நாட்கள் நகர்ந்தாலும் அந்த மகத்தான தலைவரின் நினைவுகள் நகர மறுக்கிறது. குமரி முதல் இமயம் வரை இந்தியாவின் எட்டுத் திக்கிலும் லட்சக்கணக்கான தோழர்கள் அவரது நினைவுகளிலிருந்து இன்னும் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் புகழஞ்சலிக் கூட்டங்கள் உணர்ச்சிப்பெருக்குடன், கண்களில் நீர் ததும்பியவாறு, செவ்வணக்க முழக்கங்களுடன் அவரது புகழ்பாடிக் கொண்டிருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் மட்டுமல்ல, தேசத்தின் அனைத்துக் கட்சிகளது அனைத்துத் தலைவர்களும் ஒரே விதமான குரலில் கூறுகிறார்கள்... “சீத்தாராம் யெச்சூரி இந்திய தேசத்தின் ஆன்மா”. அநேகமாக ஓர் அரசியல் தலைவரின் மறைவுக்கு ஒரு ஊடகம் கூட பாக்கியில்லாமல், நாட்டில் உள்ள அச்சு, டிஜிட்டல், சமூக ஊடகங்கள் அனைத்திலுமாக நூற்றுக்கணக் கான கட்டுரைகள், இரங்கல் குறிப்புகள், கடந்த இரண்டு வாரங்களில் எழுதப்பட்டிருக்கிறது என்றால் அது சீத்தாராம் யெச்சூரிக்கு மட்டும்தான்.
ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் ஒட்டுமொத்த தேசத்தின் நம்பிக்கைக்கு உரியவராக, பேரன்புக் குரியவராக இருந்திருக்கிறார், செயல்பட்டிருக் கிறார் என்பது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய அரசியல் அரங்கில் ஓர் அசைக்க முடியாத மிகப்பெரிய நம்பிக்கை ஊற்று என்பதன் அடையாளமே. ஒட்டுமொத்த நாட்டின் உணர்வுகளை முழு மையாக பிரதிபலித்தது செப்டம்பர் 28 அன்று தலைநகர் தில்லியில் உள்ள தல்கொத்ரா ஸ்டேடி யத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான புகழஞ்சலிக் கூட்டம். செவ்வணக்கம் தோழர் சீத்தாராம் யெச்சூரி என்று ஆங்கிலத்தில் மிகப்பெரிதாக எழுதப் பட்டிருந்த பதாகையில் இணைக்கப்பட்டிருந்த திரையில் சீத்தாராம் யெச்சூரியின் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் ஓடிக்கொண்டிருக்க, தேசத்தின் முக்கியத் தலைவர்கள் எல்லோரும் தங்களது நினைவலைகளை உணர்ச்சிப் பெருக்குடன் வெளிப்படுத்த, மொத்த அரங்க மும் அவருடனான தங்களது நினைவுகளை அசைபோட்டபடி கவனித்துக் கொண்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருக்கு நடைபெற்ற இந்த புகழஞ்சலிக் கூட்டத்தில் கட்சியின் ஒட்டுமொத்த அரசியல் தலைமைக்குழுவும், மத்தியக்குழுவும் பங்கேற்றி ருந்தது. மத்தியக்குழு கூட்டத்திற்காக அவர் குறித்திருந்த தேதி இது. அந்தத் தேதியே அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் தேதியாக மாறியது, ஒட்டுமொத்த கட்சியையும் துயரத்தின் எல்லைக்கே கொண்டு சென்றிருந்தது. அந்த உணர்வலையை அப்படியே தமது தலைமை உரையில் வெளிப்படுத்தினார் பிரகாஷ் காரத்.
அரங்கத்திற்கு உள்ளே நுழையும் போது தோழர் சீத்தாராம் யெச்சூரியின் வாழ்க்கை வர லாற்றை சித்தரிக்கும் வகையில் அவரது படங்கள் கண்காட்சி போல வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு படமும், அங்கு வந்திருந்த ஒவ்வொரு வரையும் நெடுநேரம் உற்றுநோக்கச் செய்தது. அதில் ஒரு படம், சின்னஞ்சிறு குழந்தையாக, பள்ளிச் சிறுவனாக, டென்னிஸ் மட்டையை கையில் ஏந்தியவாறு சிரிக்கும் சீத்தாராம் எல்லோரையும் ஈர்த்தார். ஜனம் மற்றும் பார்ச்சம் ஆகிய கலைக்குழுக் களின் தோழர்கள் தாங்கள் மிகவும் நேசித்த தலைவருக்கு செங்கீதத்தை இசைத்தனர். தில்லியில் இவர்கள் எப்போதும் சீத்தாராம் யெச்சூ ரியோடு இரண்டறக் கலந்தே இருப்பார்கள். கண்களில் நீர் ததும்ப தமது உற்ற தோழனுக்கு அரசியல் தலைமைக்குழு சார்பில் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார் பிருந்தா காரத். மொத்த கட்சியும் உங்களை இழந்து தவிக்கிறது தோழர் சீத்தாராம் என்று அவர் கூறிய போது அரங்கமே கண்ணீர் சிந்தியது. இந்திய வரலாறு மிக முக்கிய தருணத்தில் தனது அற்புதமான புதல்வனை இழந்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டது அர்த்தச் செறிவுள்ள வார்த்தைகள். சீத்தாராம் யெச்சூரியுடனான 50 ஆண்டுகால உறவை, மிக நெருக்கமான தோழமையை வார்த்தைகளில் வடித்தார் பிரகாஷ் காரத். சோசலிச இந்தியாவை கனவு மட்டும் காண வில்லை; வாழ்நாள் முழுவதும் அதற்கே அர்ப் பணித்தார் சீத்தாராம்; அவரது கனவை ஒட்டு மொத்த இந்தியப் பாட்டாளி வர்க்கமும் முன்னெடு த்துச் செல்லும் என்று நம்பிக்கை விதைத்தார் பிரகாஷ். ஜம்மு-காஷ்மீர் மக்களின் உரிமைக்குரலை இடைவிடாமல் எழுப்பி, அம்மாநிலத்தின் அரசி யல் இயக்கங்களோடு மிக நெருக்கமான உற வை, மரியாதையை ஏற்படுத்திக் கொண்டவர் சீத்தாராம் என்பதை தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் டாக்டர் பரூக் அப்துல்லா தமது இரங்கல் உரையில் சுட்டிக்காட்டினார்.
“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே” என்ற மகாகவி பாரதியின் வரி களுக்கு மிகவும் பொருத்தமானவர் தோழர் சீத்தாராம். அவர் எதற்குமே அஞ்சி நான் கண்ட தில்லை. நாடாளுமன்றத்தில் புதிய உறுப்பினர் கள், இளம் உறுப்பினர்கள், எல்லோரையும் சமமாக நடத்திய தலைவர், என் தந்தைக்கு மிக நெருங்கிய நண்பர். மத்தியில் கூட்டணி அரசு அமையும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அவரது சாதுர்யத்தினால் மட்டுமே அது சாத்தியமானது. கோயம்புத்தூரில் செம்மொழி மாநாடு நடைபெற்ற போது சீத்தாராம் யெச்சூரியை எப்படியாவது அழைத்து வாருங்கள் என்று தனி ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்து எனது தந்தை வரவழைத்தார். அம்மாநாட்டில் அவர் ஆற்றிய உரை என் றென்றும் மறக்க முடியாதது. வாழ்நாள் முழு வதும் உழைக்கும் மக்களுக்காக போராடிய போராளி; ஆனால் அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாகவும், இனிமையாகவும் இருக்கும்” என்று தமது அனுபவங்களை எடுத்துரைத்தார் திமுக நாடாளுமன்ற தலைவர் கனிமொழி கருணாநிதி. சீத்தாராம் யெச்சூரியின் மிக நெருங்கிய தோழர் து.ராஜா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர். பல்லாண்டு காலம் தில்லி யில் இரு இடதுசாரி தலைவர்களும் இணைந்து பணியாற்றியதை, எல்லாப் பிரச்சனைகளிலும் கலந்தாலோசித்துக் கொண்டதை, போராட்டக் களமே அவரது வாழ்வாக இருந்ததை விவ ரித்தார். அப்போது ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டினார்:
“ தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்”.
ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்பது அவர்கள் விட்டுச்சென்ற விழுமியங்கள் மூலமே தெரியும் என்பது போல, நாம் உயர்த்திப் பிடித்துச் செல்ல மகத்தான போராட்டப் பாதையை விட்டுச் சென்றுள்ளார் தோழர் சீத்தாராம் யெச்சூரி என்றார் து.ராஜா. இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் சீத்தாராம் யெச்சூரியின் பங்கு எத்தனை மகத்தானது என்பதை விவரித்தார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை வடிவமைத்த சிற்பிகளில் ஒருவர் சீத்தாராம் என்றும் அவர் குறிப்பிட்டார். மகத்தான மார்க்சிய அறிஞரை எமது கட்சி இழந்து நிற்கிறது என்று உணர்ச்சி ததும்ப வெளிப் படுத்தினார் கேரள முதல்வரும், அரசியல் தலை மைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு மட்டுமல்ல, சர்வதேச கம்யூனிச இயக்கத்திற்கும் பேரிழப்பு யெச்சூரியின் மறைவு என்றும் அவர் மிகப்பொருத்தமாகக் குறிப்பிட்டார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் மனோஜ் ஜா, தோழர் சீத்தாராம் விட்டுச்சென்ற இடத்தை எவராலும் நிரப்ப முடியாது; கம்யூனிஸ்ட்டு களுக்கு மட்டுமல்ல, அரசியலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்கும் வழிகாட்டி சீத்தாராம் எனக் குறிப்பிட்டார்.
சமாஜ்வாதி கட்சி பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ், சீத்தாராம் பாதையில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் வலுவாக நடைபோடுவதே அவருக்கு செலுத்தும் சிறந்த அஞ்சலி என்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்) தலைவர் சுப்ரியா சூலே, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தோழர் சீத்தாராம் ஆற்றிய பணிகளை வேறு எவராலும் ஆற்ற இயலாது என்றார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில், குறிப்பாக விவசாயிகள் போராட்டத்தில் அவரது வழிகாட்டுதல் மகத்தானது என்றும் நினைவு கூர்ந்தார். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒரு வரும் தில்லி மாநில அமைச்சருமான கோபால் ராய், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட போது அவருக்காக முதல் குரல் எழுப்பிய மகத்தான தலைவர் சீத்தாராம் என்றும், இந்திய அரசியலில் என்றென்றும் ஒரு வழிகாட்டியாக சீத்தாராம் திகழ்வார் என்றும் குறிப்பிட்டார். சிபிஐ(எம்எல்) லிபரேசன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, தமது உற்ற தோழருக்கு செவ்வணக்கங்களை தெரிவித்தார். வேகமாக மாறிக் கொண்டிருக்கும் சூழ்நிலைமைகளை உடனடியாகவும் மிகத் துல்லியமாக உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்றவாறு துல்லி யமான பாதைகளையும் புதிய போராட்டங்களை யும் உருவாக்கியவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி என்று அவர் குறிப்பிட்டார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நாடாளு மன்ற உறுப்பினர் மஹூவா மஜி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் இதயப்பூர்வ மான அஞ்சலியை வெளிப்படுத்தினார். இந்தியாவில் மதவெறி அரசியலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஓரணியில் திரட்டிய அரசியல் சிற்பி தோழர் சீத்தாராம் யெச்சூரி என்று புகழாரம் சூட்டினார். புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் மனோஜ் பட்டாச்சார்யா, நிரப்ப முடியாத இடம் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் இடம்; இடதுசாரி ஒற்றுமையை வாழ்நாள் முழுவதிலும் உயர்த்திப் பிடித்தவர் அவர் என்று குறிப்பிட்டார். “எனது தோழன், எனது நண்பன், இன்னும் சொல்லப்போனால் எனது மிக மிக அறிவுகூர்மையான மாணவன்” என்று தனது நினைவலைகளை கலங்கிய கண்களோடு வெளிப்படுத்தினார் பொருளாதார அறிஞர் பேரா. பிரபாத் பட்நாயக். பள்ளிப் படிப்பில் சீத்தாராம் யெச்சூரி, இந்தியாவிலேயே முதல் மாணவர்; அவர் நினைத்திருந்தால் நாட்டின் மிக மிகப் பெரிய ஆராய்ச்சிக் கல்வி நிறுவனத்திற்கு சென்றிருக்க முடியும்; ஆனால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்தார்; அந்தப் பல்கலைக்கழகத்தையே ஒரு போராட்டக் குணம் கொண்ட அறிவுச்சுரங்கமாக மாற்றி அமைத்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. ஒரு நவீன கம்யூனிஸ்ட் அவர் என்றும் பேரா. பிரபாத் பட்நாயக் புகழாரம் சூட்டினார். தி இந்து நாளேட்டின் முன்னாள் முதன்மை ஆசிரியரும், நாட்டின் மூத்த பத்திரிகையாள ருமான என்.ராம், ஊடக சுதந்திரத்தின் மாபெரும் போராளி சீத்தாராம் எனக் குறிப்பிட்டார். எப்போதுமே பத்திரிகையாளர்களின் நெருங்கிய தோழர்; பத்திரிகையாளர்களுக்காக பேசியவர் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் ஜி.தேவராஜன், இடதுசாரி இயக்கத்தின் ஒவ்வொரு தோழருக்கும் கிடைக்கப் பெற்ற ஒரு மகத்தான அரசியல் ஆசான் தோழர் யெச்சூரி என குறிப்பிட்டார். அரசியல் என்பது சாத்தியமானவைகளின் கலை என்பது மட்டு மல்ல; சாத்தியமில்லாததையும் சாத்தியமாக்கும் கலை என்பதை நிரூபித்துக் காட்டியவர் தோழர் யெச்சூரி எனவும் அவர் குறிப்பிட்டார். சமூகப் போராளி டீஸ்டா செதல்வாத், எப்போதுமே சீத்தாராம் யெச்சூரியோடு மிக நெருக்கமாக ஆலோசித்துக் கொண்டே இருந்தவர். 2002இல் குஜராத்தில் மிக கொடூர மான இனப் படுகொலை அரங்கேறிய போது பாதிக்கப்பட்ட மக்களை காண்பதற்காக முதலில் ஓடிவந்த நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சீத்தா ராம் யெச்சூரி என்பதை நினைவு கூர்ந்தார் டீஸ்டா. தேசமே கவனித்துக் கொண்டிருந்த இந்த நிகழ்வில் எல்லோரையும் ஈர்த்தது மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவரு மான ராகுல் காந்தியின் பேச்சு. சீத்தாராம் யெச்சூரிக்கும் தமக்கும் இடையிலான நட்பு எத்தனை மகத்தானது என்பதை அவரது வார்த்தைகள் வெளிப்படுத்தின. “சீத்தாராம் யெச்சூரி தனது சொந்த சித்தாந்தத்தில் உறுதி யாக எப்போதும் நிற்பார்; அதேவேளை எதிர்ப் பக்கத்தில் இருப்பவரின் எண்ணங்களையும் உணர்வுகளையும் அங்கீகரித்தார். அவருடன் பேசும் போது எல்லா விசயங்களிலும் ஒரு தெளிவான புரிதல் கிடைக்கும்.
இந்திய ஒருமைப்பாட்டின் முக்கிய சிற்பிகளில் ஒருவர் சீத்தாராம் யெச்சூரி. பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒரு பாலமாக நின்றார். நான் எனது அரசியல் வாழ்க்கையை துவங்கிய நாள் முதல் சீத்தாராம் யெச்சூரியை கவனிக்கிறேன். இந்திய அரசியலில் எத்தனை மகத்தான மனிதர் இவர்... எந்த மறைமுகத் திட்டமும் இல்லாதவர். இந்தியா கூட்டணி ஆகட்டும், அதற்கு முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆகட்டும் இவற்றை வடிவமைப்பதில் ஏற்பட்ட தடங்கல்களையெல்லாம் புன்முறு வலோடு கையாண்ட விதம் வேறு எவருக்கும் வராது. கோபம், ஆத்திரம், அராஜகம் நிறைந்த ஏராளமான அரசியல் வாதிகள் மத்தியில் இப்படிப்பட்ட ஒரு அற்புதமான நண்பரை நான் பெற்றது பாக்கியமே. என்னைவிட எனது தாயார்தான் அவருக்கு மிக நெருக்கமான நண்பர். சில நாட்களுக்கு முன்பு எனது தாயாரை சந்திக்க எங்கள் இல்லத் திற்கு வந்திருந்தார். பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்கு இருமல் அதிகமாக இருந்த தை கவனித்தேன். ‘யெச்சூரி ஜி, நீங்கள் உட னடியாக மருத்துவமனைக்கு செல்லவேண்டும்’ என்றேன். ஆனால் அவர் அதை சிரித்துக் கொண்டே கடக்க முயன்றார். அவர் திரும்பிச் சென்றதும், நான் மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பி னேன்... ‘கார் நேராக மருத்துவமனைக்கு போக ட்டும்’ என்று. அவர் அப்போதும் தயங்கினார்.
பின்னர் மருத்துவமனைக்கு செல்ல ஒப்புக்கொண்டார். அங்கிருந்து நலம்பெற்று திரும்புவார் என்று நம்பினேன். ஆனால் அந்த நம்பிக்கை நிறைவேறவில்லை. யெச்சூரி விசயத்தில் இரண்டு முறை நான் வா ர்த்தைகள் வராமல் தவித்திருக்கிறேன். அவரது மகன் மறைந்த போது ஆறுதல் சொல்வதற்காக தொலைபேசியில் அழைத்தேன். எங்கள் இரு வருக்குமே வார்த்தைகள் வரவில்லை. என்ன சொல்லி ஆறுதல் கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை. என்னிடம் எப்படி ஆறுதல் பெறுவது என்று அவருக்குத் தெரியவில்லை. இருவரும் மௌனமாகவே இருந்தோம். அந்த தருணம் மிகவும் கனமானது. துயரமானது. இப்போது அவர் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் செய்தி எழுத முயன்ற போது வார்த்தைகள் வராமல் தவித்தேன். பலமுறை மாற்றி எழுதினேன். கடைசியாக எழுதினேன் : “யெச்சூரி ஜி எப்போதும் எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாத போராளி. அவரது நெஞ்சமெல்லாம் இந்திய தேசத்தின் மக்கள் மட்டுமே நிறைந்திருந்தார்கள்”.
- எஸ்.பி.ராஜேந்திரன்