாக 2024 மாறும்

2024 ஆம் ஆண்டில் சில மாதங்களில் வரலாறு காணாத அளவில் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ள நிலையில் இந்த ஆண்டு, வரலாற்றில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக இடம் பெறக்கூடும் என உலக வானிலை அமைப்பின் (WMO) ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. காப் -29 காலநிலை மாற்றம் தொடர்பான  மாநாட்டின் அமர்வின் போது இந்த பகுப்பாய்வை உலக வானிலை அமைப்பு வழங்கியுள்ளது.   அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது, 2024 ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் புவி மேற்பரப்பில் உள்ள உலகளாவிய சராசரி காற்றின் வெப்பநிலை தொழில் புரட்சிக்கு முந்தைய நிலைகளை விட 1.54 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது பெருமளவில்  எல் நினோ நிகழ்வுடன் தொடர்புடைய வெப்பமயமாதல் நிகழ்வுடன் தொடர்புடையது.   2015 முதல் 2024 வரையிலான ஆண்டுகளில்  இதுவரை பதிவு செய்யப்படாத வெப்ப அளவுகள் 2024 இல் பதிவாகியுள்ளது. இது வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகம் என பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பனிப்பாறைகள்  உருகிவருவது, கடல் நீர் மட்டத்தின் உயர்வு, கடல் வெப்பமடைதல் ஆகிய வை கட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக இந்த அளவு அதிகரித்தபடியே உள்ளது.  பாரிஸ் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட  ஒப்பந்தத்தின் படி ஒவ்வொரு நாடுகளும் தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டனவா என்பது குறித்தும்  இலக்குகளை அடைவதில் அவை சந்தித்த தோல்விகள் குறித்தும்  மாதாந்திர அல்லது வருடாந்திர தரவுகள் எதையும் எந்த ஒரு நாடும் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு முறையும் கூடுதலாக பதிவாகும் புவி வெப்பம் குறிப்பிடத்தக்க மோசமான  விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம் என்று  உலக வானிலை அமைப்பின்  பொதுச்செயலாளர் செலஸ்டி சாலோ வலியுறுத்தியுள்ளார்.