tamilnadu

img

பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்க மாபெரும் மக்கள் இயக்கத்தை உருவாக்குவோம்!

நம் நாட்டினுடைய 75ஆவது சுதந்திர தின விழா நடைபெறவிருக்கும் இந்தத் தருணத்தில் தியாகிகள் அனைவருக்கும் எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கும் என்னுடைய வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.  இந்த சுதந்திர தினத்தை கொண்டாடக்கூடிய நேரத்தில் நம்முடைய சுதந்திரத்தை பாதுகாத்து பலப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் இந்திய மக்கள் அனைவரும் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

நம்முடைய நாட்டினுடைய சுதந்திரத்தை பலப்படுத்துவதற்கு நாட்டில் வாழக்கூடிய கோடானுகோடி ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டியது அவசியமான ஒன்று. அவர்களுக்கு நிரந்தரமான நியாயமான வேலை, நியாயமான ஊதியம், ஜனநாயக உரிமைகளுக்காக நாம் மக்களை ஒன்றுதிரட்டி போராட வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்றுதிரட்டி பிரம்மாண்டமான மக்கள் இயக்கம் இந்த நாட்டில் நடைபெற வேண்டும். இத்தகைய போராட்டத்தில் சாதி, மத வித்தியாசங்களை மறந்து ஒன்று சேர்ந்து தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட அனைத்து சமூகக் கொடுமைகளையும் அறவே அகற்ற நாம் போராட வேண்டும். மக்களுடைய ஒற்றுமையை பலப்படுத்தினால்தான் நாம் இந்தப் போராட்டத்தில் வெற்றிபெற முடியும் என்பதை அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

மக்களுடைய நல்வாழ்வுக்கான போராட்டத்தில் கோடிக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களின் பங்கு மகத்தானது. இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள், இளைஞர்களை சாதி மத வித்தியாசமின்றி ஒன்றுதிரட்டி இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மாபெரும் இயக்கத்தினை நாம் உருவாக்க வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். சுருக்கமாகச் சொல்வதானால் இந்திய நாட்டின் எதிர்காலமே கோடானுகோடி மாணவர்கள், இளைஞர்களின் மகத்தான இயக்கத்தில்தான் அடங்கியுள்ளது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  இந்தியாவின் சுதந்திரத்தை பலப்படுத்துவதற்கும், மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் இன்றைக்கு இந்த நாட்டில் உள்ள வலதுசாரி பிற்போக்கு வகுப்புவாத சக்திகளை தனிமைப்படுத்தி முறியடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு அனைத்துப் பகுதி மக்களும் ஒன்று சேர்ந்து ஆங்காங்கே மக்கள் போராட்டங்களை நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.